அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, December 12, 2010

17 இஸ்லாமிய ஹிஜாபும் பெண்ணுரிமையே..!

        //இஸ்லாத்தில் ஆணடிமைத்தனம் & பெண்ணாதிக்கம்..! என்ற என் சென்ற பதிவின்// ஒரு பின்னூட்டத்தில், ' கிராண்ட்ஸ்லாம் டென்னிசில், அவரவர் உடல் வாகிற்கு தக்கபடி ஆண்கள் ஐந்து செட்டுகள் ஆடும்போது பெண்களை மூன்று செட்டுகள் மட்டுமே ஆடச்சொல்வது போன்றதுதான் பதிவில் சொன்ன ஏனையவை..! ஒருவேளை டென்னிசில் இதையே இஸ்லாம் சொல்லி இருந்தால் "பெண்களின் ஐந்து செட் ஆடும் உரிமையை இஸ்லாம் அநியாயமாய் பறித்து விட்டது" என்று வேண்டுமென்றே திரிக்கப்படும். "இஸ்லாத்தில் என்னே ஒரு பெண்ணடிமைத்தனம் மற்றும் ஆணாதிக்கம்..!" என்றே பரப்பப்படும் ' என்று சொன்னதை ஒருவர் கிண்டலடித்திருந்தார். இது மிகைப்படுத்துதல் அல்லது பொய் என்று நினைத்துவிட்டார் போலும். அதனால், அதனை  விளக்கி 'புரியும் விதத்தில்' ஒரு பதிவிடுகிறேன் என்று சொல்லி இருந்தேன். மேற்படி விஷயம் ஒரு உதாரணமே என்றாலும் நிகழும் நிஜங்கள் நான் சொன்னதைத்தான் மெய்ப்பிக்கின்றன.

'இங்கு யாருக்கும் பெண்ணடிமைத்தனத்திற்கும் பெண்ணுரிமைக்கும் வித்தியாசம் தெரியவில்லை' என்று சொல்லமாட்டேன். கண்டிப்பாக அறிந்தே வைத்திருக்கிறார்கள். ஆனால், இஸ்லாம் கூறும் பெண்ணுரிமைகள் அனைத்தையும், பெண்ணடிமைத்தனம் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யும்  மோசமான போக்குதான் இஸ்லாத்திற்கு எதிரான ஏதோ ஒரு வஞ்சக சூழ்ச்சியாக தோன்றுகிறது.

மற்றவர்களுக்கு அரைகுறையாக  ஆடை அணிய இருக்கும் பெண்ணுரிமை, முழுமையாக ஹிஜாப் ஆடை அணிய நினைக்கும் முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் ஏன் எதிர்க்கப்படுகிறது? இரண்டுமே இருவேறுபட்ட பெண்களின் உரிமைகள் என்று  ஹிஜாபை எதிர்ப்பவர்கள் யாருமே ஏன் உணர்வதில்லை? அதாவது,  இஸ்லாம் என்றாலே வேண்டுமென்றே கண்மூடித்தனமாய் எதிர்ப்பது. அதுதான் உங்களுக்கே தெரியாமல் நடந்து கொண்டும் இருக்கிறது. நம்பவில்லையா? தொடர்ந்து படியுங்கள். புரியும்.

பெண்களை விசாரணை என்ற பெயரில் காவல்நிலையம் அழைத்துச்சென்று மானபங்கம் செய்த சம்பவங்கள் அதிகமானதால்தானே 'மகளிர் காவல்நிலையம்' என்ற ஒன்று அவசியப்பட்டது? எல்லா காவல்நிலையங்களிலுமா அக்குற்றம் நடந்தது? இல்லையே. குற்றம் நடந்த காவல்நிலையங்களில் வேலை செய்த எல்லா காவலர்களும் அப்படிப்பட்டோரா? இல்லையே. எனினும் மகளிர் காவல்நிலையம் உருவாக்கப்பட்டது.  'அது பெண்களுக்கு பாதுகாப்பு, பெண்விடுதலை-பெண்ணுரிமை பேணல்' என்று எல்லா தரப்பாலும் புகழப்பட்டது. ஏனைய எண்ணற்ற ஒழுக்க சிகாமணிகளான மற்ற நல்ல காவலர்கள், 'இந்த மகளிர் காவல் நிலையம் ஏற்படுத்துதல் எங்களை அவமானப்படுத்துகிறது' என்றோ மற்ற துறையினர் 'இது ஆண் பெண் சமத்துவத்துக்கு எதிரானது' என்றோ முனுமுனுக்கக்கூட இல்லையே? ஏன்?

