அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, August 4, 2011

25 அமைத்துக்கொள்ளுடி,சாப்பிடுடி,செல்லுடி..

பொதுவாக இவ்வுலகில் எந்த உயரினத்தை எடுத்துக்கொண்டாலும் ஆண்/பெண் இவற்றில் வலிய பாலினம் எதுவோ அது தன் எளிய பாலினத்தை உணவு, உறைவிடம், கொடுத்து பாதுகாக்கிறது.  மனிதன் என்றால் கூடுதலாக உடையும் கொடுக்கிறான். (அந்தக்காலத்தில் வலிய கணவன் எனில், மனைவியின் உடை என்பது புலித்தோல்தானே..!? இல்லையேல்... இலை தழை தானே  ஆடை..!?) ஆக, 'வலியது' கையில்தான் குடும்ப நிர்வாகம் இருக்கிறது.  இந்த வலிமை... தோல், கொம்பு, தந்தம், தோகை... இப்படியாக... மனிதனில் புஜவலிமை என்றாகி நிற்கிறது. 



பொதுவாக உலகில், வலியது ஆணாக இருக்க, நம் தேன்கூட்டிலோ வலியது பெண்..! இதற்கு காரணம் பெண்ணின் stings எனும் கொட்டுருப்பு மட்டுமல்ல..! உணவு உறைவிடம் பாதுகாப்பு இவற்றுக்கு ஆண் தேனீ, பெண்ணை சார்ந்தே வாழ்ந்தாக வேண்டிய நிலை என்பதும் முக்கிய காரணம். மற்ற இடங்களில் நிர்வாகம் ஆணின் வசம் இருக்க, இங்கே பெண் வசம் இருக்கிறது..! ஏனெனில் இங்கே ஆணை விட பெண்ணே பலவற்றுள் உயர்வாக படைக்கப்பட்டு இருப்பதை காணலாம்..! அவற்றை நாம் கடந்த மூன்று கட்டுரைகளில் விரிவாக கண்டோம் அல்லவா சகோ..?

(This article is the final part of my Honey Bee series)
முதல்  கட்டுரை :  
தேன்கூடு (A Miracle in Engineering & Technology)  தேன்கூட்டை பெண்களாகிய 'உழைப்பாளித்தேனீக்கள் எப்படி கட்டி இருக்கின்றன' என்று கண்டு அதிசயிக்க..!

இரண்டாவது கட்டுரை :   
தேன்கூட்டில் நிகழ்தகவை நிகழத்தகாதவையாக ஆக்கியது யார்..?   தேனீக்களில் மட்டும் ஆண் தேனீக்கள் 1%-ம்  பெண் தேனீக்கள் 99%-ம் எப்படி சாத்தியமாயின என்றும்... பிறப்பது ஆணா/பெண்ணா என்ற நிகழ்தகவை, தேனீக்களைப்பொருத்த மட்டில் 'நிகழத்தகாதவை'யாக ஆக்குவதில் முக்கிய பங்காற்றும்  உழைப்பாளித்தேனீக்களைப்பற்றியும் அறிந்து மலைக்க..!

மூன்றாவது கட்டுரை :
'தேன்கூட்டின் ராஜாக்கள்'..!? 'முட்டையிடும்  இயந்திரமான' ராணித்தேனியை உருவாக்கி தேனீ இனமே அழியாமல் இருக்க காரணம் ஆன இந்த உழைப்பாளித்தேனீக்கள்பற்றி- தேன்கூட்டின் நிர்வாகம், ஆட்சி, அதிகாரம் அனைத்தும் இவைகளிடம் இருப்பதால் இவற்றின் பாலினம் பெண் என்றாலும்... இவையே "தேன்கூட்டின் ராஜாக்கள்" என்று உணர..!

