அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, March 17, 2011

18 ஜப்பான் தரும் படிப்பினைகள்

அமெரிக்காவின் அணுகுண்டுகள், வெள்ளம், சூறாவளி, எரிமலை, நிலநடுக்கம், சுனாமி என தொடர்ந்து பல சோதனைகளை ஜப்பானியர் காண்பதும், அவர்கள் தொடர்ந்து அதிலிருந்து எல்லாம் மீண்டு வருவதும், அவர்களின் முயற்சியையும் முதிர்ச்சியையும் உழைப்பையும் உலகிற்கு நன்கு எடுத்துரைக்கிறது. பொதுவாக ஜப்பானியர், சோதனைகளிலும் மனம் தளராமால், எதிர்நீச்சலிட்டு முன்னேறுவதெப்படி என்று உலக மக்களுக்கு படிப்பினை பெறுவதற்கான நல்ல முன்னுதாரணம். இனி, ஃபீனிக்ஸ் பறவைக்கு யாரும் உதாரணம் கேட்டால் ஜப்பானியர்கள்தான் எனலாம்....! 



ஆனால், சமீபத்தில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு துயரத்திலிருக்கும் நம் ஜப்பானிய சகோதர்களுக்கு மேலும் அதிக துயரமாக இரு அணுஉலைகள் வெடித்து அதனால் ஏற்பட்ட அணுக்கதிர்வீச்சு கசிவால் மற்ற அனைத்து இயற்கை சோதனைகளை விட பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். 

அவர்களுக்கு பெருங்கவலையுடன் நம்முடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வோம். அவர்களும் அவர்கள் நிலை கண்டு நாமும் துயரத்தில் இருக்கும் இந்நேரத்தில், ஜப்பானில் ஏற்பட்ட அனைத்து சோதனைகளையும் அவர்களுக்கு இலகுவாக்கி, அவர்கள் நலன் பெறவும், அவர்களின் மன அமைதிக்காகவும், அதிலிருந்து மீண்டு பழையபடி அவர்கள் இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் சகோதரர்களே..!


மேலும், இயன்றவர்கள் Islamic Relief USA என்ற அமைப்பு நடத்தும் இதுபோன்ற Islamic Relief is responding. Donate today for Japanese வழியில் தேவை நோக்கி இருக்கும் ஜப்பானியர்களுக்கு பொருளாதார ரீதியிலும் உதவி புரியலாம். (உதவி செய்ய முற்படுவோர் அதற்கு முன் அந்த அமைப்பு பற்றி முதலில் சரியான தகவலை அறிந்து கொள்ளுங்கள்) 

இந்த  நேரத்தில் நாம் சில படிப்பினைகளை பெற வேண்டியுள்ளது. அவை என்ன..? 

படிப்பினை-1



பொதுவாக இவ்வுலகில், 'இதுபோன்ற இயற்கை சீற்றங்களுக்கு முன்னாள் மனித சக்தி என்று ஒன்றுமே இல்லை' என்று இவை எல்லாம் ஏற்படும்போதுதான் மனிதன் உணருகிறான். இவற்றை எல்லாம் தம்மால் தடுத்துவிட முடியும் என எவ்வளவோ அறிவியல் மூலம் தான் முன்னேறி விட்டதாக தற்பெருமை கொண்டு இருக்கும் மனிதன் இதுபோன்று இயற்கைக்கு முன்னால் தோல்வி பெற்று நிற்கும்போதுதான் தன் மனித சக்தியின் இயலாமை குறித்தே அறிகிறான். 

படிப்பினை-2



இதுபோன்ற ஒரு இயற்கை சீற்றம் அறிவியலில் முன்னேறாத ஏழை ஆப்ரிக்க நாடுகளில் வந்து இருந்தால், ஜப்பானில் ஏற்பட்டதைவிட பலமடங்கு நாசம் ஏற்பட்டு இருந்திருக்கும். ஆனால், ஜப்பானில் வந்ததனால், 'இவ்வளவு அறிவியல் முன்னேற்றம் கண்டும், இவ்வளவு நவீன தொழில்நுட்பம் கொண்டும் இயற்கை சீற்றத்துக்கு முன்னால் மனிதன் தோற்கிறான்' என்பதே பல மனிதர்களின் அறிவியல் தற்பெருமையை தவிடு பொடியாக்கி உள்ளது. 