கூட்டம் நிறைந்த நகரப்பெருந்துகளில்  நாளுக்குநாள் சில விஷமிகளின் பெண்களுக்கெதிரான சில்மிஷங்கள் அதிகரித்ததன் விளைவுதானே 'மகளிர்மட்டும்' பேருந்து..?  அதேபோல் தோற்றுவிக்கப்பட்டதுதானே மொஃபசில் ட்ரெயினில் 'லேடிஸ் கம்பார்ட்மென்ட்'..? இதையெல்லாம் யாராவது 'ஆண்-பெண் சமத்துவத்துக்கு எதிரானது இவை' என்று ஒருவார்த்தை சொல்லி இருப்பார்களா? மாறாக 'அவை பெண்களுக்கு தக்க பாதுகாப்பு என்றும் பெண்ணுரிமை பேணப்படுகிறது' என்றுமல்லாவா எல்லாரும் வாழ்த்தினர்?

ஆனால், பெண்களுக்காகவேன்றே தனியாக மகளிர் கல்லூரி, மகளிர் மேல்/உயர்/நடு நிலைப்பள்ளிகள் தோற்றுவிக்கப்ப்படும்போது மட்டும்  தவறாமல், 'கோ-எஜுகேஷன் தான் சிறந்தது', 'தனித்தனியே படித்தால் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு பக்குவம் வளராமல் போய்விடும்', 'ஒரு சோசியல் எக்ஸ்போஷர் இருக்காது', 'மாணவர் மனதில் ஆண் பெண் சமத்துவ எண்ணம்  வளராது' என்றெல்லாம் சப்பை காரணங்கள் கூறி எதிர்க்கப்படுகிறதே, அதுவும், ஈவ்-டீசிங் பயங்கரங்கள் எல்லாம் நாளுக்குநாள் பெருகிக்கொண்டு இருக்கும் இந்நாளில்..! மேலும், இவர்கள் கூறும் காரணங்களும் பொருளற்றவை. பக்குவம்..! 'டீன்ஏஜ்'-'விடலைப்பருவம்'-'அடலசன்ட் பீரியட்' என்றாலே பக்குவமற்ற வயதுதானே? பக்குவப்பட்ட வயதினரையே சேர்த்து வைக்க முடியாது எனும்போது பக்குவமற்ற வயதினரை சேர்த்துவைத்து என்ன சாதிக்க முடியும்? "கோழி தலையே பனங்காயை தாங்காதாம். குஞ்சு தலையில் பலாப்பழத்தை வைப்பார்களாம்...!" இது எப்படி?

'மகளிர்மட்டும்' பேருந்து/ரயில்பெட்டி--(1) மற்றும் 'மகளிர் காவல்நிலையம்'--(2) ஆகியவற்றை ஆதரித்தோர், மகளிர் கல்வி நிலையங்களை--(3) மட்டும் எதிர்ப்பதேன்? காரணம்: (1) மற்றும் (2) முஸ்லிம்களுக்கு புதிது. ஆனால், (3).... முஸ்லிம்களின் கல்விக்கூடங்களில் பெரும்பாலும் நடைமுறையில் இருப்பது. முஸ்லிம்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது. அதனால்தானே இந்த முரண்பட்ட எதிர்ப்பு..?

'வட்டி  வாங்காத வங்கி' என்று ஒன்று வந்தால் எல்லா மக்களுக்கும் நல்லதுதானே? அதை 'இஸ்லாமிக் பேங்க்' என்று கூறி, எதற்கு 'இஸ்லாமைசேஷன்' என்று  எதிர்க்கிறார்கள்? கேரளாவில் இதை வரவிடாமல் எதிர்த்தவர்களும், அவ்வங்கி வருவதை //எதிர்த்து கேஸ் போட்டு ஸ்டே ஆர்டர் வாங்கியவரும் யார்// என்று பார்த்தாலேயே அவர்கள் நோக்கம் புரியுமே?

