அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, August 11, 2012

15 3 பெருநாட்கள் வருவது யாரால்..?

நாம் இதுவரை கடந்து வந்த கடந்த மூன்று பதிவுகளில், நான் சொன்னதில் இருந்து...

ஒரே கிழமையில் ஒரே தேதியில் உலகம் முழுதும் பெருநாள் வராது... என்பதிலும், இரண்டு கிழமை இரண்டு தேதிகளில்தான் பெருநாள் வந்தே தீரும் என்பதிலும், படித்துணர்ந்த எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது..!

ஆனால், உலகம் முழுக்க எல்லா நாட்டுக்கும் எல்லா ஊருக்கும் ஒரே கிழமையில் ஒரே தேதியில் பிறை தெரிய சாத்தியமே இல்லையா...? ஆம் இருக்கிறது..! விதிவிலக்கு என்று சொன்னேன் அல்லவா..? இது பற்றி பார்போம்..!

சென்ற பதிவில்...  "ஒரே ஒரு விதிவிலக்கு தவிர்த்து இஸ்லாமிய பண்டிகை பெருநாள் என்றால்... அது இரண்டு கிழமைகளில் இரண்டு தேதிகளில் வந்தே தீரும்" என்று சொல்லி இருந்தேன். அதென்ன விதிவிலக்கு..?

அதாவது...  பிறை சம்பந்தமான....
             பிறை : - அப்டீன்னா...? (for dummies) 
             பிறை : பார்ப்பது எப்படி..? (Advanced tips) 
             2012 தீபாவளி : 2 தேதிகளில் 2 கிழமைகளில்..?!
-------------------ஆகிய சென்ற மூன்று பதிவுகளில் கண்டது போல...

குறிப்பிட்ட அந்த  மாத இறுதிநாள்...  30 ஆ... 29 ஆ என்று முடிவு சொல்லக்கூடிய பிறையாக அது இருந்து....

நடுப்பகல் அமாவாசைக்கு பிறகு, கண்ணால் காணக்கூடிய பிறையானது தன்  குறிப்பிட்ட மணி நேர வயதை அடைந்து...

சூரியன் மறைந்து சந்திரன் மறையும் நேரம் குறிப்பிட்ட நிமிஷ நேர அளவை (எல்லோப் வரைபட அளவு) கடந்து வந்து...

மறைந்த சூரியனுக்கும் மறைய இருக்கும் சந்திரனுக்கும் குறிப்பிட்ட கோணத்துக்கு அதிகமாக (டன்ஜோன் லிமிட்) தொடுவானில் விலகி இருந்து...

---மேற்படி கண்டிஷன் எல்லாம் சர்வதேச தேதி-கிழமை கோட்டுக்கு கிழக்கே உள்ள தீவுகளுக்கும் நாடுகளுக்கு மட்டும் சாத்தியப்படாமல் போய்... (!?) அல்லது சாத்தியப்பட்டும் மேகமூட்டம்காரணமாக பிறை தெரியாமல் போய்...

சர்வதேச தேதி-கிழமை கோட்டுக்கு மேற்கே உள்ள தீவுகளுக்கும் நாடுகளுக்கும் மட்டும் சாத்தியப்பட்டு...

இங்கே முதன் முறையாக ஷவ்வால் தலைப்பிறை கண்ணால் காணக்கூடிய பிறையாக மேகமூட்டம் அற்ற வானில் கண்ணுக்கு தென்பட்டு,

அது தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ந்து... ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேஷியா, பர்மா, சீனா, பங்களாதேஷ், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்,  சவூதி அரேபியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, வட-தென் அமேரிக்கா என அனைத்து நாட்டு மக்களின் கண்ணுக்கும் தெளிவான வானில் தெளிவாக தென்பட்டுக்கொண்டே வந்து...

24 மணி நேரம் கழித்து சர்வதேச தேதி-கிழமை கோட்டிற்கு மேற்கே உள்ளவர்களுக்கு இரண்டாம் பிறையாகவும் கிழக்கே உள்ளவர்களுக்கு தலைப்பிறையாகவும்  தென்பட்டு விட்டால்.... (இது அரிய சாத்தியக்கூறு)...

ஸ்ஸ்ஸஸ்ஸ்.... உலகம் முழுக்க... அன்று ஒரே கிழமையில்.. ஒரே தேதியில்.. ஒரே பிறையில்.. ஒரே பெருநாள் வரும்..!

ஆனால், கோட்டிற்கு இரு பக்கமும் அருகருகே தீவுகள்..! வெவ்வேறு கிழமைகளில்-வெவ்வேறு தேதிகளில்..! ஆனால், மேகமூட்டம் மழை புழுதிக்காற்று இல்லாத ஒரே கிளியர் வானியல் நிலைமை...! அப்படின்னா... ஒரே கிழமை தேதியில் பிறை தெரிய ரொம்ப ரொம்ப ரொம்ப சாத்தியக்கூறு கம்மிதான்..! அதிசயம் நடந்தால் உண்டு..! எனவே,சர்வதேச தேதி கோட்டில் தலைப்பிறை பிறந்தால்... அதுகிழமைகளில் இரு தேதிகளில் தெரியும் என்று முந்திய பதிவில் பார்த்தோம்.

தலைப்பிறை சர்வதேச தேதி-கிழமை கோட்டில் அதன் மேற்குப்புறம் உள்ளவர்களுக்கு மட்டும் தெரிந்து, உலகம் முழுக்க ஒரே தேதியில் ஒரே கிழமையில் பிறை தெரிந்தும் விட்டது என்று ஒரு பேச்சுக்கு வைப்போம்...! ஆனால், அடுத்த மாதப்பிறை எக்காரணம் கொண்டும் இதே இடத்தில் தோன்றவே தோன்றாது..!

