அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Tuesday, July 24, 2012

14 பிறை : - அப்டீன்னா...? (for dummies)




பிறை : ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதம் வந்துவிட்டால் வருஷத்துக்கு இரண்டு பிறை மட்டும் பார்க்கும் மக்கள் வாய்களில் பிறக்கும் ஒரு வார்த்தை அல்ல இது..! 

அல்லது...  

ஒவ்வொரு வருடமும் ரமளான் மாதம் முடியும் நேரம் நெருங்கி விட்டால் முஸ்லிம்களுக்கு "ரம்ஜான் பண்டிகை என்றைக்கு..?" என்று ஊடகங்கள் வாய்களில் தப்பிப்பிழைக்கும் ஒரு வார்த்தையும் அல்ல இது..!

மாறாக, மாசாமாசம்... அதாவது ஒவ்வொரு மாதமும்... மேற்கில் சற்றுமுன்னர் மறைந்த சூரியனின் ஒளி அடுத்த சில நிமிடங்களில் அல்லது சில மணி நேரத்தில் மேற்கில் மறையப்போகும் சந்திரனின் பக்க-அடிப்பகுதியில் ஏற்படுத்தும் ஒரு ஒளிக்கீற்று தான் பிறை எனப்படுவது..!


பிறை பற்றிய சில அடிப்படை தகவல்கள்:

இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி தெரியாது. நேரம் ஆக ஆக மாறிக்கொண்டே இருக்கும் இந்த பிறை பற்றி மேலும் அறிய நாம் அதற்கு காரணமான சூரியன், சந்திரன் மற்றும் பூமி பற்றி இன்னும் சிறிது அறிந்து வைத்து இருக்க வேண்டும்..! 


நமக்கு நன்கு தெரியும் இது... அதாவது... நாம் வாழும் இந்த பூமி மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுற்றுவதால்...ஒவ்வொரு நாளும் காலை நிலையாக இருக்கும் சூரியன் கிழக்கில் உதித்து மாலை மேற்கில் மறைவது போல தோன்றுவது பற்றி..!

ஆனால், சந்திரன்..? அது எங்கே உதிக்கிறது..? எங்கே மறைகிறது..? இது ஏனோ நிறைய பேருக்கு தெரிவதில்லை. அல்லது தவறான புரிதலில் உள்ளனர். இன்னும், சூரியனுக்கு தினமும்... உதயமும் அஸ்தமும் உள்ளது போன்றே... சந்திரனுக்கும் தினமும் உதயமும் அஸ்தமும் உள்ளது. இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..? இது புரிந்தாலே... போதும்... நமக்கு முக்கால்வாசி விஷயம் விளங்கிவிடும்..!

சந்திரன் பற்றி நாம் அமாவாசையில் இருந்து ஆரம்பிப்போம். இங்கே நிலநடுக்கோட்டில் கோடையும் குளிரும் அல்லாத ஓர் இடைப்பருவத்தில் பூரண அமாவாசை என்பது... நடுப்பகலில் சூரியன் நம் தலைக்குமேல் செங்குத்தாக இருக்கும் நட்டநடுப்பகல் நேரத்தில்தான் ஏற்படும்..! ஆறுமணிக்கு உதித்து ஆறுமணிக்கு மறையும் சூரியன் எனில்... பகல் 12 மணிக்கு அமாவாசை..!

இந்த அமாவாசைகளில்... என்றாவது ஒரு அமாவாசை நாளில்... நம் பூமியும் இந்த சந்திரனும் அந்த சூரியனும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்தால்... சூரிய கிரகணம்..! அதாவது, நமக்கும் சூரியனுக்கும் நடுவே சந்திரன் வந்து சூரியனை முழுக்க முழுக்க மறைத்து கருப்பாக்கி விடும் அல்லவா... அதுதான்... பூரண சூரியகிரகணம்..!

