அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, January 20, 2012

20 உங்களிடம் SBI A/c இருந்தால் உடனே பாருங்கள்: 50000 கோடி இருக்கலாம்..!

அவர், மேற்கு வங்க மாநில தென் தினாஜ்பூரில் உள்ள பாலுர்காட் என்ற ஊரில் அரசுப்பள்ளிக்கூட ஆசிரியர். மாதச் சம்பளம் சுமார் ரூ 35,000. அவரின் இந்த மாத செலவுக்கு அவ்வப்போது எடுத்தது போக மீதி அநேகமாக ரூ 10,000 இருக்கலாம் என்று எதேச்சையாக தம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சேமிப்புக்கணக்கை இந்த வார ஞாயிறு அன்று நெட்டில் திறந்து பரிசோதித்த அந்த ஆசிரியருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி..! பேரதிர்ச்சி..!

காரணம், அவர் அக்கௌண்டில் இருந்த பணம்... ரூ 49,570,08,17,538 (அதாகப்பட்டது... சுமார்  ஐம்பதாயிரம் கோடி ரூபாய்..!) யார் அவர்..? அந்த பணம் எப்படி வந்தது இவர் அக்கௌண்ட்டிற்கு..? இவர் கணக்கில் போட்டது யார்..? அது அவ்வளவும் யாருடைய பணம்..? எப்படி இது நடந்தது..?

அந்த ஆசிரியர் பெயர்...  திரு.பாரிஜாத் ஸாஹா..!

இவரின் கணக்கில் இருந்த தொகை கிட்டத்தட்ட இந்திய ரயில்வேக்கான ஆண்டு பட்ஜெட்டுக்கு இணையான தொகை..! இந்திய கல்வித்துறைக்கான ஆண்டு பட்ஜெட்டை விட அதிகம்...!  

சூப்பர்..! "கிடைத்த வரை லாபம்" என்று ரகசியமாக இருக்கவில்லை நம் சகோ.ஸாஹா. அடுத்த கணமே அந்த வங்கியில் தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரான அதிகாரிக்கு போன் செய்தார். "என் கணக்கில் ரூ 49,000 கோடி வந்துள்ளது.. சீக்கிரம் உங்கள் தவறை சரி செய்யுங்கள். என் பணம் ரூ 10000 அதில் உள்ளது. எடுக்க வேண்டும்," என்றாராம்..! 

இந்த இடத்தில் ஒரு விஷயம்..! அவர் நினைத்திருந்தால் அந்தப் பணத்தை உடனே எடுத்து செல்வழித்திருக்க முடியும்..! ஆனால், கணக்கில் நடந்துள்ள தவறைப்பார்த்ததும் அந்த வங்கிக்கு தெரிவித்து, கணக்கு சரி செய்யப்படும் வரை காத்திருந்தார்.

சென்ற ஞாயிறு அன்று நடந்த இந்த விஷயம்... ரகசிய விசாரணையின் போது எப்படியோ முந்தாநாள் வெளியில் நியூஸில் கசிந்து விட்டது. உளளூர் தொலைக்காட்சிகள் முதல் சிஎன்என், பிபிசி வரை போட்டி போட்டுக் கொண்டு ஸாஹாவை பேட்டி எடுத்துத்தள்ளி விட்டன. நான் இந்த செய்தியை நேற்று கல்ஃப் நியூஸ் தளத்தில்தான் முதலில் படித்தேன். இன்று மேலும் நிறைய தளங்களிலும் இந்த செய்தி வந்து விட்டது. 

School Teacher Mr. Parijat Saha
என்னே ஒரு நேர்மை..! அவரின் நேர்மைக்கு நாம் நமது பாராட்டுக்களை மனதார தெரிவித்துக் கொள்வோம்..! வாழ்த்துகள் சகோ.பரிஜாத் ஸாஹா..! இவ்வளவு பணத்தை எடுக்கவோ மறைக்கவோ முடியாது. இவர் இதனை வெளியே சொல்லாமல் இருந்தாலும், எப்படியும் கண்டு பிடிக்கப்பட்டு இருந்திருப்பார். அப்போது, இவருக்கு மோசமான முகவரியை ஊடகம் தந்திருக்கும். தாமாக முதல் ஆளாக புகார் தந்தமையால் புகழ் பெற்றார்.