அது  சர்வதேச தேதி கிழமை கோட்டிலிருந்து இருபத்தொன்பதரையாவது நாள் -1 GMT zone இல் சுமார் பதினொன்னரை மணி நேரத்துக்கு முன்னரே பிறக்கும்..! காரணம்: ஒரு சூரிய பகலுக்கும் ஒரு சந்திர பகலுக்கும் இடையே சுமார் 25 நிமிஷ வித்தியாசம் உள்ளது என்றும், இது சூரிய மாசக்கடைசியில் சுமார் பன்னிரண்டரை மணி நேரமாக உருவெடுக்கும் என்றும் பார்த்தோம்..! எனவே, இம்மாதம்... இரு கிழமை -இரு தேதி -ஒரு பிறை என்றுதான் வரும்..! வந்தே தீரும்..! இதுதான் அறிவியல்..! இதுதான் இயற்கை..! இப்படித்தான் மாதாமாதம் இரு கிழமையில் இரு தேதியில் பிறை அமையும்..!

சரி, இந்த சர்வதேச தேதி கிழமை கோட்டில், நான் மேலே குறிப்பிட்ட 'அரிய சாத்தியக்கூறு' அடிப்படையில் பிறக்கும் இந்த பிறை இரு பெருநாளை உலகில் தருமா..? தரக்கூடாது..! ஆனாலும் சிலநேரம் தரக்கூடும்..! எப்படி..?

தமது ஊரில் மேகமூட்டம் தென்பட்டால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்ய நபி (ஸல்) அவர்கள் சொன்னதை எடுத்துக்கொண்டு... பக்கத்து ஊரில்... பக்கத்து நாட்டில்... தென்பட்ட பிறையை அந்த ஊர்/நாடு ஏற்காவிட்டால்... அந்த ஊரில்/நாட்டில் அடுத்தநாள் பெருநாள், என பெருநாள் இரண்டு நாளில் அமையும்..!

உதாரணத்துக்கு... இந்தியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் பிறை தெரிந்து நாளை பெருநாள்... என வைப்போம்..! அந்த மேகமூட்ட ஹதீஸ்படி, இடையில் மழைமேகமூட்டம் சூழ்ந்து கொண்ட பாகிஸ்தானில் பிறை காண வாய்ப்பு இல்லாததால்... 'நாளை மறுநாள்தான் பெருநாள்' என்று அமையும்..!

ஆனால், இந்நிலையில் சில மணிநேரம் கழித்து பாகிஸ்தான் மார்க்க அறிஞர்கள் இப்படி சிந்திக்க வேண்டும்..! அதாவது...

" நியூசிலாந்திலிருந்தில் ஆரம்பித்து... ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேஷியா, பர்மா, இலங்கை, பங்களாதேஷ், இந்தியா என்று... வரிசையாக எல்லா நாட்டுக்கும் தெரிந்த பிறை... நமக்கு அடுத்து ஆப்கானிஸ்தான்.. சவூதி அரேபியா, இராக், இங்கெல்லாம் தெரிந்த பிறை... தற்போது எகிப்தில் தெரிந்து கொண்டு இருக்கும் பிறை... எப்படி நமக்குமட்டும் தெரியாமல் போயிருக்கும்...? மேக மூட்டம் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆக, நாம் ஆப்கன், இராக், சவூதி , எகிப்து... பிறையை அல்ல.. நமக்கு முந்தி பார்த்த பங்களாதேஷ்.. இந்தியா.. இலங்கை போன்ற மற்ற கிழக்கு திசை நாடுகளின் பிறையை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வோம்.."   என்று ஒருமனதாக "நீங்கள் முடிவு செய்யும் நாளே பெருநாள்" என்ற மற்றொரு ஹதீஸ் படி முடிவு செய்து, தன்னை ஒட்டி அமைந்த இந்தியாவின் பகுதிகளில் பிறை பார்க்கப்பட்ட தகவலை ஏற்றுக்கொண்டு பாகிஸ்தானில் பெருநாளை அறிவிக்க வேண்டும்..! இப்படி செய்தால்... இருநாளில் பெருநாள் வருவதை "விதிவிலக்கு" அம்சத்தில் கூட நம்மால் தவிர்க்க இயலும்..!

மேலும், முந்திய பதிவில் நான் தந்திருந்த 'எல்லோப்' வரை படங்களை நீங்கள் பார்த்தால் அதில் ஒன்றை கவனித்து இருப்பீர்கள். அதாவது, தலைப்பிறை தெரிய ஆரம்பிக்கும் பரபோலா (வளைவரை) இடம் குறுகலாகவும்...  நேரம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பிறை தெரியும் பகுதி விரிவாகவும் செல்வதை நீங்கள் கவனித்து இருக்கலாம். எனவே... தென் இந்தியாதான் முதலில் தலைப்பிறை பார்த்த இடம் எனில்... பாகிஸ்தான் மேகமூட்டம் காரணமாக தனக்கு பிறை தெரிந்திருக்கும் என்ற தீர்மானமும் எடுக்க வேண்டியது இல்லை. முப்பதாக பூர்த்தி செய்யலாம்.

அல்லது...  இந்திய பிறை தென்பட்ட இடத்தின் தூரத்தை கருத்தில் கொண்டு... பெருநாளை முடிவும் செய்து கொள்ளலாம்.
.
அப்படி 'முடிவு செய்வது' சரியான அறிவார்ந்த காரணத்தோடு இருந்தால்... அது ஒன்றும் இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானதும் அல்ல. மிக அண்மையை தூரம் என்ற அடிப்படையில், நபி ஸல்... அவர்கள் மதினாவின் பக்கத்து ஊர் கிராமவாசிகளின் பிறையை, மதினாவாசிகளின் பிறையாக அங்கீகரித்து ஏற்றுக்கொண்டார்கள்..!

