அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Saturday, April 16, 2011

14 பிச்சைக்காரர்களை வெறுக்கும் இஸ்லாம்

முந்தைய ( ஈயென இரத்தல் Vs. கொள்ளென கொடுத்தல் ) பதிவில், நான் எடுத்திட்ட அந்த 9:60 குர்ஆன் வசனத்தில் வரக்கூடிய யாசிப்போர் (ஃபக்கீர்கள்) பற்றி குறிப்பிட்டிருந்தேன். "கூர்ந்து கவனித்தால் அவ்வசனத்தில் மேற்கூறப்பட்ட ஏனைய எட்டு பிரிவினரில் ஒரே ஒரு பிரிவினர்தான் யாசிப்பவர்...! யாசிப்பதால், 'இவர் தர்மம் செய்யப்பட வேண்டியவர்' என்று ஒரு பிரிவினரை மிக இலகுவாக அறியலாம். இதில் ஏழைகளும் இருப்பர்..! ஏழை அல்லாதோரும் இருப்பர்..! ஏனென்றால்... தேவையுடைய ஏழைகள் (மிஸ்கீன்கள்) என்போர் இந்த யாசிப்போர் (ஃபக்கீர்கள்)-ஐ அடுத்து தனியாக அந்த இறைவசனத்தில் சொல்லப்படுகிறார்கள்".


மிஸ்கீன்  (தேவை இருந்தும் பிச்சை கேட்காத ஏழை) வேறு.....,
ஃபக்கீர்  (பிச்சை கேட்பவர்) வேறு, என்பதனை.......

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள எச்செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான்; பிறரும் அவனுடைய நிலையை அறிந்து தர்மம் செய்ய மாட்டார்கள், தானும் வலியச் சென்று கேட்கமாட்டான்." (இத்தகையவனே உண்மையான ஏழையாவான்) (புஹாரி-1479) 

........என்ற ஹதீஸின் மூலம் அறியலாம்.

எனது இந்த இடுகையில் 'கொள்ளெனக்கொடுத்தலின் உயர்வு' பற்றி நான் ஏதும் சொல்லப்போவதில்லை. காரணம், "தொழுகையை நிலைநிறுத்தியும், ஜக்காத்தை கொடுத்தும் வருவீர்களாக!"--என்று குர்ஆனில் எண்ணற்ற இடங்களில் தொழுகையுடன் இணைத்து வலியுருத்தப்பட்டும், அதனை ஏவும் ஏகப்பட்ட ஹதீஸ்களும் இருப்பதை, நாம் பலமுறை பல இடங்களில் கேட்டு, படித்து நன்கு அறிந்தோர்தான் என்பதாலும், அதனை வாழ்வில் தவறாது நிறைவேற்றி வரும் மக்களாகவும் நம்மில் பெரும்பான்மையினர் இருப்பதாலும்..! 

ஆகவே, 'ஈயென இரத்தலின் இழிவு' பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்று மட்டும் இப்பதிவில் பார்ப்போம். காரணம், இது அதிகம் வெளியே சொல்லப்படவில்லை என்பதாலும் பலர் அறிந்திராமல் இருப்பதாலும்...!

'பிச்சை எடுப்பது கேவலம்' என்று நாம் பொதுவாக விளங்கி வைத்திருக்கிறோம். அதேபோல 'தர்மம் செய்வது மிகவும் உயர்ந்த செயல்' என்றும் விளங்கி வைத்திருக்கிறோம். எனில்..., 'தர்மம் செய்தல் என்ற நற்செயலுக்கு பிச்சை எடுத்தல் எனும் இழிசெயல்தானே தூண் போல தாங்கி நிற்கிறது..?' என்றும், 'ஓர் உயர்ந்த செயல், எப்படி ஓர் இழிசெயலை ஊக்குவிப்பதாய் அமையக்கூடும்?!' என்றும், இஸ்லாத்தில் தர்மம் செய்வதை ஒரு கட்டாயக்கடமை என்று முஸ்லிம்களுக்கு விதிக்கப்பட்டதால், 'இது... பிச்சைக்காரர்களையும், உழைக்காமல் உண்டு வாழும் சோம்பேறி மக்களையும் உருவாக்கும் ஒரு மார்க்கம்' என்று, 'பகுத்தறிவுவாதிகள்' என்றும், 'முற்போக்கு சிந்தனை உடையோர்' என்றும் தம்மை கூறிக்கொள்ளும் நாத்திகர்களால் பரப்புரை செய்யப்படுகின்றது. எனவே, இஸ்லாம் இது பற்றி என்னதான் சொல்கிறது என்று நாம் அறிவித்தாக வேண்டும்.

யாரென்று தெரியாத (சென்ற பதிவில் நான் குறிப்பிட்ட) வெளியூர் மவுலானாக்கள் மூலம் செய்யப்படும் ஜும்மா பயான்கள் (வெள்ளிக்கிழமை சொற்பொழிவுகள்) பெரும்பாலும் ஜகாத்தின்/ஸதகாவின் சிறப்புக்கள் பற்றி மட்டும் பேசுவதாக குறிப்பிட்டேன். அது போன்ற பயான் முழுமையான பயான் அல்ல. ஏனெனில், நம் இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் ஜும்மா பயான் எப்படி இருந்தது..?