இனி... இப்பதிவில் தேனீக்கள் பற்றி குர்ஆனில் இறைவன் கூறியவற்றை காணுவோம், சகோ..! பொதுவாக, இறைமைறையில் சமுதாயத்துக்கு ஒன்றை அறிவித்து மக்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பை பொதுவாக எதிர்ப்பை சமாளிக்கும் புஜவலிமை மிக்க ஆண்வசம் ஒப்படைத்து அவர்களுக்கே இறைக்கட்டளைகள் வருவது நாம் அறிந்த ஒன்றே. இங்கே, தேனீக்களில் அப்படி வலிமை மிக்கது பெண்கள் அல்லவா..?

குர்ஆனில் "தேனீக்கள்" என்றோர் (16-வது)  அத்தியாயம் உள்ளது. அதில்... இரண்டு வசனங்கள் (68 & 69) என்ன சொல்கின்றன என்றால்... 

.وَأَوْحَىٰ رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ

ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا ۚ يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ ۗ إِنَّ فِي ذَ‌ٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

இதன்  ஆங்கில மொழியாக்கம் : (Mr.Muhammad Habib Shakir)

And your Lord inspired the bees, saying: "Take your habitations in the mountains and in the trees and in what they erect.

"Then, eat of all fruits, and follow the ways of your Lord made easy (for you)." There comes forth from their bellies, a drink of varying colour wherein is healing for men. Verily, in this is indeed a sign for people who think.

இதன்  தமிழ் மொழியாக்கம் : (மவுலவி. பீ. ஜைனுல் ஆபிதீன் [உலவி])

"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக்கொள்..! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு..! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச்செல்..!" என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.

மேலே உள்ள வசனங்களில் நான் வண்ணமிட்டுள்ள வார்த்தைகளை சற்று ஆழமாக பொருள் கொள்ள வேண்டியுள்ளது. இதில்  நஹ்லி என்று தேனீக்களை பொதுவாக பன்மையில் விளித்து இருப்பதை காணலாம். (நஹ்லா எனபது ஒருமை) ஆனால், அதன் பின்னர் வரும் ஏவல் வாக்கியங்கள் ஆண்-பெண் இருபாலருக்கும் பொதுவானவை அல்ல.! பெண்ணுக்கு மட்டுமேஉரியது.!!!

அரபியில், பெண்பாலுக்குரிய விகுதியை கொண்டு தான் அந்த வார்த்தைகள் முடிகின்றன. மேலும், நான் இதுவரை எழுதிய இத்தொடரில் கூறியுள்ளதன் அடிப்படையில், இறைவன் மேற்படி அறிவுரைகளை பெண்பால் தேனீக்களை நோக்கித்தானே கூறி இருக்க இயலும்..? இந்த ஏவல்களை ஏற்று நடப்பவை... உழைப்பாளி தேனீக்கள் எனும் பெண் தேனீக்கள்தானே..? இந்த கட்டளைகளை ஏற்று செயல்படுத்தும் தகவமைப்போ உடலமைப்போ ஆண் தேனீயிடம் உள்ளதா..? பெண்ணிடம்தானே அனைத்தும் உள்ளன..? இறைவனின் வார்த்தைகள் அல்லவா..? துல்லியமாகத்தானே இருக்கும்..?

மேலும், இறைவன் உபயோகப்படுத்தி இருக்கும் வார்த்தைகள் اتَّخِذِي , كُلِي , فَاسْلُكِي போன்றன எல்லாமே பெண்பாலுக்குரிய ஏவல் விகுதிகளை கொண்டேதான் முடிகின்றன. எப்படியெனில் 'அமைத்துக்கொள்ளுடி', 'சாப்பிடுடி', 'செல்லுடி'..... இப்படியாக..!

இம்மூன்றில், "குலீய்" كُلِي "eat" என்ற வார்த்தையை உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.  ஆங்கில மொழியாக்கங்களில் இவார்த்தையினுள் பொதிந்து இருக்கும் பாலினத்துக்கு உரிய பொருளைத்தர சாத்தியமில்லை. காரணம்  ஆங்கிலத்தில் 'you eat' என்றுதான் சொல்ல முடியும். இதில் 'வினை செய்ய ஏவப்பட்டவர்' ஆண்பாலா பெண்பாலா என்று அறிய அந்த மொழியில் வாய்ப்பில்லை. 