அதுமட்டுமின்றி... சுமார் 22 மணிநேரத்துக்கு முன்னர் தாங்கள் முந்திய இரவு பார்த்த பிறையை ஒரு ஒட்டக வணிகர் கூட்டம் மறுநாள் மாலை மதினா வந்து சேர்ந்து சாட்சி சொன்னபோது, அவர்களின் பிறைத்தகவல் சாட்சியை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டுமுள்ளார்கள். மக்களை நோன்பை விடச்சொல்லியுமுள்ளார்கள்.

(குறிப்பு :- இந்த ஹதீஸை இருவகையாக அறிஞர்கள் புரிகிறார்கள். சில அறிவிப்பாளரிடம் வரும் 'அமரஹும்' எனும் வார்த்தை வரக்கூடிய ஹதீஸில், நோன்பை விடச்சொல்லி 'அவர்களுக்கு' கட்டளை இட்டார்கள், எனவும், வேறு இரு அறிவிப்பாளரிடம்  இருந்து வரக்கூடிய 'அமரன்னாஸ்' எனும் வார்த்தை வரக்கூடிய ஹதீஸில், நோன்பை விடச்சொல்லி 'மக்களுக்கு' கட்டளை இட்டார்கள் எனவும் இரண்டிலுமே வார்த்தைக்கு உரியதை சரியாக பொருள் கூறுகிறார்கள். ஆனால், இப்படி இரண்டு வார்த்தைகளும் எதிரெதிரான வெவ்வேறு கட்டளைகளை கூறுவதாக சொல்கிறார்கள். அதாவது, முந்தியதில், ஒட்டக வணிகர் கூட்டத்தினர் பார்த்த பிறையை நபி ஸல் அவர்கள் ஏற்கவில்லை  எனவும், பிந்தியதில் ஏற்றதாகவும் நேர்முரணாக விளக்குகிறார்கள். ஆனால், எனக்கு இரண்டுமே ஒரே விஷயம் கூறுவதாகவே புரிகிறேன். எப்படியெனில், ஷவ்வால் பிறை பார்க்கும் அளவுக்கு மார்க்கம் அறிந்த அந்த சஹாபாக்கள் பெருநாளுக்கான பிறையை பார்த்த பின்னரும் ஹராமான தினத்தில் நோன்பு வைக்கக்கூடிய அளவுக்கு, நமது அளவுக்குக்கூட மார்க்கம் தெரியாத பாமரர்கள் என்பதற்கு எவ்வித குறிப்பும் ஹதீஸில் இல்லை. (என்பதால், அவர்கள் விஷயம் அறிந்தவர்கள் என்றே நாம் புரிய வேண்டும். அதுதான் சஹாபாக்களுக்கு நாம் தரும் கண்ணியம்) அடுத்து, பிரயாணத்தில் நோன்பை விட்டு விட்டு பின்னர் நோற்கலாம் என்ற சலுகை இருப்பதையும் அறிந்தவர்கள், ஷவ்வால் 1 அன்று நோன்பை விட்டுவிடாமல் நோன்பு வைத்திருப்பார்கள் என்பதை என்னால் கற்பனையில் கூட எண்ணிப்பார்க்க இயலவில்லை. ஆகவே, அந்த "அவர்களுக்கு" என்பது, "மக்களுக்கு" என்றே நான் புரிகிறேன். ஆக, இந்த  புரிதலின் அடிப்படையில் கட்டுரையை தொடர்கிறேன்...)

சராசரியாக சரக்கு ஒட்டகங்கள் 20 மணிநேரத்தில் சுமார் 200  கிலோ மீட்டர் நடக்கத்தக்கவை..!  அதிகபட்சம் சுமார் 22 மணிநேரத்தில் 500 கிமி ஓடத்தக்கவை. எனவே, இத்தகையதூரம் மதீனாவுக்கு கிழக்குப்புறமோ அல்லது வடக்கு தெற்கிலோ இருந்திருப்பின் பிரச்சினை இல்லை. மேற்குப்புறமாக இருந்திருக்குமேயானால் அது நமது கட்டுரையில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. ஆனால்... அதற்கான சான்று ஹதீஸில் இல்லை. எனவே... ஒட்டகம் பிரியாணிக்க சாத்தியமுள்ள அந்த 500km மதினாவின் கிழக்குப்புறம் இருக்கவே வாய்ப்பு அதிகம்..! ஏனெனில்... தற்போது மதீனாவுக்கு மேற்கே சுமார் 250 கிலோமீட்டரில் கடல் வந்துவிடுகிறது. அதன்பிறகு நிலமில்லை.

எனவே,  சப்போஸ் 'மேற்கேதான்' என எடுத்துக்கொண்டால்... இந்தியாவின் ஒரு மேகமூட்ட  ஊருக்கும், அதற்கு மேற்குப்புறமுள்ள பாகிஸ்தானின் பிறை தென்பட்ட  ஓர் ஊருக்கும் இடையே ஒட்டகம் நடைபோடும் அல்லது ஒட்டகம் ஓடும் தூரத்தை விட குறைவாக இருந்தால்...(ஓடியதா / நடந்ததா என நமக்கு தெரியாது) அந்த 250 கிமீ தூர அளவுக்குள் பாகிஸ்தான் பிறை பார்த்த கிராமம் இந்தியாவுக்கு இருந்தால்... பாகிஸ்தானின் பிறையை இந்தியா ஏற்பதில் தயக்கம் இருக்க தேவை இல்லை..!


அதுவே... இந்தியாவில் பிறை பார்த்து, பாகிஸ்தானில் பிறை தென்படவில்லை எனில், மேற்படி ஹதீஸை பிறை முடிவெடுக்க மிக தாரளாமாக பயன்படுத்தலாம். அருகே கிழக்கே அமைந்த "இந்திய தலைப்பிறை"யில் ஏற்கலாம் மட்டுமின்றி... கிழக்கிலேயே மிக தூரே அமைந்து பல நாட்டுக்கு தெரிந்த "இந்தோனேஷியா, மலேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தலைப்பிறை"யில் இந்த ஹதீஸை ஏற்க முடியுமா அல்லது மேகமூட்டம் காரணமாக முப்பதாக ஆக்கும் ஹதீஸை ஏற்பதா... என்பதை 'எல்லோப்' வரைபடம் மூலம் பாக் அறிஞர்கள் அறிவுப்பூர்வமாக முடிவு செய்யலாம். கிழக்கே எவ்வளவு தூரமாக பிறை தெரிந்தாலும் சரி, அப்பிறையை ஏற்பதே அறிவியல் படி சரியானதாகும்.

