அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, June 3, 2011

32 Saudization=சவூதியின் பிழைப்புவாத அரசியல்

"செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது..!"--என்று ஒரு செய்தி எல்லா ஊடகத்திலும் சிறிது நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக போனியானதை பார்த்திருப்பீர்கள். இதனால் லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள்  கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது என்று ஒரு பீதியை ஊடகத்தினர் கிளப்பினர். ஆனால், சவூதி அரசின் இதற்கான மறுப்பு விளக்க அறிக்கையை பல ஊடகங்கள் முந்திய பீதியூட்டும் செய்தியை சேர்ப்பித்தது போல இதை மக்களிடம் கொண்டுபோய் சரியாக சேர்க்க வில்லை.

இது குறித்து சவூதியின் அல் வதான் செய்தித்தாளுக்கு அந்நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆதில் அல் ஃபகீ அளித்துள்ள பேட்டியில், "சவூதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பைப்பெற உள்நாட்டினரிடையே போட்டியை உருவாக்கி, அவர்களது பணித்திறமையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

80 லட்சம் பேருக்கு மேலே வெளிநாட்டினர் வேலை பார்க்க, 44,800 சவூதிகள்  வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் வெளிநாட்டினர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் சவூதியில் பணியாற்ற தடை விதிக்கப்படும். இந்த சட்டத்தை கொண்டு வந்த பின், அதை அமலாக்க வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு 5 மாத கால அவகாசம் வழங்கப்படும்."..என்றார்.

 

சவூதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை மட்டுமே 20 லட்சத்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் பல லட்சம் இந்தியர்கள உட்பட அனைத்து வெளிநாட்டினரும் பாதிக்கப்படுவர். வெறும் 5லட்சம் பேருக்கு வேலை கொடுக்க எதற்கு 80லட்சம் பேர் தலையில் கை வைக்கிறார்கள்..? இப்படி இவர்கள் திடுதிப் என காலியானால் அவர்கள் வேலைபார்க்கும் நிறுவனங்கள் எவ்வாறு இயங்கும்..? இதனால், பெரும் கலக்கத்துக்கு உள்ளான அனைத்து தொழிலதிபர்களும், நிறுவனங்களும் அடிச்சு புடிச்சு ஃபோன் மேல ஃபோன் போட்டு மந்திரியின் தூக்கத்தை கெடுத்திருப்பார்கள் போல..!


இந்நிலையில்தான், அடுத்தநாள் அதே தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆதில் அல் ஃபகீ ஒரு பிரஸ் மீட் ஏற்பாடு செய்து "யாரும் பீதி அடைய வேண்டிய அவசியம் எல்லை" என்று ஆரம்பித்து... விளக்கினார்..! அரப் நியூசில் சற்று நீண்ட விளக்கம் போட்டிருந்தினர். நம் ஊடகங்கள் அதை புரிந்து கொண்டார்களா... அல்லது... இதெல்லாம் முந்திய பரபரப்பான "சவூதியில் 6 வருஷத்துக்கு மேல் தடை"--போன்ற ஹிட்சுக்கான செய்தி அல்ல என்பதால் தவிர்த்து விட்டார்களா என்று புரியவில்லை..! இப்பொது எந்த மூச்சும் விடவில்லை. மந்திரியின் மறுப்பு செய்தியை மக்களிடம் சரியாக சேர்ப்பிக்க வில்லை. அதன் பின்னணியையும் அலசவில்லை. அதனால் என்ன..? அதை நாம் செய்வோமே..!

 

சரி, முழுதும் பொறுமையாக படித்த பின், மந்திரி என்ன சொல்கிறார் என்றால்...

சவூதியில், 'சவூதிசேஷன்' (பணியிடங்களை சவூதிக்காரர்களை வைத்து நிரப்புதல்) என்ற பாலிசியை பொறுத்த மட்டில், இங்கே உள்ள நிறுவனங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன. 

 

ஒன்று 'சிகப்பு'. இன்னொன்று 'மஞ்சள்'. மற்றது 'பச்சை'. (பலமுறை Road Traffic-ல் மாட்டிய கடுப்பு போல..!). 

 

இதில், 'சிகப்பு வகையறா' யாரென்றால், இன்னும் அரசின் சவூதிசேஷன் பாலிசியில் கையொப்பமிட்டு சேராதோர். 'மஞ்சள் தரப்பினர்' யாரென்றால், சேர்ந்த பின்னரும் இன்னும் முழுமையாக சவூதிசேஷனை நடைமுறை படுத்தாமல் நழுவுபவர்கள். 'பச்சை கோஷ்டியினர்' தான் முழுமையாக சவூதிசேஷனை நடைமுறையில் அமல்படுத்தியவர்கள்.