ஒரு இஸ்லாமிய அரசு தன் மக்களின் உயிர் உடைமைகளை காக்க, எதிரி படைகளுடன்  தன் படையைக்கொண்டு... எதிரிநாட்டு பொதுமக்களுக்கும் அவர்தம் உடைமைகளுக்கும் கால்நடைகளுக்கும் கூட எச்சேதமும் விளைவிக்காமல் நேருக்கு நேர் நின்று போர்க்களத்தில் போரிடுவதே ஜிஹாத். அரசு அன்றி வேறுயாரும் தனித்தோ இயக்கமாகவோ போரிட்டால் அது ஜிஹாத் ஆகாது. நாடு பிடிக்க கொள்ளை அடிக்க 'ஒரு முஸ்லிம் ஆளும் அரசு' மற்றவருடன் போரிட்டால் அதுவும் ஜிஹாத் அல்ல. இதை நன்றாக அறிந்தவர்கள்... நாடுபிடிக்கவேண்டி நம் நாட்டின் மீது போர்தொடுத்ததை 'மொகலாய படையெடுப்பு' என மிக சரியாகவே பெயரிட்டவர்கள் -- கண்ட கண்ட முகம்தெரியாத பயங்கரவாதிகள், குழந்தை-முதியவர் என்றுபாராமல், அப்பாவி  பொதுமக்கள் மேல் நிகழ்த்தும்  குண்டுவெடிப்பை  எல்லாம் 'ஜிஹாத்'...  'ஜிஹாத்'  என்று வார்த்தைக்கு வார்த்தை எதற்கு தப்பாக கூவி கூவி அலறுகிறார்கள்? ஆனால், அதேநேரம் தம் மக்களுக்காக படைநடத்தி தீரத்துடன் போரிட்ட திப்பு சுல்தானின் ஆங்கிலேய அரசுக்கு எதிரான போரை மட்டும் 'ஜிஹாத்' என்று மறந்தும் கூறியதே கிடையாதே? ஏன்? இந்த முரண்? என்னே ஒரு கயமைத்தனம்..!

இப்படித்தான், 'ஹிஜாப் - இது ஆணாதிக்கம்' என்போர்...  இன்றைய ஃபேஷன்ஷோ ஆபாச/கவர்ச்சி ஆடைகள் எல்லாம் வடிவமைக்கும் ஆணாதிக்க முதாலாளித்துவத்தின் பெண்மை சுரண்டி போருள்சேர்க்கும் நோக்கை 'பெண்ணுரிமை' என்கின்றனர்..!?! ஆணின் பாலியல் வக்கிர காமப்பார்வைக்கு பிடித்த ஆபாச/கவர்ச்சி ஆடையை, சிறுக... சிறுக... 'இதுதான் உனது ஆடை' என்று பெண்ணின் புத்தியில் உறைய வைப்பது ஆணாதிக்கம் இல்லையா..? ஒரு பெண்ணே விரும்பி அணியும் ஆடை ஹிஜாப் எனில் அதை எதிர்ப்பது ஆணாதிக்கம் இல்லையா..? ஆம் எனில், ஹிஜாப் - பெண்ணுரிமை இல்லையா..?

மிகுதியான விருந்தினர் வருகையால், வீடு நிறைந்துவிட, இரவு தங்க வைப்பதில் வீட்டினுள் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டால், அந்தக்காலத்தில் தோட்டம், திண்ணை அப்புறம் பக்கத்துவீடு...(இப்போது லாட்ஜ்...) என இங்கெல்லாம் இரவு தங்கி தூங்க, விருந்தினரில் யாரை அனுப்பி வைப்பர்? ஆண்களையா? பெண்களையா? உலகம் முழுதும் இன மத மொழி வேறுபாடின்றி ஆண்களைத்தானே அனுப்புவர்? இது பெண்களைக்காக்கும் கண்ணியம் கலந்த பாதுகாப்புத்தானே? அதை எல்லாரும் செய்தாலும், அதையே ஒரு முஸ்லிம் வீட்டினர் செய்தால் மட்டும்  பெண்ணடிமைத்தம் என்று ஒரு //அரைவேக்காட்டுப்பதிவு// ஏன் போடுகிறார்கள்? ஒருவர் ஏதோ ஒருநேரத்தில் ஒரு விஷயத்தை ஓரிடத்தில் தவிர்த்திருக்கிறார் என்றால், எல்லாருமே எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் அவ்விஷயத்தை(ஹிஜாப்) தவிர்ப்பர் என்று அதே பதிவில், எப்படி மொக்கையாக முடிவெடுக்கிறார்?