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள், மிம்பர் (வெள்ளிக்கிழமை ஜும்மா அன்று சொற்பொழிவு மேடை) மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, ‘உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியதும்” என்றும் கூறினார்கள். (புஹாரி-1429)
.

ஆம்..! நபி(ஸல்)அவர்கள் தர்மம் செய்வதை மட்டும் மக்களிடம் சொல்லவில்லை. அதோடு, சுயமரியாதை பேணுதல், யாசகம் கேட்காதிருத்தல் போன்றவற்றையும் நன்கு வலியுறுத்தி கூறியுள்ளார்கள் என்பதை நாம் நன்கு கவனிக்கவேண்டும்.
.

சிலர் நபி(ஸல்) அவர்களிடம் யாசித்தார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் நபியவர்களிடம் அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் அவர்கள் கேட்க, நபி(ஸல்) அவர்கள் மீண்டும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்களிடம் இருந்தது அனைத்தும் தீர்ந்து போன பின் "என்னிடமுள்ள செல்வதை நான் உங்களுக்குத் தராமல் பதுக்கி வைக்கவே மாட்டேன். ஆயினும் யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான்; யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான்; மேலும், பொறுமையை விடச்சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை" என்றார்கள். (புஹாரி-1469)

மேற்படி ஹதீஸ் தெளிவாக சொல்கிறது. யாசித்தலின் இழிவை..! சரி, யாசிக்காமல் வேறு என்ன செய்யவேண்டுமாம், தேவையுடையோர்..? அதற்கும் விடை உண்டு, அடுத்து வரும் ஹதீஸில்..!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : "என் உயிர் யாருடைய கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் தம் கயிற்றை எடுத்துக் கொண்டு விறகு வெட்டி (கட்டி) அதைத்தம் முதுகில் சுமந்து (விற்று)சம்பாதிப்பது, ஒருவனிடம் வந்து யாசிப்பதைவிடச்சிறந்ததாகும். அவன் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்." (புஹாரி-1470)  

ஆம்..! கஷ்டப்பட்டு உழைக்கச்சொல்கிறது இஸ்லாம். யாசிக்க  அல்ல..! அதேநேரம், யாசிப்பவனுக்கு-அதையே தொழிலாக வைத்து யாசிப்பவனுக்கு ஒருவர் (ஏற்கனவே தமக்குறிய ஜகாத் அளவு கடமையை நிறைவேற்றியவராக இருக்கலாம் இவர்) கொடுக்காமல் மறுக்கவும் செய்யலாம் என்றும் அறியலாம்.

அதாவது, யாசகம் கேட்போரின் உண்மை நிலையை, சந்தேகமற அறியும் கொடுப்போருக்கு சிலநேரங்களில்..."ஈயேன் என்றல் இழிந்தது அல்ல!" எனவும் அறிகிறோம்.

மேலும் ஒரு ஹதீஸ் உண்டு, அதில் நபி(ஸல்) அவர்களிடம் யாசகம் கேட்ட ஒரு நபித்தோழரின் மனமாற்றத்தையும், பிற்காலங்களில் ஆண்ட இரண்டு கலீஃபாக்களிடமும் அவர் காட்டிய சுயமரியாதையையும் நன்கு கவனியுங்கள்.

ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். நான், நபி(ஸல்) அவர்களிடம் (பொருளுதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, "ஹகீமே! நிச்சயமாக இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படும்; இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது" எனக் கூறினார்கள்.

நான், இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன்.

அபுபக்கர்(ரலி) (ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர்(ரலி) (தம் ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர்(ரலி), ‘முஸ்லிம் சமுதாயமே! தம் உரிமையைப்பெறுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற மறுக்கிறார். இதற்கு நீங்கள் சாட்சி!’ எனக் கூறினார். ஹகீம் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என ஸயீத் இப்னு அல் முஸய்யப் கூறுகிறார். (புஹாரி-1472) 

'யாரிடமும் யாசகம் கேட்க மாட்டேன்' என்று கூறியவர், தான் ஜகாத் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு ஏழ்மையுள்ள நிலையில் இருந்தபோதும், தான் எவரிடமும் யாசகம் கேட்காமல் இருக்கையில், இஸ்லாமிய அரசிடமிருந்து தமக்குறிய உரிமை தம்மிடம் தேடி வரும் போதுகூட, "கொள்ளேன் என்றல் உயர்ந்தது அல்ல..!" என்றும் உமர்(ரலி) அவர்கள் கூறுவதிலிருந்து அறிகிறோம்..!

மேலும் மேலும் பிச்சை  கேட்பது அல்லாஹ்வால் வெறுக்கப்பட்ட செயலாகும்.