உதாரணமாக, சென்னைக்கும்... கோவைக்கும் இடையே உள்ள தூரம்... சுமார் 400 கிமி. சென்னையில் தெரியாத பிறை கோவையில் தெரிந்தால், கோவை மேற்கு பக்கம் என்றாலும், ஹதீஸில் இடம் அல்லது திசை குறிப்பிடப்படாததால்... ஒட்டகம் "ஓடி இருக்கும் தூரத்தை" கருத்தில் கொண்டு, இது அதைவிட குறைவுதானே என, கோவை பிறையை சென்னை ஏற்பதில் தவறில்லை என்றே அறிய முடிகிறது..!

அதுமட்டுமின்றி, சென்னையின் சூரியன் அஸ்தமித்து சந்திரன் அஸ்தமிக்க உள்ள கால அளவுக்குள் கோவையில் பிறை தெரிந்திருந்தால் அறிவியல் அடிப்படையிலும் இந்த பிறை சென்னைக்கு-அது கோவைக்கு கிழக்கே இருந்தாலும் சரியே..! அதாவது... சென்னையில் சூரியன் மறைந்து சந்திரன் மறைய ஐம்பது நிமிஷம் என்றால்... சென்னைக்கும் கோவைக்கும் இடையே சூரிய அஸ்தமனம் நேர வித்தியாசம் ஐம்பது நிமிஷத்துக்குள் இருந்தால்... கோவை பிறை சென்னைக்கு அறிவியல் படி ஒகே என்று கொள்ளலாம்..!

இதே விதியை... மேற்கின் அஹமதாபாத் பிறையை கிழக்கே மணிப்பூர்க்கு அமல்படுத்தலாமா எனில், அது ஒட்டக வணிகர் கூட்ட ஹதீஸில் உள்ள தூரத்தை விட மும்மடங்கு அதிகம். அதேநேரம்... அஹ்மதாபாத்தில் சூரியன் மறைந்து சந்திரன் மறைய ஏற்படும் அதே அவகாசம் இருக்காது. கொஞ்சம் குறையும். அது... பிறை காண வாய்ப்புள்ள நேர அளவை உடையதாக இருக்குமேயானால் ஒரே நாடு... ஒரே நாளில் பெருநாள் கொண்டாடலாமே என்ற நிய்யத்தில் முடிவு செய்தால்... அதிலும் பிரச்சினை இல்லை.. அஹ்மதாபாத் பிறை மணிப்பூருக்கு செல்லுபடியாக்க..! அதேநேரம்... இவ்விரு இடங்களின் தூரம் வாகன கூட்ட ஒட்டக பிரயாண தூரத்தை விட மிக அதிகம் என்பதால்... அஹ்மதாபாத் பிறையை மணிப்பூர்வாசிகள் ஏற்காமல் மறுக்கவும் மார்க்கத்தில் அனுமதி உண்டு.

ஏனெனில்... சிரியா தலைநகர் திமிஷ்க்கில் கலீஃபா முஆவியா (ரலி) பார்த்த பிறையை மதினாவில் உள்ள நபித்தோழர் இப்னுஅப்பாஸ் (ரலி) ஏற்கவில்லை என்பதற்கு காரணம், நபி ஸல் அவர்கள் 'இப்படித்தான் கட்டளை இட்டதாக' கூறி உள்ளார்கள். இந்த தூரம் சுமார்... ஆயிரம் கிலோமீட்டருக்கும் சற்று அதிகம். மேலும்... மிக மிக முக்கிய அம்சம்... மதீனாவுக்கு சற்று மேற்கில்தான் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் (திமிஷ்க்) உள்ளது..! மதினாவில் தெரியாத தலைப்பிறை... சிரியாவில் தெரிய ஆரம்பித்து இருக்கலாம்..! அங்கிருந்து தெரிய ஆரம்பித்து ஒரு சுற்று சுற்றி.. அடுத்தநாள்  மதினாவில்  தெரிந்து இருக்கலாம். எனவே, ஒரு கிழமை வித்தியாசம் அந்த ஹதீஸில் இரு ஊர்களுக்கு மத்தியில் வந்துள்ளது..! 

இதே விதி... உலகிலேயே முதன்முறையாக அம்மாதத்தில் அஹ்மதாபாத்தில்தான் பிறை தெரிகிறது எனில் அதை மணிப்பூர் ஏற்கவேகூடாது. ஏற்றால் அறிவியல்படி தவறு. மார்க்கப்படியும் தவறு என சொல்ல சிரியா-மதினா பிறையை ஆதாரமாக காட்டலாம். ஆனால்... இந்தோனேஷியா மலேஷியா பர்மா வில் தெரிந்த பிறை... மணிப்பூரில் தெரியாமல் அஹமதாபாதில் தெரிகிறது எனில்... மணிப்பூர் தனக்கு கிழக்கே தெரிந்த பிறையை ஏற்பதே அறிவியல்பூர்வமாக சரி.

சுருக்கமாக... ஓரிடத்தின் கிழக்கே தெரிந்த பிறையை மறுக்க மார்க்கத்தில் உறுதியான ஆதாரமில்லை.
அவ்விடத்துக்கு மேற்கே தெரிந்த பிறையை ஏற்காதிருக்கத்தான் மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது..! இதன்படி... "கிழக்கே எத்ததனை ஆயிரம் கிலோமீட்டரில் பிறை தெரிந்தாலும் அதை ஏற்போம்" என்று அகில உலக உலமாக்களும் தெளிவு பெற்றுவிட்டால்... முடிந்தது பிறைக்குழப்பம்..!

