இவ்வுலகில் மனிதனை தம் சுய அறிவுடன் காரியமாற்றும் படி படைத்த இறைவன் அவனை சும்மா வெறுங்கையுடன் விட்டுவிடவில்லை ..! 'எப்படி இவ்வுலகில் வாழவேண்டும்' என்று தான் படைத்த முதல் மனிதனுக்கே அறிவுறுத்தும் வண்ணம் 'இஸ்லாம் எனும் நேரிய வாழ்வியல் நெறி' ஒன்றை அவருக்கு அருளிய இறைவன், அவரை தம் இறைத்தூதராகவும் ஆக்கி அவரின் மனைவிக்கும் அனுப்பி அந்த வாழ்வியல் நெறியை பகிரவும், தம் சந்ததிக்கும் தொடர்ந்து பிரச்சாரம் செய்யவும் வைத்தார். காலப்போக்கில் சிலர் இந்த இறைவழியை புறக்கணித்து தம் மனம் விரும்பிய வழியில் செல்லத்துணியும்போது, வாழ்வியல் நெறியை அப்போதும் பேணுவோர், ஓரிறை நெறி பிரழ்ந்தவோர் மீது பிரச்சாரம் செய்வதும், அவர்களில் ஒரு சாரார் மீள்வதும் மற்றொரு சாரார் அதனை புறக்கணிப்பதும் அன்றிலிருந்து தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், "நம் பணி இறைச்செய்தியை தெளிவாக இவர்களிடம் சொல்வது மட்டுமே... சொல்லியாயிற்று... இனி இவர்களுக்கு இறைவன் விட்ட வழி" என்று இந்த ஆத்திக இறைப்பற்று கொண்டவர்கள் எண்ணினால்... அவர்களை 'மதப்பற்று' கொண்டவர்கள் எனலாம்.
அவ்வாறின்றி, 'நான் சொல்வதை கேட்காத உன்னை விட்டேனா பார்' என்று இறைநெறி மறுப்பாளர்களுக்கு தொல்லை கொடுப்பதும், கொடுமை புரிவதும், கொலை செய்வதும் 'மதவெறி' ஆகிவிடுகிறது.