காயல்பட்டிணம் என்ற முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட ஒரு ஊரில் சினிமா தியேட்டர், டாஸ்மாக், பார்ட்டி ஹால்-பார், வட்டிக்கடை இதெல்லாம் இல்லையாம். அதனால் காவல்நிலையம் அவசியமற்று அதுவும் இல்லையாம். மேற்படி அதிசயங்களையெல்லாம் இலகுவாக கடந்துவிட்டு, வேரெங்கும் இல்லாத வியப்புக்குரிய பெண்ணுரிமை சாதனைகளான, பெண்களுக்கான தனி ATM, தனி வீதி, கடைகளில் பொருள்வாங்க தனி வழி, மாமியார் வீடு போகாமல் காலம் முழுதும், தன் பெற்றோருடனும் தன் கணவனுடனும் தன் குழந்தைகளுடன் தன்னுடைய வீட்டிலேயே வாழும் உரிமை... போன்ற வற்றை புகழக்கூட வேண்டாம், அவற்றை 'பெண்ணடிமைத்தனம்' என்று //இவர்// அந்த அறைவேக்காட்டுப்பதிவின் பின்னூட்டத்தில் தூற்றுவானேன்? எதற்கு இந்த உண்மையை திரிக்கும் வஞ்சகம்?  இவ்வூரில் மட்டும் நிலவும் இந்த சமூகப்புரட்சி மாற்றத்துக்கு காரணம் இஸ்லாமாக போய்விட்டது என்பதால்தானே? இதுவே வேறு ஒரு சமூகத்தில் நடந்திருந்தால் அதுதானே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஊடகத்திலும் சலிக்க சலிக்க தலைப்புச்செய்தியாயிருக்கும்?

எப்படி எப்படியோ உடை அணிந்த ஜெயலலிதா, தமிழக முதலமைச்சர் ஆனதும், புருகா போன்ற புதுவித ஆடை உடுத்துவது ஏன்? அதேபோல்  இந்திரா  காந்தி, பிரதிபா பாட்டீல் போன்றவர்கள் முறையே  பிரதமர், ஜனாதிபதி என்றானவுடன் புடவையால் முக்காடு போட்டுக்கொண்டது ஏன்? அதுதான் தமக்கும் தம் பதவிக்கும் மரியாதை சேர்க்கும் என்றுதானே? தாங்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படத்தானே? இதை என்றேனும்... எவரேனும்... 'பெண்ணடிமைத்தனம்' என்று கூவி இருக்கிறார்களா?

ஹிந்து பெண் துறவிகள் அல்லது பெண் கிருஸ்த்துவப்பாதிரிகளின் உடையை எவரேனும் கண்டிருக்கிறீர்களா?  மற்ற சாதாரண கிருத்துவ பெண்களுக்கு இல்லாமல்  ஏன் அவர்களுக்கு மட்டும் அவ்வாடை? கடவுளுக்கு சேவகம் புரிபவர்கள் தூய்மையானவர்கள் மற்றும் கண்ணியமானவர்கள் என்று அறியப்படத்தானே? இதை என்றேனும் எவரேனும் 'பெண்ணடிமைத்தனம்' என்று கூவி இருக்கிறார்களா?

மாறாக, இஸ்லாமிய ஹிஜாபை ஒருபுறம் 'பெண்ணடிமைத்தனம்' என்று எதிர்த்துக்கொண்டே மறுபுறம்  பின்நவீனத்துவ பன்னாட்டு முற்போக்கு முதலாளித்துவத்தால்  கவரப்பட்டு அரைகுறை ஆடைகளுடன் காதலர்தினம், டிஸ்கோத்தே, நைட் பார்ட்டி போன்றவற்றில் கலந்து கொள்ளும் பெண்களை அவமரியாதை செய்து நையப்புடைப்பது தானே வழக்கம்? இஸ்லாம் என்றதும் ஏனிந்த இரட்டை நிலை?