 

சரி, முழுமையாக சவுதிசேஷனை அமல்படுத்துவது என்றால் என்ன..? 

 

முழுமையாக சவுதிசேஷனை அமல்படுத்திய இந்த பச்சை வர்க்கத்தினர் யார் தெரியுமா சகோ..? ஒரு நிறுவனத்தில் 1000 பணியிடங்கள் இருந்தால் அதில் 500-ல் சவூதிகளை நியமிப்பதுதானாம்..!?! இந்த அளவைக்கூட கூட எட்டாதவர்கள் மஞ்சள்காரர்கள். 

 

இப்போது, இந்த மந்திரி என்ன சொல்கிறார் எனில், இப்படி பச்சை கம்பெனிகளில் வேலை பார்க்கும் வெளிநாட்டோருக்கு ஒரு பிரச்சினையும் இல்லையாம். அவர்கள் எத்தனை வருஷம் வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம். ஆனால், மற்ற இரு பிரிவு கம்பெனிகளில் வேலை பார்ப்போர் ஆறு வருடம் கடந்துவிட்டால்... அவர்களின் விசா புதுப்பிக்கப்பட மாட்டாது.

 

இவர்கள் என்ன செய்ய வேண்டுமாம்..? பக்கத்தில் இருக்கும் ஏதாவது பச்சை கம்பெனிகளில் மனு போட்டு சேர்ந்து கொள்ளலாம். இதற்கு NOC (no objection certificate) கூட தேவை இல்லை. அடடா..! ஓடிப்போகும் தன் பணியாளரைக்கூட அவர்களுக்கு தடுக்க உரிமை இல்லை. சவூதிக்குள்ளாரேயே இப்படி கஃபாலத் மாற்றிக்கொள்ளலாம். (இங்கே ஒரு கேள்வி வர வேண்டும். அந்த பச்சை கம்பெனிக்காரர்கள் இவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டுமே...? என்று..! அதுதான் சூட்சுமம். அங்கேதான் ஆணிவேர் உள்ளது. அது பற்றிய விபரம் கடைசியில்...)  

 

இப்போது மற்ற இரு பிரிவினர் (இவர்கள் 30-40% வரை இருக்கிறார்கள் என்று மந்திரி சொல்கிறார்) தம் பணியாளர்களை தம்முடனேயே இருத்தி வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்..?  (வரும் 7-செப்டம்பருக்குள் சவுதிசேஷனில் கையொப்பமிட்டு) சிகப்பர் & மஞ்சளர் இருவரும்  அதன் படி தன் பணியாளர்களில் "50% சவூதிகள் இருப்பதாய்" காட்டவேண்டும். அப்படி இல்லையேல் இவ்விரு நிறுவன ஊழியர்களின் விசாவை புதுப்பிக்க முடியாது.

 

ஆஹா..! இப்போது  இது ஆப்புதானே..? இல்லை..! ஆறு வருஷம் நிரம்பியவுடன் எக்சிட் விசா கொடுத்து பஹ்ரைன் பிரிட்ஜில் ஒரு எக்சிட் போட்டுவிட்டு... அங்கே கொஞ்சநாள் கம்பெனி செலவில் தங்கிவிட்டு பின்னர் மீண்டும் புதிய விசாவில் அதே கம்பெனி..! அதே வேலை..! ஒருவேளை இது வேக்கஷன் நேரம் என்றால் ஒரு மாசம் ஊருக்கு வந்துவிட்டு திரும்ப புது ஆளாக போக வேண்டும்..! இதல்லாம் இங்கே ஏற்கனவே நடப்பதுதானே என்கிறீர்களா..? இதுக்குப்பேருதான் இனிமே சவூதிசெஷனாம்..!


இனி அந்த பிராக்கட் கேள்விக்கு வருவோம்.  அந்த பச்சை கேட்டகரி கம்பெனிகள் பெரும்பாலும் அரசு நிறுவனங்கள். அவைகள், தம்மிடையே 50%-க்கும் மேற்பட்ட சவூதி ஊழியர்களை வைத்துக்கொண்டு சவூதிகளின் உழைப்புத்திறமை குறைவால் வேலை நடக்காமல் திக்கித்திணறி நொண்டி அடித்து வருகிறது. இங்கே முன்னர் வேலை பார்த்த... அனுபவமும், திறமையும், புத்திக்கூர்மையும், சுறுசுறுப்பும், அர்ப்பணிப்பும் உடைய வெளிநாட்டு ஊழியர்கள் (skilled expats) எல்லாம் இதைவிட கூடுதலாக தனியார் நிறுவனங்கள் ஊதியம் தருவதால் அங்கே சென்று விட்டனர். அவர்களை எப்படி மீண்டும் அரசு நிருவனங்களுக்கு அதே பழைய சம்பளத்துக்கு வலுக்கட்டாயமாக இழுப்பது..? இப்படித்தான்..! ஹி ஹி..!

