அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, July 27, 2013

2 என்னாது..? ரமளான் புனித மாதமா..!?



கேள்வி : இஸ்லாத்தில் ரமளான் புனித மாதமா..? 
பதில் : இல்லை..!

சில விஷயங்கள் நாளடைவில் நமது பேச்சு வழக்கில் "புனிதமிக்க மாதமான ரமளான்... ரமளான் எனும் புனித மாதம்..." என்று திரும்ப திரும்ப பேசி எழுதி எல்லா இடத்திலும் தவறான கருத்துருவாக்கம் கொண்டு மனதின் ஆழத்தில் அதுவே சரிபோல பதிந்து விடுகிறது. பின்னர் அதை எப்பாடு பட்டு நீக்க போராடினாலும் மிகவும் கடினமாகிவிடுகிறது. மார்க்கத்தில் பல்வேறு விஷயங்கள் இப்படித்தான் சமூகத்தில் புரையோடிப்போய் உள்ளது. இதற்கு இன்னொரு உதாரணம் தான் "ரமளான் ஒரு புனிதமாதம்" என்ற நமது தவறான புரிதல்..!

இதை அதிகமாக முஸ்லிம் அல்லாத மக்களே... 'சிறப்பித்து உயர்வாக சொல்ல வேண்டும்' என்ற நல்ல எண்ணத்தில்தான் இப்படி சொல்லப்போக நாளடைவில் முஸ்லிம்கள் மனதிலும் அப்படியே அழுத்தமாக அமர்ந்து விட்டது..!

'ரமளான் புனித மாதம்'  இது இஸ்லாமிய அடிப்படையில் தவறு..! 

ரமளான் புனித மாதம் என்று குர்ஆனிலோ ஹதீஸிலோ சொல்லப்படவில்லை. வேறு பல சிறப்புகள் கொண்ட மாதமே ரமளான்..! அதே நேரம் அல்லாஹ்வும் ரசூலுல்லாஹ்வும் வேறு நான்கு மாதங்களைத்தான் முஸ்லிம்களுக்கு புனித மாதங்களாக்கி இருக்கிறார்கள். அந்த நான்கில்  ரமளான்  இல்லை..!

எனவே... நாம் நம் இஷ்டத்துக்கு அஞ்சாவதா ஒரு மாசத்தை சேர்க்க கூடாது. அதற்கு நமக்கு அனுமதியோ அதிகாரமோ இல்லை.

//வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!//  (குர்ஆன் - 9:36)  

//புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும் இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள், அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரு டன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.// (குர்ஆன் - 2:194)

மாதங்களின் எண்ணிக்கை 12 என்பதும் அதில் அந்த 4 மாதங்கள் புனிதமானவையாக உள்ளதால் அம்மாதங்களில் போர் செய்யக் கூடாது என்பதும் விளங்குகிறது. இன்னும் அந்த நான்கு மாதங்களுக்கு வேறு எந்த மாதமும் ஈடில்லை என்றும் அந்த இரு ஆயத்துகளில் இருந்து விளங்குகிறது.

ஆனால் அந்தப் புனித மாதங்கள் எவை..?

எந்த இறைவன் அம்மாதங்களைப் புனிதமானவை என அறிவித்தானோ அவன் அறிவித்தால் தவிர அதை நம்மால் அறிய முடியாது.

அந்த நான்கு மாதங்கள் யாவை என்பது இந்த வசனத்தில் கூறப்படா விட்டாலும் வேறு வசனங்களில் அது பற்றிக் கூறப்பட்டுள்ளதா என்றால் குர்ஆனில் வேறு எந்த இடத்திலும் கூறப்படவுமில்லை. 

'நான்கு மாதங்களில் போர் செய்யக் கூடாது' என்று கூறப்படுவதால் அந்த நான்கு மாதங்கள் யாவை என அறியும் அவசியம் நமக்கு ஏற்படுகிறது.

'குர்ஆன் மட்டும் போதும்' எனக் கூறுவோர் அந்த நான்கு மாதங்களைக் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட முடியாது. 'குர்ஆனுக்கு மேல் விளக்கமாகத்தான் இறைத்தூதர் நபி ஸல் அவர்களின் அறிவிப்புகளான சஹீ ஹதீஸ்கள் அமையும், அவையும் அல்லாஹ் அறிவித்துக்கொடுத்த வஹியே' என்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த நான்கு மாதங்கள் எவை என்று கண்டுபிடிக்க நமக்கு இயலும். 

குர்ஆனில் சில விஷயங்கள் பொதுவாகக்கூறப்பட்டுள்ளன. அதன் கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குவார்கள் என்று 3:164, 16:44, 16:64 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை விளக்கி விட்டார்கள். அந்த ஹதீஸ்களின் துணையுடன் தான் இவ்வசனத்தை விளங்க முடியும்.

அந்த ஹதீஸ் எது..?

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை - துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும். 

அறிவிப்பாளர்: அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி)
நூல் புஹ்காரி : 3197, 4406, 4662, 5550, 7447

ஆக, ரமளான் மாதம் இஸ்லாத்தின் 'புனித மாதம்' என்ற லிஸ்டில் வரவில்லை..! மீறி அப்படி சொன்னால்... அது குர்ஆன் & ஹதீஸுக்கு மாறுபடுவதாகவே அமையும். அத்துடன், தேவையற்ற குழப்பத்திற்கும் அச்சொற்பிறயோகம் அடிகொலுகிறது. எனவே, இதை நாம் தவிர்க்க வேண்டும்.