படிப்பினை-3


முழு ஜப்பானும் அமைந்து இருப்பது நிலநடுக்கம் அதிகம் வரக்கூடிய Seismic Zones VII, VIII & IX --களில்..! 'அடிக்கடி நிலநடுக்கம் வரும் இதுபோன்ற நாட்டில் அணு உலைகள் பல திறப்பது சரியா' என்று ஏன் யாரும் யோசிக்கவில்லை.  அப்படியே திறந்தாலும், அவை 7 ரிக்டார் அளவுக்கு மேல் தாங்காது என்று IAEA எச்சரித்தும் அதை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இப்போது 8.9 ரிக்டார்  நிலநடுக்கம் வந்தவுடன் அணு உலைகள் வெடிக்கின்றன. ஆட்சியாளர்களிடம் இவ்விஷயத்தில் என்றும் அசட்டை கூடாது.

படிப்பினை-4


 9/11-ல் அமெரிக்காவில்  இரண்டு கட்டிடங்கள் தாக்கப்பட்டதும் அது யாரோ (இன்றுவரை அது யாரென்று முன்னுக்குப்பின் குழப்பம் மிகுந்த புரியாத புதிராகவே உள்ளது) அரபியர் சிலரின் பயங்கரவாதம் என்று கூறப்பட்டதும் உலகின் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் பட்டம் குத்தப்பட்டனர். ஆனால், அதிகாரபூர்வமாக இரு நகரங்களின் ஜப்பானியர் தலையில் இரண்டு அணுகுண்டுளை அமெரிக்க அரசே போட்டு பயங்கரவாதம் நிகழ்த்தியும் இதுவரை ஒரு அமெரிக்கரோ அல்லது ஒரு கிருத்துவரோ பயங்கரவாதியாக ஜப்பானியரால் அறிவிக்கப்பட்டதில்லை. இவர்கள் மிகச்சிறந்த முன்னுதாரணம்.

படிப்பினை-5

நமது அறிவியல் கண்டுபிடிப்புகளே நமக்கு எதிரிகளாக ஆவது போல நாம் குறையுள்ள கண்டுபிடிப்புகளைத்தான் பெரும்பாலும் உருவாக்கி உள்ளோம். 

இந்த உலகம் மனிதனிடம் தரப்பட்டபோது   இவ்வளவு சீரழிந்த நிலையில் தரப்படவே இல்லை. இவன்தான் ஓசோனில் ஒட்டை போட்டான். 

உலகை வெப்பமயமாக்கி துருவ பனிக்கட்டிகளை கரைத்தான். நீரை உயிர்கொல்லி ரசாயனங்களால் விஷமாக்கினான். 

தன் இயந்திர வாகனங்களின் புகையாலும், தொழிற்சாலைகளின் புகையாலும் காற்றை நச்சு வாயுக்களால் மாசுபடுத்தினான். 

இயற்கையான தாவர விதைகளின் மரபணுக்களை கேடுதரும் வகையில் மாற்றினான். ரசாயன உரங்கள் & பூச்சிக்கொல்லி மூலம் மண்ணை மலடாக்கினான். 

பற்பல கதிர்வீச்சு கற்றைகளை கண்டுபிடித்து அதன்மூலம் பற்பல புதிய புற்றுநோய்களையும், இயங்காத உறுப்புகளையும், புதுப்புது வடிவில், பிறவிக்குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் காரணமாகினான். 

இயற்கையான மனித தேவைகளை விடுத்து, தீயது என்று நன்கறிந்தும் சிகரெட், மது, போதை மருந்து, விபச்சாரம், ஓரினச்சேர்க்கை என தேவையற்ற செயற்கையானவற்றுக்கும் அனுமதி அளித்து, ஊக்கம் அளித்து, அதன் மூலம் புதிய நோய்களை பெற்றுக்கொண்டான். 