ஆக, மதினாவின் பிறை எல்லை எது என்பதை கிராமவாசிகளும் வாகனக்கூட்ட சஹாபிகளும் இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்களும் தாங்கள் கண்ட பிறை மூலம் முடிவு செய்வது போல... இங்கே ஒரு இடத்தின் "பிறை எல்லை எது?" என நிர்ணயிப்பதை ஹதீஸ் அடிப்படையில் நாமே முடிவு செய்கிறோம்.

ஒருவர்... 'எனது பக்கத்து ஊர்பிறையை அல்லது ஒட்டகம் நடக்கும் தொலைவுக்குள் தென்பட்ட பிறையை மட்டுமே ஏற்பேன்' என்றும், அதனால் கோவை பிறையை சென்னைவாசி ஏற்கமாட்டேன் என்றால்...

இன்னொருவர்... 'ஒட்டகம் ஓடும் தொலைவுக்குள் பிறை எல்லையை ஏற்பேன் என்றால்... இவர்கள் ஒரே  வீட்டில் வசிக்கும் இருவர் எனில், அவ்வீட்டில் இரு நாட்களில் பெருநாள் வரும்..! "பிறை எல்லை விஷயத்தில்... எது சரியான புரிதல்" என்று மார்க்க அடிப்படையில் இவர்கள்தான் ஒற்றுமைக்காக வேண்டி முரண்டு பிடிக்காமல் பேசித்தீர்க்க வேண்டும்..!

மேற்படி காரணங்கள் இன்றி (மேற்கில் சிரியா தூரம், ஒட்டகம் நடக்கும் தூரம் / ஓடும் தூரம்) நான் சொன்ன அந்த 'விதிவிலக்கு' விஷயத்தில்... மேகமூட்டம் சிறிய தூர அளவில் மட்டுமே பரவி இருந்தால்... இரு கிழமைகளில் பெருநாள் வர வாய்ப்பில்லை..!

ஆனால், மேகமூட்டம் இல்லாவிட்டாலும்... "ஒரே நாட்டில், ஒரே மாநிலத்தில், ஒரே ஊரில், ஒரே வீட்டில்... கூட எப்படி இரண்டு பெருநாட்கள் வர முடியும்?" என்ற குழப்பம் இருக்கும்..! அது சரியான குழப்பமே..!

நமக்கு பிறை தெரியவில்லை... ஆனால், நம்ம ஊர் பக்கத்தில் பிறை பார்த்து விட்டார்கள். "இல்லை, நான் பக்கத்து ஊரு/நாடு பிறையை எல்லாம் ஏற்கமாட்டேன்... நானே பார்த்தால்தான் பிறை... எனது கண்ணுக்கு நேரே பிறை பிறந்தாக வேண்டும்..." என இப்படி எல்லாம் பக்கத்து ஊர் பிறையை ஏற்கலாம் என்ற ஹதீஸ்களை விட்டுவிட்டு... 'கண்ணால் பிறையை காணாமல் நோன்பு வைக்கவோ விடவோ கூடாது' என்ற ஹதீஸை மட்டும் பற்றிக்கொண்டு, நடுநிலையாக மற்ற இரண்டையும் வைத்து சிந்திக்காமல்... முரண்டு பிடித்தால்... ஒரே நாட்டில், ஒரே மாநிலத்தில், ஒரே ஊரில், ஒரே வீட்டில்கூட... இரண்டு பெருநாட்கள் வரும்..! அப்படித்தான் வந்து கொண்டு இருக்கிறது..! இது தவறு..!

கண்ணால்  கண்டால்தான் பிறை என்பதிலும் இரண்டு வகையினர் உள்ளனர்..! ஒருவர், 'கண்ணால் கண்டால்தான் எனக்கு அது பிறை' என்பார்..! கண்ணால் பார்க்க முயற்சித்து பிறை தென்படவில்லை... எனவே, 'இன்று பெருநாள் இல்லை' என்பார்..!

இன்னொருவர்... சக்தி வாய்ந்த டெலஸ்கோப் வைத்து பார்த்து, 'எனக்கு பிறை தெரிகிறது..!' எனவே, 'இன்று பெருநாள்' என்பார்..! 

பிறை பற்றிய இரண்டாவது பதிவில் கண்டது போல... சாதாரண கண்ணால் பார்த்தால் தெரியாத பிறை... telescope வைத்து பார்த்தால் தெரிகிறது... எனில், அன்று பெருநாள் என்கிறார்கள்..! Telescope இல்லாமல் பார்த்தால் பிறை தெரியாது... எனில், அன்று... 30ஆம் நோன்பு;பெருநாள் இல்லை என்கிறார்கள்..!

Found, Brightness on Hilal & darkness on background Adjusted, Enlarged, Viewed on Computer Monitor.
உதாரணமாக, நாம் நமது வாட்சை பார்த்தால்... பஜ்ர் தொழ இன்னும் பத்து நிமிஷ நேரம் உள்ளதாக அறிகிறோம்..! ஆனால், அதேநேரம் கிழக்கு வானில்... சூரியன் உதித்துக்கொண்டிருக்கிறது எனில்... நாம் சூரியனையே பின்பற்றுவோம்..! வாட்சை பின்பற்றினாலும்... சூரியனை பின்பற்றினாலும் நேரம் இருவருக்கும் ஒன்றாக இருந்தாக வேண்டும்..! எனில், ஓகே..! ஆனால், ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு மார்க்கத்தில் குழப்பம் விளைவிக்கிறது என்றால்... நாம் மார்க்கம் காட்டிய அடிப்படையிலேயே சென்று விட வேண்டும்..!