ஆக, இப்படியான ஒரு பூரண சூரிய கிரகண நாளில், கிட்டத்தட்ட சூரியன் உதிக்கும் அதே நேரம் சந்திரன் அதன் அருகே சற்று தென்கிழக்கில் / வடகிழக்கில் உதித்து.... ஏறக்குறைய சூரியன் மறையும் அதே நேரம் அதற்கு சற்று வடமேற்கில் / தென்மேற்கில் மறையும். இந்த இணையான ஓட்டத்தில்... நடுப்பகலில் தன் நேர்க்கொட்டை சந்திரன் மாற்றும் போது சூரியனின் (நம் பார்வையிலான) 'ஓட்டக்கோட்டுக்கு' குறுக்கே வரும்போது... (லைனை கிராஸ் பண்ணும்போது) சூரிய கிரகணம் உண்டாகிறது. 


இவ்வருடம்... கடந்த மே மாதம் நடந்த சூரிய கிரகணம்..! இங்கே பூமியில் மேல் விழும் நிழல் இடத்தில் உள்ளவர்கள் பகுதியான கிரகணத்தை கண்டவர்கள். அந்த நிழலின் மையத்தில் உள்ள சிகப்பு புள்ளியில் சிக்கியவர்கள் பூர்ண கிரகணம் கண்டவர்கள். 




இவ்வருடம்... இனி இறைநாடினால் வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் சூரிய கிரகணம்..!  பூமியின் மறுபாதியில் இரவில் இருப்போருக்கு கிரகணம் இல்லை. அதேபோல இந்த நிழலில் சிக்காதவர்களுக்கு கிரகணம் இல்லை. அவர்கள் பகலில் இருந்தாலும்..!






இல்லையேல், கிரகணம் அல்லாத அமாவாசைகளில்... சந்திரன், தென்கிழக்கில் உதித்தது தென்மேற்கிலேயே மறைந்தாலோ.... வடகிழக்கில் உதித்தது... வடமேற்கிலேயே மறைந்தலோ... கிரகணம் கிடையாது..! 

ஆக, கிரகண அமாவாசை அன்று, மாலை சூரியன் மறைவதற்கு ஓரிரு  நிமிடங்கள் முன்போ, இணைந்தோ, ஓரிரு நிமிடங்கள் கழித்தோ சந்திரன் மறைந்து விடுவதால் பிறை பார்த்தல் என்ற பேச்சுக்கே வேலை இல்லை..!



அந்த கிரகண அமாவாசைக்கு அடுத்தநாள், சூரியன் உதித்ததுக்கு பிறகு சுமார் 35~40 நிமிஷம் தாமதமாக சந்திரன் உதித்து... சுமார் 65 நிமிடம் வரை தாமதமாக மறையும்... இது சுமார் 30 மணிநேர பிறை எனலாம்..! கண்களால் எளிதில் காணக்கூடிய இதனை தலைப்பிறை என்கிறோம்..! 


பூமியின் இந்த இடத்துக்கு பின்னர் மேற்கு பக்கமாக யாருக்கெல்லாம் இனி சூரியன் மறைகின்றதோ.... அவர்களுக்கெல்லாம் பிறையின் வயதும் ஏறும், அது மறையும் காலமும் அதிகரிக்கும்..! அதனால், இவர்களுக்கு மேற்கில் உள்ளவர்கள் இன்னும் இலகுவாக பிறையை காணவும் இயலும்... மேக மூட்டம் இல்லாதிருந்தால்..!


அவ்வாறின்றி... கிரகண அமாவாசை அன்று இரவு 11 மணியில் இருப்பவர், பூர்ண கிரகண அமாவாசை பார்ப்பவரை விட சுமார் 11 மணி நேரம் கிழக்கு பக்கமாக முன்னேறிவிட்டார்..! இதனால் அமாவாசைக்கு மறுநாள் அவருக்கு சூரியன் மறையும் போது... (30-11)=19 மணி நேரம் கொண்ட பிறை, சூரிய அஸ்தமனத்துக்கு  பிறகு சுமார் 30 நிமிடங்கள் கழித்து மறையும்.




இந்த... 24 மணிநேரத்துக்கு  குறைவான வயதின் பிறை தொடுவான தூசி மண்டல அடர்த்தி, இன்னும் மீதம் இருக்கும் சூரிய வெளிச்சம், அடிவானத்தில் இருந்து பிறை இருக்கும் மிக குறைந்த உயரம், மிக மெல்லிய பிறை என்பதால்..... மற்றும் மேக மூட்டம் இவற்றால் பிறை நம் கண்ணுக்கு எளிதில் தெரியாது..! அதனால்தான் 'அமாவாசையில் பிறை தெரியாது' என்பார்கள்..! படு கிளியரான ஆகாயத்தில் 18 மணி நேரத்துக்கு பிந்தைய பிறையை பிறை பார்த்து அனுபவம் உள்ளவர்கள் காண முடியும். கண்டிருக்கிறார்கள்.