 

அதாவது... "நான் மட்டும்தான் சவூதியை வைத்துக்கொண்டு  சுமக்க வேண்டுமா..? நீயும் கொஞ்சம் என்னுடன் 'சவூதி சுமை'யை பகிர்ந்து கொள்ளேன்..!"--என்ற அரசுத்துறையின் அல்லது ஏதோ ஒரு உத்வேகத்தில் கன்னாபின்னா வென்று ஏற்கனவே சவூதிசேஷனை அவசரப்பட்டு நடைமுறை படுத்திவிட்ட மிகப்பெரிய, சிறிய தனியார் துறையின் அட்ஜஸ்ட்மென்ட்தான்... இந்த புதிய சவூதிசேஷன்..! இதற்கு இப்போது புதிய பெயர் "நிடாகாட் புரோக்ராம்"..!

 

அதாவது ரொம்ப சிம்பிளா சொன்னா... அவங்களுக்குள் ஒரு அட்ஜஸ்ட்மென்ட்..! இப்படிப்பட்ட தண்டனைகள் எதற்கு தொழிலாளர் தலையில் வந்து விடிகிறது..? இவர்களின் மன உளைச்சல், அலைச்சல், விசா என்று இவர்களை ஏன் தொந்தரவு பண்ணவேண்டும்..? பேசாமல் அரசே.. இந்த மஞ்சள் மற்றும் சிகப்பர்களை இனம் கண்டு  களை எடுக்க வேண்டியதுதானே..? இந்த கேள்வி வரவேண்டும்..! 

 

அப்படி செய்ய முடியாது..! ஏனெனில், சட்டம் போடுபவர்களுக்குள்ளும், அவர்களின் நெருங்கிய சொந்தங்களுக்குள்ளும் காரசாரம் வந்துவிடக்கூடும். சிலரின் கம்பெனிகள் பாதிக்கப்படக்கூடும். சிலர் மேல் நடவடிக்கை எடுக்க இயலாது. கம்பெனி ஓடவேண்டும். அதேநேரம், சவூதிசேஷனும் நடப்பதாக மக்களிடம் காட்ட வேண்டும். இப்படி உள்குத்து பிரச்சினைகள். அதனால் ஐயோ பாவம் அயல்நாட்டு தொழிலாளர்கள்.

 

உப்பு சப்பு இல்லாத இத்திட்டத்தை.. ஏன் "சவூதிசேஷன்" என்று அரசு விளம்பரப்படுத்த வேண்டும்..?  சமீப காலமாக, மற்ற வளைகுடா நாடுகளில் அரசுக்கும் மக்களுக்கும் இடையே 'நிலைமை' சரி இல்லை அல்லவா..? 

 

ஒவ்வோர்  நாட்டிலும் திறமை குன்றியவர்கள், படிக்காமல் ஊர் சுற்றித்திரியும் அல்லது உழைக்காத சோம்பேறிகள் இருப்பார்கள். அவர்கள் தங்களின் வயிற்றுப்பசிக்காக ஒரு கட்டத்தில் சமூகத்தில் மிக குறைந்த ஊதியங்கள் வழங்கப்படும் மிகச்சாதாரண வேலைகள் பார்க்க துவங்குவார்கள். இது உலக நியதி. ஆனால், அப்படிப்பட்டவர்களை சவூதி அரேபியாவில் பார்க்க முடியாது. காரணம், அந்த வேலைகளுக்கேன்றே ஏழை நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு உழைக்க சவூதிக்கு வருகிறார்கள்...!

 

இந்நிலையில், பக்கத்தில் குவைத், சும்மா வீட்டில் வேலைவெட்டி இல்லாமல் உட்கார்ந்து இருப்பவர்களுக்கும் கூட 1000 KD சம்பளம் அறிவித்தது.

 

இது நிறைய சம்பாரிக்காத சவூதிகளுக்கு வயிற்றில் எரிச்சலை கிளப்பிவிடக்கூடாதே என, "இனி ஒரு சவூதிக்கு மினிமம் வேஜ் 3000 ரியால் என சம்பளம் தரவேண்டும்" என்று சவூதி அரசு சமீபத்தில் சட்டம் போட்டு அறிவித்தது. ஆனால், 'நாங்கள் வேலை இல்லாமல் இருக்கிறோம்...பின்னே எங்கேயிருந்து வரும் அந்த 3000..?' என்று ஒரு கூட்டம் மேற்படி மந்திரியின் அலுவலகம் முன்னே திரண்டுவிட... எல்லாருக்கும் அதிர்ச்சி. உடன் யோசித்திருக்க வேண்டும் மந்திரி. அதன் பலன், இந்த சவூதிசேஷன் அறிக்கை..! 

