அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, May 13, 2011

58 'க.' & 'ஜெ.'... 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அதிர்ச்சி..!

வாக்காளர்களால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு… 'க.' & 'ஜெ.' 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அதிர்ச்சி..!  

மிகவும் கஷ்டப்பட்டு, படாதபாடுபட்டு, அல்லும்பகலும் அயராது சிந்தித்து, பல போராட்டங்கள் கண்டு, இழப்புகள் பெற்று, பல வருடங்கள் கடந்து, ஒருவழியாக மேற்கு வங்கத்தில் 34 வருட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு... முற்றுப்புள்ளி வைத்தே விட்டார், மம்தா பானர்ஜி..! ஜோதிபாசு காலங்களில், மம்தா 30... 40... தொகுதிகளை பெறுவது கூட அன்று இமாலய சாதனையாக போற்றப்பட்டது. ஆனால், இன்று 225/294 வென்று அமோக வெற்றி பெற்று இருக்கிறார். இதுதான் போராடி பெற்ற வெற்றி..!



உயரே 'ஜெ.' பால்கனி போஸ்... கீழே 'ம.' மக்களுடன் ஒருத்தராய்...

.
ஆனால், அதே நேரம் தமிழகத்தில் 'ஜெ.' பெற்ற வெற்றி எப்படிப்பட்டது..? மம்தா போல மக்களுடன் இரண்டற கலந்து, ஆளும் கட்சியின் ஊழலை எதிர்த்து, தினமும் கஷ்டப்பட்டு போராடி… அதன் மூலம் பெற்ற வெற்றியா இது..? இல்லையே..! பொதுமக்களுக்கு 'க.' ஆட்சி பிடிக்காமல் போய், போக்கிடம் வேறு இன்றி, வேறு வழியேயின்றி ஜெ.வுக்கு ஓட்டு போட்டுத்தொலைத்து விட்டார்கள்..! இதனால் பெற்ற அமோக வெற்றிதான் இது..! அதாவது ஆளுங்கட்சியின் ஊழல்ஆட்சி தந்த வெகுமதிதான் இந்த அமோக வெற்றி..!

ஆக, வெளிவந்திருக்கும் இத்தேர்தல் முடிவுகளை காணும் போது, நமக்கு என்ன விளங்குகிறது என்றால், இது, வாக்காள பெருமக்களால் ஊழல் கறை படிந்த க.வுக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்றாலும், 'ஜெ.'வுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றே 'ஜெ.'புரிந்து கொள்ள வேண்டும். எப்படி..?

விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் என்னென்ன? 

வாக்காள பொதுமக்களாகிய இவர்களுக்கு…
  1. ஊழல் செய்யும் கட்சியினரும் அரசும் சுத்தமாய் வேண்டாம்.
  2. எப்போதும் தடையில்லா மின்சாரம் வேண்டும்.
  3. இனி இலவசங்கள் பெற்று ஏமாற பிரியமில்லை.
  4. குடும்ப உறுப்பினர்களின் அரசியல் அறவே பிடிக்காது.
  5. ஆளுங்கட்சி ஊடகங்களின் மோனோபோலி அராஜகம் அகலவேண்டும்.
  6. விலைவாசி கட்டுக்குள் இருக்கவேண்டும்.
  7. தமிழக மீனவர்கள் உயிர் மீது அக்கறை உள்ளதுபோல சும்மா நடிக்கக்கூடாது.
  8. ஈழத்தமிழர்கள் இனப்படுகொலையை எதிர்ப்பது போலவும் நடிக்கக்கூடாது.
  9. டாஸ்மாக் மூலம் கஜானா நிரப்புதல் கேவலம்.
  10. ஆட்சியில் எத்தனை நிறைகள் இருந்தாலும் பாரிய குறைகள் இருப்பின், நிறைகள் அனைத்தும் மறக்கப்பட்டு எதிர்க்கட்சி வெற்றி பெற வைக்கப்படும்.
வாக்காள பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்..?

"இந்த எச்சரிக்கைகளை நன்கு புரிந்து கொண்டு இனி, ஜெ. இதுபோல எதுவும் நடக்காமல் நல்லாட்சி புரிய வேண்டும்" என்றுதான் நம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால்…

'ஜெ.' என்ன நினைக்கிறார்..?