இஸ்லாமை பொறுத்த மட்டில்... புனிதம் என்றாலே... அது மற்றது போல இல்லாமல் அங்கே சிலவை தடுக்கப்பட்டு இருக்கும்.

உதாரணமாக... மஸ்ஜிதுல் ஹராம் - ஹரம் ஷரீஃப் என்றால்... மக்காவில் உள்ள பள்ளி, கஃபதுல்லாஹ். மற்ற பள்ளி ஏரியாவில் அனுமதிக்கப்பட்டு இருப்பது போல சிலவை தடுக்கப்பட்டுள்ளது. வேட்டை ஆடுதல், புல் பூண்டு செடி கொடி மரங்களை அகற்றுதல்... இப்படி....

மேலும், ஹஜ்/உம்ரா வில் இஹ்ராம் என்ற நிலையும். அதில் இல்லறம் கூடல், முடி அகற்றுதல், நகம் வெட்டுதல், வாசனை திரவியம், தையல் ஆடை அணிதல்... போன்றன ஹராம்.

அதேபோல...

ஷஹர் அல் ஹராம். புனித மாதங்கள். அதில் என்ன ஹராம்..? போரிடுதல் ஹராம் என மேற்கண்ட இறை வசனங்களில் தடுக்கப்பட்டுள்ளது.

ரமளானில் போர் இடலாம். அது புனித மாதம் அல்ல என்பதால். ஆகவே, அதையும் ஷஹ்ர் அல் ஹராமில் நாம் சேர்க்க கூடாது.

அப்படி என்றால்... நமக்கு பிடித்த ரமளானை வேறு மாதிரி எப்படி நாம் சிறப்பித்து சொல்வது..?

'எம்மாதத்துக்கும் இல்லாமல் ரமளானுக்கு மட்டுமே உரித்தாதனது' என்று வேறுபல தனிச்சிறப்புகள் உள்ளன. அந்த சிறப்புகளை அடைமொழியாக்கி அழைக்கலாம்.

இதுவும்... இறைவனும் இறைதூதரும் எப்படி சிறப்பித்து சொன்னார்களோ அப்படியே நாமும் சிறப்பித்து சொல்வது சிறந்தது..!

'நோன்புக்குறிய மாதம்' என அழைக்கலாம்..!
(அல்குர்ஆன் 2 : 185)

அல்லது...

'திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்' என அழைக்கலாம்..!
(அல்குர்ஆன் 2 : 185)

அல்லது....

'தக்வா (இறையச்சம்)  ஏற்படும் மாதம்' என அழைக்கலாம்..! 
(அல்குர்ஆன் 2:184) 

அல்லது....

'சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்' என அழைக்கலாம்..! 

'ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன'. - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1898, முஸ்லிம் 1956)

அல்லது....

'வானத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்' என அழைக்கலாம்..! 

'ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாயில்கள்   திறக்கப்படுகின்றன' - நபிமொழி. 
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 
நூல்: புகாரி 1899)

அல்லது....

'நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படும் மாதம்' என அழைக்கலாம்..! 

'....நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன....' - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 
நூல்: முஸ்லிம் 1956)

அல்லது....

'ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்ற மாதம்' என அழைக்கலாம்..! 

'....ஷைத்தான்கள் சங்கிலியால் விலங்கிடப்படுகின்றனர்'. - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)   

அல்லது....

'ஆயிரம் மாதங்களை விட சிறந்த 'லைலத்துல் கத்ர்' இரவைக்கொண்ட மாதம்' என அழைக்கலாம்..! 

 '...ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி - 722)

அல்லது....

'அதிகமாக தர்மம் (ஸதகா) செய்யும் மாதம்' என அழைக்கலாம்..! 

நபி(ஸல்)அவர்கள் காற்றைவிட வேகமாக தர்மம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமளானில் நிறைவேற்றப்படும் தர்மமே மேலான தர்மம் என்றும் கூறினார்கள். (திர்மிதி) 

அல்லது....

'ஓர் உம்ராவுக்கு ஹஜ்ஜின் நன்மை எழுதப்படும் மாதம்' என அழைக்கலாம்..! 

"ரமளானில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 2201)

அல்லது....

'ஒன்றுக்கு 10 முதல் 700 மடங்கு நன்மைகள் எழுதப்படும் மாதம்' என அழைக்கலாம்..! 

"(ரமளானில் செய்யப்படும்) ஒவ்வொரு நன்மையும் அது போன்ற 10 மடங்கு முதல் 700 மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும்" என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 1945) 

அல்லது....

ஆக மொத்தத்தில்... நாம் அதிக நன்மையை பெறுவதற்காகவே... அல்லாஹ்வால்,

'அருள் செய்யப்பட்ட மாதம்' எனவும் அழைக்கலாம்..! 

'அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), 
நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)   

இதனால்தான்.... 'ரமளான் கரீம்' (தாராளமான ரமளான்) என்று மக்கள் தமக்குள் மெயில் அனுப்பி வாழ்த்துகின்றனர். அப்படி ஒரு வாழ்த்து மெயில்தான் மேலே உள்ளது..! அந்த படத்தில் உள்ள சிறப்பே... ரமளான் பிறையை கவிழ்ந்தா மாதிரி போட்டு.... அதை கிழக்கில் தோன்றும் கடைசி பத்து தேய் பிறையாக காட்டி...ரமலானில் கடைசி பத்தில்தான் அதிக நன்மை உள்ளதை குறிப்பால் உணர்த்தி இருப்பதுதான்...! மாஷாஅல்லாஹ்.

2 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...