ஆக.... உயர்ந்த அந்தஸ்து, பெரிய பதவி, இறைச்சேவை  இவற்றில் இருக்கும் பெண்களின் கண்ணியத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல்,  உலகின் ஒட்டுமொத்த  அனைத்து இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அதேபோன்ற அந்தஸ்தையும் கண்ணியத்தையும் கொடுக்க இஸ்லாம் நாடுவது, எப்படி பெண்ணடிமைத்தனம் ஆகும்? எப்படி பெண்ணடிமைத்தனம் ஆகும்? எப்படி பெண்ணடிமைத்தனம் ஆகும்?
.
'குட்டை நிலைவாசப்படியில் முட்டி மோதி புடைத்து, கடைசியாய் அனுபவத்தில் புரிந்துகொண்டு குனிந்து போவதற்கு' பதிலாக, பெண்கள் விஷயத்தில் ரொம்பவே அக்கறையாக பெண்களுக்கான உடையணியும் முறை (ஹிஜாப்)  பற்றி ஆரம்பத்திலேயே எச்சரித்து 'முட்டிக்கொள்ளாமல் குனிந்து போக வைத்து' பெண்களை கண்ணியமானவர்கள் என்று அறியவைத்து அவர்களின் அந்தஸ்தை உயர்த்தி காத்துக்கொண்டு இருக்கும்...  இஸ்லாம் கூறும் ஹிஜாப் எப்படி பெண்ணடிமைத்தனம் ஆகும்? எனக்குத்தெரிந்து இவ்வுலகில் எவ்வளோ பெண்கள் தன் பாதுகாப்புக்கும் கண்ணியத்துக்கும் வேலைக்கும் ஓர் ஆடை உகந்தது என்று முடிவு எடுத்து மனப்பூர்வமாய் அணிந்தால், அதை எப்படி எதிர்க்கலாம்? அப்படி எதிர்ப்பது அவர்களின் உரிமையை பறிப்பது போன்றதாகாதா? இது ஏன் யாருக்குமே விளங்க மாட்டேன் என்கிறது?  


து பெண்ணடிமைத்தனமா  அல்லது பெண்ணுரிமையா? 
.

ஆக இவ்வுலகில் பெண்களுக்கான உரிமைகளாக நடைமுறையில் உள்ள...

டென்னிசில் மூன்று செட் ஆடினால் போதும் எனும் சலுகை,  
'மகளிர் காவல்நிலையம்',  
'மகளிர்மட்டும்' பேருந்து  மற்றும்  ரயில்பெட்டி,  
மகளிர் கல்லூரி, மகளிர் மேல்/உயர்/நடு நிலைப்பள்ளிகள்,  
முன்னாள் தமிழக முதல்வரின் அங்கி போன்ற மேலாடை,  
இந்நாள் ஜனாதிபதியின் முக்காடு,   
ஹிந்து பெண் துறவிகள் ஆடை, 
பெண் கிருஸ்த்துவப்பாதிரிகளின் உடை  
மற்றும் எண்ணற்ற பெண்களுக்கான  உரிமைகள் போலவே..... முஸ்லிம் பெண்கள் தங்கள் இறைவன்  தங்களுக்கு வகுத்தளித்த ஆடைமுறையை அணிய நாடுவதும் பெண்ணுரிமையே..!

ஆகவே, நிச்சயமாக  இஸ்லாமிய ஹிஜாபும் ஒரு பெண்ணுரிமையே..!

இதை எதிர்ப்பவர்கள்  அல்லது சட்டம் போட்டு அவர்களிடமிருந்து அதை பறிக்க நினைப்பவர்கள்தான்  நிச்சயம் பெண்ணுரிமைக்கு எதிரான ஆணாதிக்கவாதிகள்..!! இவர்கள் பெண்கள் எனில், ஆணாதிக்கத்தின் கேவலமான மதி இழந்த கைக்கூலிகள்..!!!

அவர்களை ஒட்டுமொத்தமாய் சமூகம் பகிஷ்கரிப்பதே பெண்விடுதலை...!

17 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...