"என் இனிய தமிழக மக்களே..! என்னதான் நல்லது கெட்டது  செய்தாலும், நீங்கள் எப்போதுமே எதிர்கட்சிக்குத்தான் ஓட்டு போடுவீர்கள் என்று எனக்கு நன்கு தெரியும். 1991-96 இல்அத்தனை ஊழல்கள் செய்தும், பத்துக்கும் மேலே வழக்குகள் இருந்தும், அதில் இரண்டில் குற்றவாளி என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டும், கைது ஆகி சிறையும் சென்றும், இதனால் நான்கு இடங்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டும்… அப்போதும் என்னை நீங்கள், 2001-ல் அமோக வெற்றி பெற வைத்த போதே இதனை அறிந்து கொண்டேன். எப்படியும் நான்தான் 2011-ல் வெற்றி பெறுவேன் என்று..! மேலும், வைகோவை 'எதிர்கட்சித்தலைவர்' என்று ஆக்கி சட்டபேரவையில் அவரை அவமானப்படுத்த விரும்பவில்லை..! அதனால்தான் அவரைக்கூட கழட்டி விட்டேன். இனிதான் எல்லாத்துக்கும் சேர்த்து கேப்டனுக்கு இருக்கு கச்சேரி..!

மக்களே..! உங்கள் எச்சரிக்கையை படித்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகிறது. இவ்வளவு அப்பாவிகளா நீங்கள்? இனி, ‘என் பாணியில்தான்’ ஆட்சி இருக்கும். திமுகவின் ‘சாதனைகள்’ அனைத்தும் முறியடிக்கப்படும். இன்னும் ஐந்து வருடங்கள் உள்ளன. அதற்குள் ஒரு கை பார்த்து விடுகிறேன்..!"
.

'க.' என்ன நினைக்கிறார்..?

"இந்த அம்மாவுக்கு தெரிந்த அதே 2001-ல், எனக்கும் இந்த ரகசியம் தெரியும்… என்னதான் நல்லாட்சி கொடுத்தாலும், தமிழக மக்கள் மாற்றி மாற்றித்தான் ஓட்டு போடுவீர்கள் என்று..! அதனால், ஐந்து வருடம் பொறுமையாக இருந்தோம். பின்னர் 2006-ல் வென்றவுடன், இம்முறை சுதாரித்து கொண்டோம்.  பல ‘சாதனைகள்’ செய்தோம்.

இப்போது இந்த அம்மையார்தான் வெற்றி பெறுவார் என்று தெரிந்ததால்தான் நான் இத்தேர்தலில் சென்னையை விட்டு வெளியேறினேன். இதனை நாங்கள் எதிர்பார்த்தோம். அனாலும் அடுத்த ஐந்துவருடங்கள் கழித்து நாங்கள் மீண்டும் வெல்வோம் என்பதில் கிஞ்சித்தும் ஐயம் இல்லை. எங்கள் ‘சாதனையை’ இந்த அம்மையார் நிச்சயமாக முறியடிப்பார் என்பதிலும் எங்களுக்கு துளியும் சந்தேகம் இல்லை. ஆனாலும், இவர்... எவ்வளவுதான் பெரிய 'இமாலய சாதனைகள்' செய்து வைத்திருந்தாலும், நாங்கள் 2016-ல் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி வந்து  அந்த 'சாதனைகள்' அத்தனையையும் அப்போது முறியடித்துக்காட்டுவோம்..!? இது அண்ணா…(துரை இல்லை)…ஹசாரேக்கள் மீது சத்தியம்..!"

ஆக மொத்தத்தில் வாக்காள பொதுமக்கள் : அதிர்ச்சியோ அதிர்ச்சி..!

டிஸ்கி : இவர்கள் இருவரும் இப்படி நினைத்தால்... இதுபோல தொடர்ந்து நல்லாட்சி எதிர்பார்த்து இப்படி ஓட்டுப்போட்ட வாக்காள பொதுமக்களுக்கு  "பதிலடி" கொடுத்துக்கொண்டே இருந்தால் என்னாவது..? இனி தமிழகத்தை இந்த இரண்டு கட்சிகளிடம் இருந்து அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்..!

58 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...