"'இவ்வாறு சொல்லப்பட்டது'; 'அவர் சொன்னார்' ('இவர் சொன்னார்'... என ஆதாரமின்றி பேசுவதும்), பொருள்களை வீணாக்குவதும், அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதும் ஆகிய மூன்று செயல்களை நிச்சயமாக அல்லாஹ் வெறுக்கிறான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புஹாரி-1477 ஹதீஸின் சுருக்கம்)

தன்  தேவைக்கும் அதிகமாக யாசிப்பதையும் இஸ்லாம் மிகக்கடுமையாக சாடுகிறது. எந்த அளவுக்கென்றால்...

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "தேவைக்கு அதிகமாக மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூடச்சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்…" (புஹாரி-1474) 

இங்கு  நாம் மிக முக்கியமாக கவனிக்கவேண்டியது... "தேவைக்கு அதிகமாக..". சிலநேரம் சிலருக்கு இக்கட்டான சூழல் வரக்கூடும். எதுமாதிரி எனில், புது இடம், புது மக்கள், உள்ள சூழலில் தம் பர்ஸ் மற்றும் உடைமைகள் எல்லாம் தவறி இருக்கலாம். புதியவரிடம் கடன் கிடைக்காது. புது இடத்தில் எங்கு சென்று என்ன வேலை தேட வேண்டும் என்றும் புரியாது. மேலும், அகோர பசியில் உள்ள அவ்வேளையில் உழைத்து சாப்பிட உடல் ஒத்துழைக்காத பட்சத்தில் என்ன செய்வது..? அப்போதைய அவரின் உடனடி தேவை பசிக்கு உணவு..! அப்புறம் தன் ஊருக்கு/நாட்டுக்கு சென்று சேரவேண்டும் என்பது போன்ற அனைத்தும் பின்னர்தான். ஒரு கோடீஸ்வரர் உட்பட இச்சூழலில் நாம் உட்பட எவரும் அகப்படலாம். இவரின் தேவைக்கு அப்போதைக்கு இவர் யாசகம் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

இந்த மாதிரியான தேவைக்காக வேறு வழியேயின்றி கேட்கப்படும் யாசகம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படுகிறது. அதனால், பிச்சை எடுப்பதை 'ஹராம்' என்று கூறி தடுக்கவும் இல்லை. ஆனால், அதுவே தொடர் கதையாக ஆகி, தேவை இன்றி தேவைக்கு மீறி பிச்சை கேட்பது தொழிலாக ஆகிவிடக்கூடாது. இதை இஸ்லாம் வன்மையாக சாடி எதிர்க்கிறது.

இன்று பல ஊர்களில் பார்க்கிறோம். குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஊர் ஊராக ஒரு கூட்டம் செல்கிறது. ஓவ்வோர் ஊருக்கும் ஒரு நாள்-கிழமை என்று முறை வைத்து ஊர் வலம் வருகிறார்கள். வாரத்தின் அனைத்து நாட்களும் ஏழு ஊர்களுக்கு சென்று பிச்சை எடுப்பதே தொழில். இது சரியா என்று யோசிக்க வேண்டும். இவர்களை உருவாக்க வந்ததல்ல இஸ்லாம். இவர்களிடம் பொருளாதார தன்னிறைவு காணச்செய்து இவர்களை இல்லாது ஒழிக்க வந்த மார்க்கம்தான் இஸ்லாம். இதனை நாமும் உணர்ந்து அவர்களுக்கும் உணர்த்தியாக வேண்டும்.

'தர்மமும் செய்யவேண்டும்..! பிச்சையும் கேட்கக்கூடாது..!' ...என்றால்... அதெப்படி..?! என்று 'அவர்கள்' நினைக்கூடும். ஆனால், இது 'தவறான புரிதல்' என்று சொலவதை விட... 'இவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படையே விளங்க வில்லை' என்றுதான் சொல்லலாம். அது எப்படி என்பதையும், எந்த முறையில் தர்மம் வழங்கப்பட வேண்டும் எனவும், எப்படி வழங்கினால் ஏழைகளின் வறுமை ஒழியும் எனவும் அடுத்த பதிவில் இறைநாடினால் இன்னும் விரிவாக காண்போம்.
....
டிஸ்கி:


'இஸ்லாம் கூறுகிறது..' 'இஸ்லாம் சொல்கிறது..' 'இஸ்லாத்தில் இப்படியுள்ளது..' என்றெல்லாம் நான் கூறினால், அது... குர்ஆனில் இறைவன் கூறுவதாகவோ...
..அல்லது...
நபி மொழிந்தவை, நபி வாழ்ந்து காட்டியமை, பிறர் சொல்ல/செய்ய நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்தமை... ஆகிய இம்மூன்றையும் இறைவன் அங்கீகரித்ததாகவோ...
...இருந்தாக வேண்டும் என்பதை அறிக. ஏதும் தவறிருப்பின் எனக்கு அறியத்தருக..!


அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்பதிவின் தொடர்ச்சியாக தர்மம் செய்வது என்பது செல்வந்தருக்கு மட்டும் சொல்லப்படவில்லை என்பதனை பற்றி  இங்கே வாசியுங்கள் சகோ..!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

14 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...