அடுத்த நாள், சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சூரிய உதயத்துக்கு பின்னர் உதித்து.... சூரிய மறைவுக்கு பின்னர் சுமார் 2 மணி நேரம் கழித்து மறையும். இப்போது, சாதாரண கண்களுக்கு கூட இரண்டாம் பிறை தெரியும்...! காரணம்... சூரியவெளிச்சம் குறைவு, அடிவானத்திலிருந்து பிறை சற்று உயரமாக இருப்பது, பிறை சற்று தடிமனாக வளர்ந்து இருப்பது..! இன்னும் மேகமூட்டம் இல்லாதிருப்பதும்..!

இப்படியே... ஒவ்வொரு நாளும் சூரியனைவிட தாமதமாக உதிக்கும் சந்திரன்... இறுதியில் ஏறக்குறைய சூரியன் மேற்கில் மறையும் அதே நேரம் கிழக்கில் முழுநிலவாகப்போகும் சந்திர வளர்பிறை உதிக்கும்..! பூர்ண அமாவாசையிலிருந்து சரியாக பதிநான்கே முக்காலாவது நாள் - இப்போது அது வளர்பிறை அல்ல... பவுர்ணமி முழுநிலவு ஆகி... ஏறக்குறைய சூரியன் கிழக்கில் உதிக்கும் நேரத்தில் மேற்கில் மறையும்..! 


சரி, இப்போது இங்கே ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும். என்னதான் சந்திரன் சூரியனோடு உதித்து சூரியனோடு மறைந்தாலும் அமாவசை அன்று பிறை நம் கண்களுக்கு தெரியும் நேரம் ஜீரோ வினாடிகள்..! காரணம் அது முழுக்க முழுக்க பகலில் இருப்பதால்..! 

பின்னர் சூரியன் உதித்த பின்னர் உதித்தாலும்... அது நாம் கண்ணுக்கு தெரியும் நேரம் என்னவோ சூரிய அஸ்தமனத்துக்கு பின்னர்தான். இதுதான் பிறை தெரியும் நேரம். இந்த நிலவு காயும் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்பிறையாக கூடி... முழு நிலவு தெரியும் பெளவுர்ணமி அன்று ஆக அதிக பட்ச தெரியும் நேரமாக... இரவு முழுதும் இருக்கும்..!

பெளர்ணமிக்கு பிறகு.... இனி சூரியன் மறைந்த பிறகு கிழக்கில் உதிக்க ஆரம்பிக்கும் தேய்பிறை... படிப்படியாக சூரிய அஸ்த்தமனத்துக்கு வெகு தாமாதமாக இரவில் உதித்து, அது சூரிய உதய நேரத்தை நோக்கி செல்லும். அதேபோல... படிப்படியாக சூரிய உதயத்துக்கு பின்னர் வெகு தாமதமாக மறைய துவங்கும்..! அதாவது.. சூரிய உதயத்துக்கு பின்னர் அதீத சூரிய வெளிச்சத்தால்... தேய்பிறையின் ஒளி இழந்து நம் கண்களில் இருந்து தேய்பிறை மறைந்து விடும்..! இதனால் வானில் தேய்பிறை நம் கண்களுக்கு தெரியும் நேரம் போகப்போக குறைய ஆரம்பிக்கும்...!