ஆனால், தமிழில் "சாப்பிடுடி" என்று ஏவப்பட்டவரின் பாலினத்தை  தெளிவாக சொல்ல வாய்ப்பிருந்தும், எனக்குத்தெரிந்து அப்படி யாரும் தம் குர்ஆன் மொழிபெயர்ப்பில் எழுதவில்லை. நம் மொழியில் மனிதர் அல்லாத பிற உயிரினத்தை நாம் 'அது...' 'இது...' 'வருது..' 'போகுது..' என்றுதான் பேசிக்கொள்வோம். 'அவள்' 'இவன்' என்று பால் இன விகுதிகளைக்கொண்டு சுட்டுவதில்லை என்பது ஒருவேளை இதற்கு காரணமாக இருக்கலாம்..! ஆனால், இலக்கணத்தைவிட இங்கே உணர்த்தப்படும் விஷயம்தான் முக்கியம்.

ஆனால்.... அரபி இலக்கணத்தில் அப்படியல்ல...! உயிரற்ற அஃறினை பொருட்களுக்கும் கூட 'பால்' உண்டு..!!! அரபி இலக்கணத்தில்... இன்னொரு அதிரடி விஷயம் யாதெனில், ஒரு பெரிய பெண்கள் கூட்டத்தில் ஒரே ஓர் ஆண் இருந்தால் கூட போதும்... அந்த 'கூட்டம்' (எனும் அஃறிணை) ஆண்பால் விகுதியை பெற்றுவிடும்..!!!

இன்னும் சற்று ஆதாரபூர்வமாக இதனை குர்ஆனைக்கொண்டே நாம் அறிந்து தெளிவு பெற்றுக்கொள்ளலாம். 

உதாரணமாக, 2:35-இல், 'ஆண்' ஆன நபி ஆதம் (அலை) அவர்களை இறைவன் அழைத்து, 'eat-சாப்பிடு' என்பதற்கு அங்கே كُلِي என்ற வார்த்தைக்கு பதில், كُلَا என்ற ஆண்பாலுக்குரிய வார்த்தையை உபயோகப்படுத்துவதை பார்க்கலாம்.

மேலும், குர்ஆனில், ஒரு கூட்டத்தாரை 'eat-சாப்பிட'க்கூறும் போது كُلِي என்ற வார்த்தைக்கு பதிலாக كُلُوا என்ற பலர்பாலுக்கு உரிய வார்த்தையை கூறுவதை காணலாம். இதை... 2:60-இல், நபி மூஸா(அலை) அவர்களின் கூட்டத்தினரை நோக்கியும்..., 2:168-இல், ஓ..! மனிதர்களே..! என்று உலக மக்களிடமும்...,  2:172-இல், ஓ..! இறைநம்பிக்கையாளர்களே..! என்று முஸ்லிம்களிடமும்..., என இப்படி நிறைய... காணலாம்..!)

ஆனால், 19:26-இல், நபி ஈசா(அலை) அவர்களின் அன்னை மர்யம்(அலை) அவர்களிடம் இறைவன் 'eat-சாப்பிடு' என கூறும்போது தேனீக்களுக்கு பயன்படுத்திய அதே பெண்பால்  வார்த்தையான كُلِي-ஐ பயன் படுத்துவதை காணலாம்..!!!

ஆக, இந்த كُلِي-என்ற வார்த்தை பெண்பாலுக்குரிய வார்த்தை என்று விளங்கி விட்டோம். இதேபோலத்தான்... மற்ற இருவார்த்தைகளும் ي--எனும் பெண்பாலுக்குரிய ஏவல் வினை முற்று விகுதிகளுடன் முடிபவை..!