ஸ்டேட் பேங்கின் கொல்கத்தா மண்டல அலுவலகமும், மும்பை தலைமை அலுவலகமும் தீவிர விசாரணையில் இறங்கின. கிட்டத்தட்ட 4 நாட்களாக விசாரணை நடந்தது. ஆனால் இந்த ரூ 49000 கோடி வந்த வழிதான் அவர்களுக்கு தெரியவில்லை. 

நான் என்ன நினைத்தேன் என்றால், யாரோ ஒரு கோடீஸ்வரன் தன் பணத்தை தப்பான கணக்கு (ஆசிரியரின் வங்கி கணக்கு) எண்ணுக்கு அனுப்பி விட்டு விழி பிதுங்கி கருப்பு பணமா என்ற கேள்வியில் மாட்டிக்கொள்ளப்போகிறார் என்று நினைத்தேன். ஆனால், இது இன்று ஒருவழியாக மிக மிக சாதாரண பிரச்சினையாக முடிந்து விட்டது... அல்லது "முடித்து வைக்கப்பட்டு" விட்டது போல தெரிகிறது.

நேற்றுவரை இது விசித்திரமான செய்திதான். ஆனால், இன்று இது முக்கியமான செய்தியாகிவிட்டது எனக்கு. காரணம்... இதைப்பற்றி இன்று வந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்திதான் நம்மை உறைய வைக்கிறது..! அதில் அந்த வங்கியின் Assistant General Manager Mr. Tapan Mitra வின் பேட்டி..........

அதாவது, இவரின் கணக்கில் ஏற்றப்பட்ட அந்த தொகை ஓர் இணைய தவறாம். திரு. ஸாஹா உபயோகித்த இணைய இணைப்பு அப்படி ஒரு தொகை இருந்தது போன்று அவருக்கு காட்டி விட்டதாம். உண்மையில் அவ்வளவு பெரிய அந்த தொகை அவரின் கணக்கிற்கு ஏற்றப்படவே இல்லையாம். இதுபோன்ற தவறுகள் நடப்பது சாதாரணமான(!?) ஒன்றுதானாம். வழக்கமாக பலருக்கு ஏற்படும்(!?) ஒன்றுதானாம். இதற்கு திரு.ஸாஹாவுக்கு இணைய இணைப்பு வழங்கிய நிறுவனம்தான் காரணமாம்..!? இதை எல்லா விசாரணைகளும் முடிந்த பிறகு அந்த வங்கியின் உதவி உயர் அதிகாரி இன்று தெரிவித்து உள்ளார்..!

சகோ..! இதை நம்ப முடிகிறதா...? உங்களுக்கு இந்த செய்தி சொல்லும் பின்னணி கருத்து என்ன..? உங்களுக்கு என்ன தோன்றுகிறது..? அப்போ... இந்த பணம் காற்று வெளியில் வந்த மாயாஜாலமா..? இப்போது அவர் பார்த்த தொகை என்னவாகி இருக்கும்..? அந்த அதிகாரி சொல்வது போல... இதெல்லாம் பலருக்கு நடக்கும் சாதாரண சம்பவமா..? எனக்கு இதுவரை நடந்தது இல்லை..! எனக்கு தெரிந்த எவருக்கும் நடந்ததில்லை...! உங்களுக்கு..? 

அப்புறம், என்னிடம் SBI A/C இல்லை..! சகோ, உங்களிடம் SBI Account உள்ளதா..? இருந்தால், உடனே பாருங்கள்... 50,000 கோடி ரூபாய் இருக்கா என்று..! அந்த அதிகாரி சொல்வதை பார்த்தால் இருக்கலாம் போல..!

20 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...