இப்படியாக சூரிய உதயத்துக்கு பின்னர் தாமதமாக மறையத்துவங்கும் சந்திரன்... கிட்டத்தட்ட சூரிய அஸ்தமன நேரத்தை நெருங்கி வரும்போது... அமாவாசை நாள் வந்துவிடும்..! அதாவது... சூரியன் மறையும் போது சந்திரன் மறைந்து உதிக்கும் போது உதிக்கும்...! இப்படியாக, இனி.... மீண்டும் முதல் பாரா சங்கதி ஆரம்பிக்கக்கூடிய இந்த இருபத்தொன்பதரையாவது  நாள், பூர்ண அமாவாசை நேரமானது, பூமியில் உள்ள இந்த மக்கள் இருக்கும் இடத்தில் இருந்து ஏறக்குறைய நேர் பின்னாடி உள்ள சுமார் பதினொன்றரை மணி நேரம் பிந்திய மக்களுக்கு நேரும்...! :-) 

பொதுவாக சந்திர பிறை தெரியும் வாய்ப்பு பற்றி கூறுவது சற்று கடினம். சந்திர சூரிய கிரகண கணக்கீடு கூட இதைவிட சுலபம்தான்..! என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா...?

பூமியை சந்திரன் சுற்றி வரும் தளம் சூரியனை பூமி சுற்றி வரும் தளத்துடன் ஒரே கிடை மட்ட பரப்பில் இருக்காது. அது ஒருபுறம் 5.2 டிகிரி... உயர்ந்தும் மறுபுறம் 5.2 டிகிரி தாழ்ந்தும் இருக்கும். இதனால்தான்... ஒவ்வொரு அமாவாசையும் பெளர்ணமியும் கிரகணம் வருவதில்லை. அதன் நிழல் பலமுறை பூமிக்கு வெளியே விழுந்து விடுகிறது..!


சந்திரன் பூமியை சுற்றி வர ஆகும் கால அளவும் சற்று வேறுபடுகிறது. இருந்தாலும் சராசரியாக... தன் சமதளத்தில் சந்திரன் ஒரு சுற்றுக்கு (Lunar Synodic Month = 29.530589 days) நொடியை முழுமை படுத்தினால்... 29.53059 நாட்கள்  (29 days, 12 hours, 44 minutes and 3 seconds) என்று ஆகிறது. இதனால்... அது எங்கிருந்து புறப்பட்டதோ அதே இடத்தில் வந்து முப்பதாவது நாள் சுற்றி வந்து நிற்பதில்லை..! இல்லையேல்... உலகின் பிறை பிறக்கும் இடம் ஒரே இடமாக இருந்திருக்கும். என்றென்றும் "நிலையான சர்வதேச பிறைக்கோடு" ஒன்றும் அமையபெற்று இருந்திருக்கும்..! அமையவில்லை..! இன்னும் வருஷத்துக்கு இரண்டு கிரகணம் மட்டுமே சரியாக அமையப்பெற்று இருந்திருக்கும்..! இவை யாவும் நிகழவில்லை..!


அப்புறம், இந்த சந்திர சுற்றுத்தளம்... பூமியின் நிலநடுக்கோட்டின் தளத்திலிருந்து 28.7 டிகிரி சாய்ந்து சுற்றுகிறது...! இதனால்தான்...  நிலநடுக்கோட்டில் இருக்கும் மக்களுக்கு மட்டுமின்றி துருவத்தில் உள்ள உலகமக்களுக்கும் சேர்ந்து அனைவருக்கும் கிரகணம் /பிறை தெரிவது சாத்தியமாகிறது..!

புவியை சுற்றும் சந்திரன், இம்மாதம் எந்த இடத்தில் அமாவாசை கிரகணம் ஏற்பட்டதோ... அங்கிருந்து சுமார் அரை நாள் முன்னரே சந்திரனின் ஒரு மாத சுற்று முடிந்து விடுகிறது. இதுவும் கூட சரியான அரைநாள் என்று (29 days 12 hours என்று) இந்திருக்குமேயானால்... சந்திரன் பிறை பிறக்கும் இடம் உலகில் இரண்டே இரண்டு என்றும், இம்மாதம் இங்கே எனில் அடுத்த மாதம் அங்கே என்று இரு சர்வதேச பிறைக்கோடுகள் உண்டாகி இருக்கும்..!

ஆனால், 44 minutes, 3 seconds.... என்று இருந்துகொண்டு... உலகின் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு மாதத்தில் பிறை பிறக்கும் புதுப்புது இடங்களாக ஆகி வருகின்றன..!