இறைவன் சொன்ன இடங்களில் எல்லாம்... தேனீக்கள் கூடுகள் கட்டுவது நமக்கு நன்கு தெரிந்த செய்திதான். ஆனால், முக்கியமான விஷயம் இந்த கூடு கட்டுவதற்கான அடிப்படை கட்டுமானப்பொருளான beeswax-எனும் மெழுகுப்பொருள் இந்த உழைப்பாளித்தேனீக்கள் எனும் பெண் தேனீக்களிடம் மட்டும் சுரப்பவை என்பதை மறக்க வேண்டாம். எனவேதான் பெண்பாலுக்குரிய விகுதி இறைவசனத்தில் உள்ளது. இல்லையேல், ஒரு மனித ஆணை பார்த்து, "ஓ..! ஆணே..! பத்து மாசம் கருவறையில் சுமந்து, வலி வந்து பெத்து, பாலூட்டுடா.." என்றால்... இது எப்படி அபத்தமான தவறாகுமோ... அதுபோல அது ஆகி விடுமே..? இறைவார்த்தை தவறாகுமா..?

அடுத்து, 'ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு' என்ற விஷயம் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. தேனீ பூக்களிலிருந்து மகரந்தம் சேகரிக்கிறது. அதையே தன் முன்னணி உணவாக சாப்பிடுகிறது. பின்னர் பூக்களில் உள்ள நெக்டாரை உறிஞ்சி எடுத்துக்கொண்டாலும் அதை உடனே சாப்பிடுவதில்லை என்றுதான் பார்த்தோம். அதை தேனாக தம் வயிற்றில் உள்ள honey stomach-ல் மாற்றி தேன்கூட்டு அறையில் சேமிக்கின்றன. இந்த honey stomach பெண் தேனீக்களிடம் மட்டுமே உள்ளன. இதைக்கூட அந்த இறைவசனம் இப்படி சொல்லி விடுகிறது..! அதாவது,  بُطُونِهَا என "பெண்பால் வயிறு" என்று..!  காரணம், "ஆண்பால் வயிற்றுக்கு" வேறு பெயர், بُطُونِهم என்று அரபியில் இருக்கிறது..!!! ஆனால், இறைவன் அதை பயன்படுத்தவில்லை..!!! சுபஹானல்லாஹ்.
.
பூக்கள் மலரும் சீசன் முடிந்தவுடன் பூக்களின் மகரந்தம் கிடைக்காத நாட்களில் சேமிக்கப்பட்ட தேனை உண்ணுகின்றன. அப்போது, 'கஷ்டப்பட்டு சேமித்த தேனை இவை தண்டமாக  காலி பண்ணுகின்றன' என்று அக்குளிர்கால சீசனில் பெரும்பாலான ஆண்தேனீக்களை கொன்றும் விடுகின்றன..! இவ்வளவுக்கும் தேனுக்கு தேன்கூட்டில் தட்டுப்பாடு இல்லை. இவை தேனை நமக்காகவே சேமித்துக்கொடுக்கின்றன. அவற்றின் தேவைக்குப்போக பல மடங்கு சேமிக்கின்றனவே..! 

ஒருமுறை குளிர் காலம் முடிந்து அடுத்த கோடை காலத்துக்கு செல்லும்போது கனடாவின் தேன்பண்ணையில், ஒரே ஒரு தேன்கூட்டில்,  220 pounds அதாவது சுமார் 100 கிலோ மேலதிக தேன் இருந்ததாம்... இதேபோல சுமார் 150 கிலோ மேலதிக தேன் ஆஸ்திரேலிய தேன்பன்னையிலும் இருந்ததாம்--இதுவரை இவைதான் ஒரு அன்-ப்ரோக்கன் ரெக்கார்ட்..! 

