அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, April 3, 2011

25 டோப்பிடஹான் செய்முறை (படங்களுடன் விளக்கமாக)

டோப்பிடஹான்  :-  இப்பெயரை இதற்குமுன் கேள்விப்பட்டதுண்டா...? இது ஒரு நொறுக்குத்தீனி பதார்த்தம். இது தஞ்சை மாவட்டத்தில்... குறிப்பாக  பாபநாசம், ராஜகிரி, பண்டாரவடை, வழுத்தூர், மாங்குடி, அய்யம்பேட்டை ஆகிய ஊர்களில் மிகவும் பிரசித்தம். வெளிநாட்டில் இருக்கும் தங்கள் குடும்பத்து ஆண்களுக்கு இவ்வூர் பெண்களால் சிரத்தையுடன் செய்து, விடுமுறைக்கு வந்து செல்லும் அவர்களின் வெளிநாடுவாழ் நண்பர்கள் மூலம் கூட பெரிய டின்களில் பார்சல் அனுப்பப்படும் அளவுக்கு மக்களிடம் இதற்கு என்று ருசியில் தனி கிரேஸ் உண்டு. (இதன் பெயர்க்காரணம் தெரிந்தவர் சொல்லுங்கள்...அறிய ஆவலாய் உள்ளேன்..!)

'அப்பேர்ப்பட்ட மகத்துவமிக்க' இந்த டோப்பிடஹானின் செய்முறையை இப்பதிவில் பார்க்கலாம். (என்னது...? pinnoottavaathi-யில் சமையல் குறிப்பா..! 'அதெல்லாமா தெரியும்' என்று ஆச்சர்யமா..?) ஹி..ஹி..இப்பதிவு என்னுடைய எண்ணம் இல்லை..! ஏனெனில்,  "டோப்பிடஹான் - என கூகுளிட்டால்... இப்படி ஒரு பெயரே தமிழ் சமையல் குறிப்புலகில் இல்லை என்ற பெருங்குறை இனி இருக்ககூடாது..!?" என்று என் வாழ்க்கைத்துணைவியார் விரும்பியதால்..., அவரின் செயல்முறை விளக்கங்களுடன் அவர் செய்த டோப்பிடஹான் படங்களுடன் இனி அவர் சொல்லச்சொல்ல நான் டைப் அடிக்கிறேன்..! இப்பதிவை நீங்கள் படித்துவிட்டு, இதேபோல செய்து சாப்பிட்டு மகிழுங்கள்..!    :)

தேவையான பொருட்கள் : 
  • மைதா மாவு - 1 கிலோ
  • முட்டை  - 1
  • பசும்பால் - 1 கப் (150 ml)
  • சீனி - 1 தேக்கரண்டி
  • சோடாப்பு - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 1 லிட்டர் (பொறித்தெடுக்க)
  • மிக்சியில் பொடியாக்கப்பட்ட உலர்ந்த சீனிப்பொடி   - 200 கிராம்
செய்முறை விளக்கம்

எண்ணெய், சீனிப்பொடி தவிர மற்றவற்றை சேர்த்துக்கொண்டு முதலில் புரோட்டாவிற்கு மாவு பிசைவது போல் பிசைந்து வைத்து அரை மணிநேரம்,  ஈரத்துணி (மாவு காய்ந்துவிடாமல் இருக்க) போட்டு மூடி ஊற வைக்க வேண்டும். 

ஊறிய மாவை உருண்டை போட்டு சற்று தட்டையாக்கி எண்ணெய் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும்.

 ஒரு உருண்டையை சப்பாத்திக்கட்டையில் வைத்து  எண்ணெய் ஊற்றி  மெலிதாக இப்படி தேய்க்கவும்.


தேய்த்த மாவை கத்தியால் சதுரம் சதுரமாக இப்படி அறுக்கவும்.

 
ஒரு சதுர துண்டை எடுத்து அதன் எதிர் மூலைகளை பிடித்து முக்கோணமாக  இப்படி மடிக்கவும். படத்தின் (top right)  பகுதியில் உள்ள மூலையை பிடித்துக்கொள்ளவும். அடுத்து....


மற்ற இரு எதிர் மூலைகளையும் பிடித்து எதிர்ப்புறமாக 
படத்தில் குறிப்பிட்டபடி மடிக்கவும்.


அவ்விரு எதிர் மூலைகளையும் இப்படி இழுத்து பிடித்து...


அவை இரண்டையும் ஒன்று சேர்த்து இதமாக அழுத்தி ஒட்டி முருக்கி விடவும்.


இதேபோல எல்லா சதுரங்களையும் செய்து  முடித்துவிட்டு, ஒரு  தட்டில் இப்படி வைக்கவும். பின்னர், மீதி இருக்கும் அனைத்து மாவு உருண்டைகளையும் இதேபோல தேய்த்து, அறுத்து, இப்படி மடித்து, முடிக்க வேண்டும்.


மடித்து முடித்த அந்த அனைத்து பச்சை டோப்பிடஹான்களையும் வானலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு வந்த பின்னர், பொன்னிறமாக பொறித்து எண்ணெயை வடித்து எடுக்கவும். 


சர்க்கரை நீர் உள்ளவர்கள் சீனிப்பொடி தூவிக்கொள்ளாமல் (இனிப்பு சேர்க்காமல்) இப்போது  அப்படியே சாப்பிடலாம். 
அதுவும் நன்றாகத்தான் இருக்கும்.


இனிப்புநீர் இல்லாதோர், இனி பொடி செய்யப்பட்ட அந்த சீனித்தூளை வறுத்த டோப்பிடஹான்களில் தூவி எல்லா இடங்களிலும் பரவுமாறு பிரட்டி.........



" டோப்பிடஹான் "
 
அப்புறம்  என்ன...?

மணமணக்கும் ருசியான மொறுமொறுப்பான 'டோப்பிடஹானை'  சூடாக சாப்பிட வேண்டியதுதானே சகோ...!


***********************************************************************

25 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...