இன்றுள்ள தொலைநோக்கியை விட அதிக சக்தி வாய்ந்த தொலைநோக்கி நாளை வரக்கூடும்..! அது இருண்ட கரிய கார் மேகத்தையும் கடந்து பிறையை நமக்கு லேப்டாப்பில் காட்டக்கூடியதாக இருக்கும்..! இன்னும் சொல்லப்போனால்... சூரியன் அஸ்தமிக்கும் முன்னரே... அமாவாசைக்கு பிறகு ஓரிரு மணியிலேயே பகலில் கூட பிறையை காட்டக்கூடியதாக இருக்கும்..!!!!!!!!!!!!!!! அப்போது இப்போதிருப்பதைவிட நிறைய பிறை குழப்பம் வரும்..! மேலும், எல்லார் கையிலும் இந்த தொலைநோக்கி இல்லையே..! ஆனால், எல்லாரிடமும் கண்கள் உண்டே..! எனவே, தொலைநோக்கி மூலம் பிறை பார்த்தலை தவிர்ப்பதே சரியாக இருக்கும்..! மார்க்கம் எளிமையானது..! அதை மக்கள் குழப்பாமல் இருக்கும்வரை..!

தன்னிடம்  ஹெலிகாப்டர் இருக்கிறது என்று அதில் பறந்தவாறே... தவாப், சயீ... என்று ஒருவர் உம்ரா செய்தால்... இவருக்கு நமது தீர்ப்பு என்ன..?

இன்னும்  குழப்பத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்போனால், தமக்கு கிழக்கு பக்கமாக உள்ள நாடுகளின் பிறையைக்கூட எடுக்கலாம். அறிவியல் படி இது லாஜிக்தான்..! ஆனால், 500 கிலோ மீட்டருக்கு அதிகமான மேற்கு பக்க நாடுகளின் பிறையை சிலர் எடுப்பது எவ்விதத்திலும் அறிவியல் லாஜிக் இல்லாதது..! அது நாம் கடந்து வந்த பாதை அல்ல..! இனி கடக்கப்போகும் பாதை..! அங்கே எப்படி நாம் தொலைத்த பொருளை(பிறை) தேட முடியும்..? வந்த வழியில்தானே தொலைத்ததை(பிறை) தேடுதல் அறிவுடைமை..? 
 
சரி.. உலகில் மட்டுமல்ல.. ஒரே வீட்டில் கூட... மேகமூட்டம் இருந்தால் அடுத்தவர் பிறையை ஏற்கும் விஷயத்தில்... 'தம்முடைய பிறை எல்லை எது என்பதில்' ஒத்த கருத்து இல்லையேல்... இரண்டு பெருநாட்கள் வருவதில் அவரவர் மார்க்க புரிதலின் படி லாஜிக் இருக்கிறது என்று பார்த்து விட்டோம்..!

ஆனால்... 3 பெருநாட்கள் வருவது எதனால்..? எப்படி..? அதில் மார்க்கம் உள்ளதா..? லாஜிக் உள்ளதா...? அறிவியல் உள்ளதா..? சில நேரம் நான்கு கூடவருகிறதே..!

ஹி...ஹி... ஹி... இது செம்மை கேள்வி..! இது சமீப சில வருடங்களாக... 'ஹிஜ்ரா காலண்டர் க்ரூப்' என்போர், தனது மாத துவக்கப்பிறையாக நடுப்பகலில் ஏற்படும் பூர்ண அமாவாசைக்கு அடுத்த நிமிடத்திய சந்திரனை கணித்துக்கொள்கின்றனர்..! இவர்கள் பிறை பார்ப்பதே இல்லை. அதே நேரம், முந்திய் மாதத்தின் கடைசி கவிழ்ந்த தேய்பிறையைத்தான் 'பார்க்க வேண்டிய பிறை' என்றும் புதுமையாக ஒன்றை சொல்லிக்கொள்கின்றனர். எனவே, இவர்களின் conjunction அமாவாசை, நியூசிலாந்தில் இருந்தால் கூட... அதற்கு 9 மணிநேரம் பின்தங்கி இருக்கும் சவூதியில்... இவர்கள் காலண்டர் படி அதே கிழமையில் அவர்கள் இருப்பதால்... அது ஸஹர் நேரம் என்பதால் நோன்பு ஆரம்பித்து விடுவார்கள்..! :-)

அதாவது, நியூசிலாந்தில் கிரகண அமாவாசையை பார்த்தவர்களே... (அதாவது புது மாதத்துக்குள் நுழைந்தோர்களே) இன்னும் அசர் கூட தொழ வில்லை..! ஆனால், தங்கள் சந்திரன் உதயத்துக்கு இன்னும் 3 மணிநேரம் பாக்கி இருப்போர்... (அதாவது இன்னும் சென்ற மாதத்திலேயே இருப்போர்) நோன்பு வைக்க ஆரம்பித்து விட்டனர்..! இதுவாங்க லாஜிக்...? இதில் அறிவியலும் இல்லை... மார்க்கமும் இல்லை..! இரண்டு அடிப்படையிலும் லாஜிக் இல்லை..! காரணம்..?