தன்னைத்தானே அழித்துக்கொ(ல்ல)ள்ள பற்பல அதிநவீன WMD ஆயுதங்களை கண்டுபிடித்தான். (2010-ம் ஆண்டின் உலகின் முதன்மையான ஆயுத ஏற்றுமதி வியாபாரி அமெரிக்கா..! இவ்வாண்டின் முதன்மையான இறக்குமதி பயனீட்டாளர் மாண்புமிகு இந்தியா அவர்கள்..!)

நீங்கள் கேட்கலாம்.... இவை எல்லாம் மனித முன்னேற்றத்துக்குத்தானே என்று..! ஆமாம்...! ஆனால், இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளின் பின்னே பெரிய குறை ஒன்று இருக்கின்றதே..! அது ஏன் தெரியவில்லை...? 

உதாரணமாக...

நான் ஒரு சமையல் அடுப்பு கண்டு பிடிக்கிறேன்... "ம்ம்ம்.. பற்றிக்கொள்" என்று நீங்கள் சொன்ன மாத்திரத்தில், எரிபொருள் தேவை இன்றி அது தானாக தீ பற்றிக்கொள்ளும்..! ஆனால், அதை உங்களால் அணைக்கவே முடியாது..! எறிந்து கொண்டே இருக்கும் எந்நேரமும்...! இது ஒரு சிறந்த கண்டுபிடிப்பா..?


நான் ஒரு கார் கண்டுபிடிக்கிறேன். அதற்கும் எரிபொருளே தேவை இல்லை...! உள்ளே ஏறி உட்கார்ந்து, "ம்ம்ம்.. போ" என்றால் போய்க்கொண்டே இருக்கும். ஆனால், அதில் பிரேக் கிடையாது...!  இது ஒரு நல்ல கண்டுபிடிப்பா...?


இதுபோன்றுதானே இப்போது நம்முடைய பல நவீன கண்டுபிடிப்புகள் உள்ளன...?

வருங்காலத்தில் எண்ணெய், எரிவாயு, நிலக்கரி என எல்லாம் முடிந்த பின்னர் அணுமின் நிலையம்தானே ஒரே வழி.. என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம். ஆனால், அணுக்கதிர்வீச்சுக்கு உள்ளான ஜப்பானிய மக்களுக்கு என்ன மருந்தை கண்டு பிடித்து விட்டு நாம் அங்கே அணு உலை கட்டினோம்..? இது என்னுடைய அந்த பிரேக் இல்லாத கார் போன்று இல்லையா?


ஓசோன் ஓட்டையை அடைக்கும் வழி என்ன என தெரியாமலேயே, நாம் மேலும் மேலும் குளிர்சாதனம் தயாரித்து, விற்று, வாங்கி, CFC உமிழ உமிழ நாம் உபயோகிக்க வில்லையா..? இது எனது முந்தைய தீயை அணைக்க முடியாத அடுப்பு போல இல்லையா...?

உலக வெப்பமயமாதலுக்கு என்ன என்ன காரணம் என்று எல்லாம் அறிந்தும் அதை தடுப்பதற்கான முயற்சியில் நாம் என்றேனும் இறங்கினோமா?

அமேசான்  காடுகளும் சைபீரிய காடுகளும்தான் உலகில் உள்ள  50% ஆக்சிஜனை நமக்கு தருகிறது (உருண்டை பூமியில்... ஒன்று பகலில் இருக்கும்; மற்றொன்று இரவில் இருக்கும்... சுபஹானல்லாஹ்..!) என்று நன்கு அறிந்திருந்தும் காடுகள் வளர்ப்பில் நாம் ஆர்வம் காட்டினோமா..?