பூமி தன்னைத்தானே சுழலும்  அதே சுற்றுத்திசையில்தான் சந்திரன் பூமியை சுற்றி வருகிறது. இதனால் தான் ஒவ்வொரு நாளும் சூரிய உதயதிற்கும் சந்திர உதயதிற்கும் சுமார் 25 நிமிட வித்தியாசம் அதிகரித்து வருகிறது. உதயம் மறைவு இரண்டும் சேர்த்து ஒரு சூரிய நாளுக்கும் சந்திர நாளுக்கும் இடையே சுமார் 50 நிமிட வித்தியாசம் வந்து விடுகிறது.


24 மணி நேரம் கொண்ட ஒரு சூரிய நாளின் அடிப்படையில் கிழமை அமைகிறது. 23 மணி 44 நிமிஷம் கொண்ட சந்திர நாளின் அடிப்படையில் பிறை தேதி அமைகிறது. இதுதான் பலருக்கு விளங்குவது இல்லை..! 

'பிறை தேதி'க்கு 'சூரிய கிழமை'யை கொடுத்து தாமும் குழம்பி எல்லாரையும் குழப்புகிறார்கள். மாச கடைசியில் மண்டை காய்கிறார்கள்..! காய வைக்கிறார்கள்..!

ஒவ்வொரு 24 Hrs சூரிய நாளும் ஒவ்வொரு 23 Hrs 17 mins 06 sec பிறை நாளுக்கு சுமார் 43 நிமிஷங்கள் குறையும்..! இந்த வித்தியாசம் இப்படியே சேர்ந்து கொண்டே சென்று...மாச கடைசியில் முப்பது நாட்கள் கொண்ட சூரிய மாசத்தை விட சுமார் 21 மணி 45 நிமிஷ நேரம் சந்திரமாசம் குறையும்..! 24 மணி நேரம் என்று இறுதியில் முழுமை பெறாத காரணத்தால், இரு கிழமையில்தான் சந்திர மாசம் முடியும் & ஆரம்பிக்கும்..! வருஷ இறுதியில், இரு காலண்டருக்கும் சுமார் 11 நாட்கள் வித்தியாசம் வரும்..! இது... பிறை மேட்டரில் மார்க்கம் சொல்லும் அறிவியல் நியதி..!

எனவேதான் சந்திர மாசம் ஒரு தடவை 30 நாட்களாகவும் இன்னொரு முறை 29 நாட்களாகவும் (நபி ஸல் அவர்கள் கை விரல்களை மூன்று முறை விரித்து கட்டை விரலை மட்டும் மடக்கி தம் மக்களுக்கு சுமார் 29.5 நாட்கள் என்று விளக்கி சொன்னவாறு) அமைகிறது..!..!

இது போதாது என்று... சந்திரன் பூமியை சுற்றும்போது... பூமியும் நிலையாக ஓரிடத்தில் நில்லாமல்... சூரியனை சுற்றிக்கொண்டு வருகிறது..! இதையும் கணக்கு பண்ணி... சந்திரன் பூமியை சுற்றி வருகிறது. இதன் சுற்றுவட்டப்பாதை எப்படி இருக்கிறது என்றால்... ஸ்ப்ரிங்-ஐ இழுத்தது போல... சுருள் சுருளான டெலிஃபோன் வயர் சற்றே இழுபட்டது போல...நிறுக்கும். மேலிருந்து பார்த்தால்...  "மூணு சுழி ண வை.... '12 சுழி ண' (!?) என்று வட்டமாக போட்டால் எப்படி இருக்கும்...?" அப்படி இருக்கும்..! 

.
அது கூட...  பூமியின் சரியான ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்தால் சரியான முடிவில் முடியாது...! காரணம்... சந்திர சுற்று 354.36708 நாட்கள். புவியின் சுற்றோ 365.25 நாட்கள்..! இங்கேயும் விட்டகுறை தொட்டகுறை..! இன்னும் ஒரு பிரச்சினை... சந்திரனின் ஓடு பாதை நீள்வட்டம்..! சரியான வட்டம் அல்ல..!