இப்போது மேலும் ஒரு கேள்வி நமக்கு உதிக்கின்றது. பூக்களின் மகரந்தம் கிடைக்காத நாட்கள் எனில், பூக்கள் கனியாகி விட்ட காலம் அன்றோ..? அப்போது தேனீக்களின் உணவு..? வேறென்ன..? தேன் தான்..! இதற்கு பதில், தேனிக்கள் எல்லாம் கனிகளை சாப்பிட்டால்... தேன் இன்னும் மனிதனுக்கு மிச்சமாகுமே..? (என்னே ஒரு சுயநலம் - அல்பபுத்தி என்கிறீர்களா..?  ஹி..ஹி... இது கருனையாளனின் கட்டளை..!)

இறைவன் தேனீக்களை தேன் சேகரிக்க சொன்னதற்கு காரணம்... அது நோய் நிவாரணம் அளிக்கும் மருந்தாக மனிதனுக்கு பயன்படவேண்டும் என்றுதானே..? அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் எனில், தேனிக்களுக்கு மகரந்தம் கிடைக்காத நாட்களில் மாற்று உணவு அவசியம் அல்லவா..? அது ஏன் பழங்களாக இருக்கக்கூடாது..?

என்னமோ 'தேனீக்கள் பழங்களே  சாப்பிடாது' என்று சிலர் அண்ட புளுகு புளுகுவார்கள். அவர்கள், அருகில் இருக்கும் ஏதாவது பழக்கடைக்கோ அல்லது பழச்சாறு போட்டு விற்பனை செய்யும் ஜூஸ் ஸ்டால்களுக்கோ சென்று பார்க்கட்டும். 'எத்தனை தேனிக்கள் அங்கே இருக்கின்றன' என்று எண்ணி வந்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். இல்லை, அந்த பழக்கடைக்காரர்  மற்றும் அந்த ஜூஸ் போடுபவர் தேனீக்களிடம் எத்தனை முறை கொட்டு-கடி வாங்கி இருக்கிறார் என்றாவது கேட்டு வரலாம். 'அதுவும் மாட்டேன்' என்றால்... கீழ்க்காணும் படங்களையாவது கண்ணை திறந்து பார்க்கலாம்..!

திராட்சை உண்ணும் தேனீ : ஒரு முழு திராட்சையை 'பொளந்து கட்டுகிறாள்' தேனீ


சப்பிப்போட்ட மாம்பழத்தில் கூட மிச்சம் மீதியை உண்ணும் உழைப்பாளித்தேனீக்கள்
தேனில் உள்ள சத்துக்கள் இவை அனைத்தும்...
தேன்  ஒரு சிறந்த நோய் நிவாரணி என்கிறது குர்ஆன். அல்லோபதி தவிர்த்து மற்ற மருத்துவங்களை நாடினால் பல நோய்களுக்கு, "அதை அரைத்து... இதை பொடி செய்து..." என்றெல்லாம் சொல்லி, இறுதியில், "...இந்த கலவையை தேனில் குழைத்து சாப்பிடவும்..!" என்று முடிப்பார்கள். அந்த அளவுக்கு தேன் மருத்துவ குணம் கொண்டது என்பது மருத்துவ ரீதியாக நாம் அறிந்த ஒன்றே. தேனின் மருத்துவ குணம் என்று இணையத்தில் தேடினால் எக்கச்சக்கமாக கிடைக்கிறது.

சரி... அதென்ன... 'இறைவனின் பாதைகளில் எளிதாக பின்பற்றி செல்' எனும் கட்டளை..? 1973 -இல் Karl von Frisch  என்ற ஜெர்மன் விஞ்ஞானிதான் முதன் முதலில் 'இந்த தேனிக்கள்  தமக்குள் நடனம் மூலம் பூக்கள் இருக்கும் பாதைகளை பகிர்ந்து கொள்கின்றன' என்று தன் 25 வருட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடித்து உலகிற்கு சொல்லி அதற்கான வெகுமதியாக நோபல் பரிசையும் பெற்றுக்கொண்டார்.   