பச்சையம் இல்லாத நட்டநடு சஹாரா பொட்டல் பாலைவனத்திலும்... அவ்வளவு ஏன்... பல லட்சக்கணக்கான சதுர மைல்கள் மரங்களே இல்லாத நட்டநடு பசிபிக் மஹா சமுத்திரத்திலும் மனிதன் சுவாசிக்கத்தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறதே...! எப்படி..? உலகம் முழுதும் காற்று வீசுவதால்தானே..! இதை மனிதனால் சாதிக்க முடியுமா..? முடியாது. ஆனால், மரவளர்ப்பு மனிதனால் முடியும் அல்லவா..?

'நீரின்றி அமையாது உலகு' என்று நன்கு அறிந்திருந்தும், நிலத்தடி நீரை பாதுகாக்க நாம் என்ன செய்தோம்..? அது குறைகிறது என்று தெரிந்தும், அதற்கு எந்த மாற்று ஏற்பாடுகளும் செய்யாமலும், மழை நீரை சேமிக்காமலும் தொடர்ந்து அதனை உறிஞ்சி எடுத்து உபயோகிக்கிறோம்..! ஆனால், நம் சந்ததிகள்..? அவர்களுக்கு தண்ணீர்...?

'கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் இருக்கு கண்ணூ' என்று யாரோ சைடில் கத்துவது என் காதில் விழாமல் இல்லை. (கடலே இல்லாமல் பல நாடுகள் உள்ளனவே..!) கடல் இருந்தாலும், ஆனால், அதற்கு முன்னரே எண்ணெய் வளம் மனிதனால் உறிஞ்சப்பட்டு தீர்ந்துவிடும். அப்புறம் மின்சாரம் இருக்காது. அதனால் டீசாலிநேஷன் பிளான்ட் எதுவும் ஓடாது..! உப்புத்தண்ணியை யார் குடிப்பது..? மன்னிக்குமா நம்மை நம் வருங்கால சந்ததி..?

மண்வளம், நீர்வளம், காற்றுவளம் இவற்றை காப்போம். இதனால், நாம், நம் மனிதவளத்தைக்காப்போம். இனியாவது படிப்பினை பெறுவோம்.

படிப்பினை-6

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் ஒரு கூட்டத்தார் மீது வேதனையை இறக்கி வைத்தால், அவ்வேதனை அக்கூட்டத்திலுள்ள நல்லோர் உட்பட அனைவரையும் பிடித்துக் கொள்ளும். ஆனால் அவர்கள் பின்னர் கியாமத்(இறுதி)நாளில் எழுப்பப்படும் போது அவரவர்களின் செயல்களுக்கேற்ப எழுப்பப்படுவர். (நல்லோர்கள் நல்ல அந்தஸ்துடனும், தீயோர் தீய நிலையிலும் எழுப்பப்படுவர்.) (புகாரி,  முஸ்லிம்).


படிப்பினை-7

(மனிதனே!) உனக்கு ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அல்லாஹ்வின் புறத்தில் நின்றும் கிடைத்ததாகும். உன்னை ஏதும் தீங்கு பிடித்தால் (அது) உன்னிலிருந்தே ஏற்பட்டதாகும். (அல் குர்ஆன்-4:79)

படிப்பினை-8 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:காற்று அல்லாஹ்வின் கிருபையாகும். அது அல்லாஹ்வின் அருட்கொடையை கொண்டு வருகிறது. சிலவேளை அது அவனின் வேதனையையும் கொண்டு வருகிறது. ஆகவே நீங்கள் அதனைக் கண்டால் அதனை திட்ட வேண்டாம். அதில் நலவானதை அல்லாஹ்விடம் கேளுங்கள். அதில் தீங்கானதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள். (அபூ தாவூது)

படிப்பினை-9

நீங்கள் அறிந்துக் கொள்ளாத நிலையில் திடீரென வேதனை உங்களை வந்தடைவதற்கு முன்னர் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட மிக அழகானவற்றை பின்பற்றுங்கள். (அல் குர்ஆன்-39-55)

படிப்பினை-10


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.(திர்மதி) 

18 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...