ஆனால் ஒன்று மட்டும் பக்கா பர்ஃபெக்ட்..! சந்திரன் தனது மறுபாதியை நமக்கு காட்ட மறுத்து விடுகிறது. அது எப்படி..? பூமியின் சுழற்சி திசையில் அது தன்னைத்தானே... 27.32166 (27 days, 7 hours, 43 minutes, 11.6 seconds)  நாட்களில் ஒரே ஒருமுறை சு(ழ)ற்றிக்கொள்கிறது..! இதனால் நமக்கு எப்போதும் காட்டிய ஒரே முகத்தையே காட்டுகிறது..! 


ஆக இவ்வளவு விஷயங்களையும் கணக்கில் கொண்டு... சந்திர - சூரிய கிரகணம் ஏற்படப்போகும் நொடி முதற்கொண்டு மிக மிக துல்லியமாக பல ஆண்டுகளுக்கு முன்னிலிருந்தே வானியல் வல்லுனர்கள் கணக்கிடுகின்றனர்..! ஆனால், அதேபோல பிறை பிறக்கும் நேரத்தை சொன்னாலும்... இன்னும் அந்த பிறை மனிதனுக்கு தென்படுமா தென்படாதா என்பதை மட்டும் துல்லியமாக கணக்கிட அறிவியலாளர்களால் இதுவரை இயலவில்லை..! காரணம் என்ன...?

பிறை பார்க்கும் இடத்தில் உள்ள சீசன், அன்றைய மேகமூட்டம், அன்றைய வானிலை, அந்த இடம் அமைந்திருக்கும் இடத்தில் பூமியின் சாய்வு, துருவ மாறுபாடு, கடல் மட்டத்தில் இருந்து அந்த  பிறை பார்க்கும் இடத்தின் உயரம், காற்றின் காரணமாக அங்கே நிலவும் புழுதி மண்டலம்...  போன்ற, பல பாதிக்கும் காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது..!

இதனால்தான்.... இன்றைய நாள் வரை... கிரகண நேரத்தை நொடி சுத்தமாக  துல்லியமாக கணக்கிடும் அறிவியலுக்கு மழை மேகம் எந்த ஊரில் திரளும்... காற்று எந்தப்பக்கம் அடித்து புழுதி மண்டலம் கிளம்பி பிறையை எங்கே மறைக்கும் என்று கணக்கிட முடியவில்லை...! இது இறைவன் மட்டுமே அறிந்த ஞானம்..! மேட்டர் இதுதான்..! பிறை பிறக்கும் நேரத்தை துல்லியமாக அறியும் அறிவியலுக்கு... அதை நாம் காண முடியுமா முடியாதா என்று மட்டும் சொல்ல இயலவில்லை..!

இதனால்தான்... இன்றைய நிச்சயமற்ற வானியல்... மழை-மேகம்-காற்று விஷயத்தில் "...கூடும்", "...லாம்" "...என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றுதான் வானிலை ஆராய்ச்சி மையம் இன்றும் கூட நிச்சயமற்றதாக அறிவித்துக்கொண்டு இருக்கிறது..! :-))

இப்படி எல்லா நுட்பங்களையும் கருத்தில் கொண்டு... தன் நீண்ட கால ஆய்வுக்கு பின்னர், அதை 300 முறை சோதனைக்குட்படுத்திய பின்னர், தம் தலைக்கு மேலே நடுப்பகலில் பூரண கிரகண அமாவாசை கண்ட மக்களுக்கு, அடுத்தநாள் அந்திசாய்ந்த நேரத்தில், (6 + 24 மணி நேரம்) சுமார் 30 மணி நேரம் கழிந்த இந்த தலைப்பிறை அம்மக்களின் கண்களுக்கு தெரியும் வாய்ப்புகள் பற்றியும், அதை எப்படி பார்க்க வேண்டும் என்றும், பெர்னார்ட் டேவிட் எல்லோப் என்ற வானசாஸ்த்திர அறிஞர், கடந்த 1997 ஆம் ஆண்டு ஆய்வுகளை முடித்து பலரும் ஏற்றுக்கொள்ளத்தக்க முடிவுகளை மிகவும் அழகிய வரைபடங்கள் மூலம் தெளிவாக கூறினார்..!

அது பற்றி இறைநாடினால் சில தினங்கள் கழித்து....!

பிற்சேர்க்கை : இதன் தொடர்ச்சியை படிக்க...'கிளிக்' பண்ணுங்க சகோ.

14 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...