தேனீக்களின் கூடு கட்டும் நிலைகள், கூட்டினை இடம்பெயர்த்தல், உணவு இருக்கும் இடத்தை, பூக்கள் இருக்கும் இடத்தை சக தேனிக்களிடம் அறிவித்தல்... ஆகிற இவற்றை  தேனீக்கள் தங்கள் நடனம் மூலம் தங்களுக்குள் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்கின்றன.

"வெக்டார் கால்குலஸ் அடிப்படையிலான அந்த தேனீக்கள் நடனத்தை" அது நடனம் ஆடும் பாதையை... (waggle dance of honey bee)... இந்த யு ட்யூப் வீடியோவில் (55  seconds  only) காணுங்கள் சகோ..! (இதற்கு  'embedded code' தரமாட்டார்களாம் சகோ..! அதனால் வீடியோவை இங்கே பகிரவில்லை.) 

சென்ற நூற்றாண்டு கண்டுபிடிப்புகள் ஆன மேற்படி விஷயங்களை எல்லாம்  மிகத்தெளிவாக மனிதர்களுக்கு சுமார் 1425 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்துக்கொடுத்து விட்டது குர்ஆன். இது அறியாமல், இந்த நூற்றாண்டிலும் கூட நம்முடைய தமிழ் கவியரசுகள்/கவியரசர்கள் எல்லாம் பூவில்தான் தேன் இருப்பதாக கவிதை புனைந்து வரும் நிலையில், தேனீக்களின் வயிற்றில் இருந்து தேன் வருவதாக சுமார் 1425 வருடங்களாக குர்ஆனில் இருந்து வருவது எப்படி சாத்தியம் என்று நாம் ஆராய கடமைப்பட்டுள்ளோம் சகோ..!

எதற்காக தன் இனத்தைக்கூட கொன்றுவிட்டு, தன் தேவைக்கு மேலதிகமாக இவ்வளவு தேனை தேனீக்கள் சேமிக்க வேண்டும்..? இது யார் இட்ட கட்டளையினால்..? சந்தேகமே இன்றி, நிச்சயமாக இது நமக்கான இறைவனின் அருட்கொடைதான் அல்லவா..!


ஆனால், இன்னும் சிலர், 'இவை இறைவனின் வார்த்தைகள் அல்ல' என்றும் 'இவை ஒரு மனிதரின் (முஹம்மத் நபி ஸல்...) வார்த்தைகள்' என்றும் சொல்லிக்கொண்டு இருப்பது வேதனை கலந்த ஆச்சரியமாகவே இருக்கின்றது எனக்கு.

இவர்கள் தங்கள் கூற்றில் உண்மையாளர்கள் எனில், தேனீக்கள் சம்பந்தப்பட்ட கடந்த மற்றும் இந்த நூற்றாண்டு கண்டுபிடிப்புகளின் அனைத்து வெகுமதிகளையும் -நோபல் பரிசு உட்பட- அந்த மனிதரின் (முஹம்மத் நபி ஸல்...) பெயரில் அறிவித்து விடுவார்களா..?  :) :) மாட்டார்களே..! 

அப்படியென்றால், இவை வேறு யாருடைய வார்த்தைகளாம்..?

இரண்டில், ஏதாவது ஒரு நிலைக்கு வந்து விட வேண்டியதுதானே சகோ..? அதுதானே நியாயம்..? "இவை இறைவனின் வார்த்தைகள்தான்" என்று ஏற்றுக்கொள்ளலாமே சகோ..? இப்படி ஏற்றுக்கொள்ள மாற்றுக்கொள்கை சகோதரர்களை அன்போடு நான் அழைக்கிறேன்..!

"...சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது..!"

References :-
My sincere thanks to all of these people who helped me with their extraordinary work on bees..!
Last  but  not  least... Bro.Aashiq Ahamad's comments on Bro.Dharumi's blogg last year..!
For pictures thanks to http://photobucket.com  , http://www.fotosearch.com  , http://www.photoforum.com 

25 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...