இவர்களின் காலண்டரில்... நவம்பர் 13 அன்று அமாவாசை என்று போட்டு நவம்பர் 14 அன்று முஹர்ரம் ஒண்ணு என்று போட்டு வைத்து உள்ளார்கள்..! அன்று இவர்கள் காலண்டரை ஒருவர் ஆஸ்திரேலியா/ நியூசிலாந்தில் இருந்தால் பின்பற்ற இயலாது..! ஏனெனில், இவர்களுக்கு நவம்பர் 14 அன்றுதான் சூரிய கிரகண அமாவாசை..! அன்று இவர்களுக்கு துல்ஹஜ் 30 என்றல்லவா அவர்கள் அமாவாசை conjunction படி போட்டிருக்க வேண்டும்..? சென்ற பதிவில் நாம் பார்த்தபடி... இவ்வருடம் நவம்பர் 13 - 14 அமாவாசை சூரிய கிரகணத்தில் சறுக்குவது இவ்வருட தீபாவளி காலண்டர் மட்டுமல்ல... இவர்களின் 'ஹிஜ்ரா காலண்டரும்'தான்..!  :-((

இவர்களின் காலண்டர் தேதி... சந்திரனை பின்பற்றுகிறது..! கிழமை... சூரியனை பின்பற்றுகிறது..! அதுவும் ஏககாலத்தில்...! அதெப்படி சாத்தியம் ஆகும்..? சந்திர நாளுக்கும், சூரிய நாளுக்கும் தினசரி சுமார் 25 நிமிஷம் வித்தியாசம் உள்ளதே..?! சந்திர மாதமும் சூரிய மாதமும் சுமார் பன்னிரண்டரை மணி நேரம் வித்தியாசப்படுகிறதே..?! பின்னர் எப்படி பிறை தேதிக்கு சூரிய கிழமையை வைப்பார்கள்..? சூரிய அடிப்படையில் அமைந்த சர்வதேச கிழமை கோட்டினை எப்படி இவர்கள் பிறை தேதி காலண்டருக்கு தர முடியும்..? இங்கேதான் கிழமை-பிறை கோட்டை போட்டு அறிவியலை கோட்டை விட்டார்கள் ஹிஜ்ரா காலண்டர் காரர்கள். எனவேதான்... இந்த குழப்பம்..!

பிறை-கிழமை கோட்டில் அவர்கள் அறிவியலை மட்டும் கோட்டை விடவில்லை. மார்க்கத்தையும் கோட்டை விட்டார்கள். அதாவது, "அந்த இடத்திலே எப்படிங்க பிறை கோட்டை போட்டுக்கிட்டீங்க? இதுக்கு ஆதாரம்?"  என்று கேட்டால்... அவர்கள் சொல்வது... இவர்கள் வாதத்துக்கு தொடர்பே இல்லாத 'குதிகால்' வசனம். அதாவது... கஃபாவை சுற்றி சுற்றி உலகே வட்டம் வட்டமாக் சஃபில் நின்றால்... கடைசி வட்ட சஃப்பில் மேற்கே நிற்பவர், அதே கடைசி வட்ட சஃப்பில் கிழக்கே நிற்பவருடன் குதிகாலால் உரசுவாராம். குர்ஆன் சுட்டும் அந்த கோடுதான் கடந்த நூற்றி சொச்சம் வருஷமாக உள்ள கற்பனை கோடாம்.

ஹா...ஹா...ஹா......

'எதை கிழமை கோடாக எடுக்க வேண்டும்?' என்று அவர்கள் புத்தகத்தில் தெளிவாக 'குதிகால்' பற்றிய வசனத்துக்கு இப்படில்லாம் விளக்கம் தந்து விட்டு... கஃபா தான் உலகுக்கு 'நட்ட நடு சென்டர் ஜீரோ டிகிரி மெரிடியன்' என்று எல்லாம் தெளிவாக கூறிவிட்டு... வேண்டுமென்றே... எதுக்கு பிரச்சினை என்று... கிரீன்விச் ஜீரோ டிகிரி மெரிடியனின் நேர்பின்னே உள்ள 180 டிகிரியில் போடப்பட்ட அந்த "சர்வதேச கிருத்துவ நாட்காட்டிக்கு உரிய கிழமை கோட்டையே"  எடுத்துக்கொண்டார்கள்..! கேட்டால்... எடுக்க கூடாது என்று சொல்ல என்ன ஆதாரம் என்று என்னிடமே கேட்கிறார்கள்..! முதன்முறையாக... இப்படி எதை எடுக்க வேண்டும் என்று இவர்கள் புத்தகத்தில்தான் நான் அது பற்றியே படித்தேன் சகோ..!

ஹிஜ்ரா காலண்டரில் இதுவும் மார்க்கப்படி மட்டுமல்ல, அறிவியல் படியும் தவறு. ஏனெனில்... ஜீரோ டிகிரி கிரீன்வீச்சுக்கு நேர் பின்னே 180 டிகிரியில் இண்டேர்நெஷன்ல் டேட் லைன் உள்ளது. இவர்களின் ஜீரோ டிகிரி கஃபாவுக்கு நேர் பின்னே அதே இடம் எப்படி வரும்..? அமெரிக்காதான் வரும்..! அங்கே தான் இவர்களின் கோட்டை போட்டு பிரிக்க வேண்டிவரும்..! பிரித்தால்... அமெரிக்காவில் இவர்கள் காலண்டர் படியே... (அந்த பிறை கோட்டுக்கு இரு புறமும் வெவ்வேறு கிழமைகள் என்பதால்) இரு கிழமைகளில் ஹிஜ்ரா காலண்டரிலும் பெருநாள் வரும்..! மேட்டர் புரியுதா சகோஸ்..? :-)

ஆகவே, இது போன்ற பல்வேறு குளறுபடிகளின் ஊடே... உலகமே தலைப்பிறையை காணும் முன்னரே இவர்கள் அமாவாசையில் நோன்பை ஆரம்பித்து விடுகிறார்கள்..! உலகமே தலைப்பிறையை காணும் முன்னரே... இவர்கள் பெருநாள் கொண்டாடி விடுகின்றனர்..!

இவ்வருடம் இவர்கள் சனிக்கிழமை அன்று தங்களின் 'காலண்டர் படி' பெருநாள் கொண்டாட இருக்கிறார்கள்..! உலகிலேயே இம்மாதம் பிறை 'கண்டதாக' முதலில் அறிவித்த சவூதிக்கு ஞாயிறு பெருநாள் என்றால்... மறுநாள் பிறைகண்ட இந்தியாவுக்கு திங்கள் அன்று பெருநாள் வந்தால்............................

அந்த 'அமாவாசையில் காலண்டரை பார்த்து நோன்பை ஆரம்பிக்கும் ஹிஜ்ரா காலண்டர் குரூப் இந்தியர்',

'உலகில் எவர் பிறை பார்த்த தகவலையும் ஏற்பேன்' என்று... எல்லா மாசமும் தலைப்பிறையை தான் மட்டுமே உலகில் முதலாவதாக காணும் தனக்கு மேற்கில் இருக்கும் சவூதியின் பிறையை (சவூதி கிழக்கில் இருந்தால் கூட ஏற்பதில் ஒரு லாஜிக் உண்டு) ஒருபோதும் அதெப்படி சாத்தியம் என்று சந்தேகம் கொள்ளாமல் கண்ணை மூடி பின்பற்றிய 'சவூதியில் வாழாத இந்தியர்',

அப்புறம் 'நான் எனது பிறையை எனது வானில் எனது கண்ணால் கண்டே நோன்பு வைப்பேன்' என்ற 'இந்திய இந்தியர்',

ஆகிய இந்த மூவரும் ஒரே வீட்டில் அண்ணன் தம்பிகளாக இருந்தால்.............................

ஹி...ஹி...ஹி... அந்த வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ந்து பெருநாள்..! இதுக்கு பக்கத்து வீட்டுக்காரர் மாற்று சமய நண்பர் என்றால்... அடி சக்கை... அவருக்குத்தான் மூன்று நாளும் தொடர்ந்து மட்டன் பிரியாணி விருந்து...! :-)

''நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும்.நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு  செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ

இந்த ஹதீஸ் படி, நபி ஸல் வாழ்ந்தகாலத்தில்... மதினாவில் யாரேனும் ஒருத்தர் பிறை பார்த்தால் ஊருக்கே அது போதுமாக இருந்தது. ஒவ்வொரு தெருவினரும் அவரவர் தெருவில் பிறை தெரிகிறதா மேகம் மறைக்கிறதா என பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

அதேபோல...மதினா பெருகிய போது... மேகக்கூட்ட மதினாவில் தெரியாத பிறை... ஊருக்கு வெளியே கிராமத்தில் தெரிந்தது. கிராமவாசி சொன்ன பிறை தகவலை ஏற்றார்கள். மதினாவின் எல்லை பெருகியது.

பின்னர், ஒரு நாட்டில் ஒரு மாகாணத்தில் (அல்லது மாநிலத்தில்) உள்ள ஏதேனும் ஓர் ஊரில் ஒருவர் காணும் பிறை, அந்த மொத்த மாகாணத்துக்கே (மாநிலத்துக்கே) போதுமானதாக ஆனது. தற்போது... தமிழகத்தில் இதுதான் நடைமுறையில் உள்ளது.

இதேகாலத்தில்... ஒரு நாட்டில் ஏதேனும் ஓர் ஊரில் காணப்படும் பிறை அந்த முழு நாட்டுக்கும் போதுமானதாகவும் நடப்புலகில் பல்வேறு நாடுகளில் உள்ளது.

இன்னும் ஒரு படி மேலே போய்... அருகருகே உள்ள சில நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள ஒரு நாட்டின் ஓர் ஊரில் பார்த்த பிறை... மற்ற நாடுகளுக்கும் போதுமானதாக உள்ளது. (GCC, Gulf நாடுகள் உதாரணம்)

இதே பாதையில்... இதே புரிதலில்... இதற்கு அடுத்த கட்டம்தான் உலகப்பிறை.

மார்க்கத்துக்கும் அறிவியலுக்கும் முரணின்றி... இது எப்படி சாத்தியப்பட வேண்டும் என்றால்...உலகின் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு கிழமையில் தலைப்பிறை தென்பட்டுவிட்டால்... அது ஐயத்துக்கு இடமின்றி ஆதாரபூர்வமாக (வீடியோ/ஃபோட்டோ) நிரூபணம் காட்டப்பட்டதாக இருந்தால்... அப்பிறையை, அந்த நாட்டின் பிராந்தியமும்... அந்த பிராந்தியத்துக்கு மேற்கே உள்ள அத்தனை உலக நாடுகளும் தமது தலைப்பிறையாக மேகக்கூட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால்... அதே நேரம்... அந்த பிராந்தியத்துக்கு கிழக்கே உள்ள உலகின் அத்தனை பிறை தென்படாத /மேகக்கூட்ட நாடுகளும்... அடுத்த கிழமையில்தான் தலைப்பிறை பின்பற்ற வேண்டும். அன்றைய கிழமையில் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்ய வேண்டும்.

இப்படி... மொத்த உலகமும் எல்லா பிறை தொடர்பான ஹதீசையும் ஒரே நேரத்தில் பின்பற்ற முடியும்.

ஆகவே, நாம் நபி ஸல் அவர்கள் காட்டித்தந்த வழியில் மார்க்கத்துக்கு முரணில்லாத வகையில் குர்ஆன் ஹதீஸ்களை கற்று... அறிவியலையும் கற்று, வானவியலையும் கற்று இறுதியில் ஒரு தெளிவான புரிதலுக்கு வந்து அதன்படி 'பிறை பார்த்தலின் அடிப்படையில்' நோன்பையும் பெருநாளையும்  மிகச்சரியாக ஒருமித்த கருத்தில் முடிவு செய்து... மூன்று நான்கு கிழமை என்றெல்லாம் அறிவியல் சந்தி சிரிக்கும் வகையில் இன்றி... உலகம் முழுக்க அடுத்தடுத்த இரு கிழமைகளில் மட்டும்... (மிக மிக அரிதாக ஒரே கிழமையிலும் அமையலாம் எனவும் பார்த்தோம்) பின்பற்றிய நன்மக்களாக நம் அனைவரையும் இறைவன் ஆக்கி அருள பிரார்த்திக்கிறேன். ஆமீன்.

15 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...