 

இப்போது போர்க்கொடி தூக்கியவர்கள் ஏதோ தங்கள் விஷயம் ஜரூராக நடப்பதாக நிம்மதியாக வீட்டில் இருக்கிறார்கள்...! உண்மையில் இது சவூதி அரசியல்வாதிகளின் சரியான சமாளிஃபிகேஷன்ஸ். இதை வைத்துத்தான் அரசியலில் தங்கள் பிழைப்பை ஓட்டுகிறார்கள் அரசியல்வாதிகள்.


'வேலை இல்லை' என்கிறார்களே... இவர்கள் யார்..? உண்மையிலேயே வேலை வெட்டி இலலாமலா இருக்கிறார்கள்..? அதுதான் இல்லை. சவூதியை பொறுத்தமட்டில் பள்ளி இறுதித்தேர்வு தேர்ச்சி பெற்று இருந்தாலே போதும். வேலை கொடுக்க சிகப்புக்கம்பளம்தான். அதுவும், நல்ல மார்க் எடுத்து, கல்லூரி, பல்கலைக்கழகம் சென்று ஏதாவது ஒரு துக்கடா டிப்ளோமா பட்டம் பெற்றுவிட்டாலோ கேக்கவே வேண்டாம். முதீர்..! முஹந்திஸ்..! 

 

நான் பணிபுரியும் அரசு நிறுவனத்தில் ஸ்கூல் ஃபைனல் பாஸ் பண்ணிய சவூதிகளின் பணி இடங்களுக்குகளுக்கு ஆள் கிடைக்காமல் ஏகப்பட்ட இடம் காலியாக இருக்கிறது..! பட்டதாரி பிரிவிலோ கேட்கவே வேண்டாம்..! சிலர் வருவார்கள். சில மாதம் கழித்து இதைவிட நல்ல வேலை என்று ஓடுவார்கள்..! அவ்வளவு வேலைவாய்ப்பு இருக்கிறது சவூதி பட்டதாரிகளுக்கு..!

 


ஆனால், பள்ளிக்கே போகாமல் டைம் பாஸ் பண்ணி அதனால் தேர்வில் பாஸ் பண்ணாமல் பாதியிலேயே ஸ்கூலில் இருந்து பிச்சிக்கிட்டவர்களை என்ன செய்ய..? இவர்கள்தான் அந்த 5 லட்சம் வேலை இல்லாதோர்..! அறிவில் படு மட்டம் என்றால், அவர்கள் டாக்சி ஓட்டுவார்கள். ஓரளவு பரவாயில்லை என்றால், ஏதாவது கடை வைத்து சுய தொழில் நடத்துவார்கள். இல்லை... ரொம்ப சொத்து இருக்கிறது என்றால் பெரிய குடியிருப்புகள் கட்டி வாடகைக்கு விட்டுவிட்டு... எத்தனைக்காலம்தான்  வீட்டில் பாதாம், பிஸ்தா, முந்திரி சாப்பிட்டுக்கொண்டு டிவியில் கால்பந்தாட்டம் பார்ப்பது..? "சும்மா ஜாலியா ஏதாவது அரசு அலுவலகத்தில் ஒரு மேனேஜர் போஸ்ட் கிடைத்தால் எப்படி இருக்கும்..?" --இப்படித்தான் இவர்கள் எண்ணம் ஓடுகிறது..! 

 

இவர்களுக்குத்தான் அரசு 3000 ரியாலை விட குறைவாக யாரும் சம்பளம் தரக்கூடாது என்கிறது..! படிக்காமல், குவாலிஃபிகேஷன் இல்லாமல் இருக்கும் இவர்களை பணியில் அமர்த்த அரசிடம் பணிகள் இல்லை..! அதனால் மற்ற தனியார்களை வலுக்கட்டாயமாக வேலைக்கு அமர்த்த அரசு  கட்டாயப்படுத்துகிறது..!

 

இவர்களை போன்றவர்கள் இனி சவூதியில் உருவாகாமல் இருக்க, சவூதி  பள்ளிக்கல்வித்துறையை சரியாக திட்டமிட்டு உலகத்தர கட்டமைப்புடன் உருவாக்கி மாணவர் மண்டையில் படிப்பு ஏறவில்லை என்றாலும் 'கட்டாயமாக' கல்வியை எப்பாடு பட்டேனும்  'ஊட்டினால்'தான்... 'மெய்யான சவூதிசேஷன்' சாத்தியம்..! இல்லையேல்... பள்ளி  இறுதி தேர்ச்சி பெற்றும்... சவூதி மாணவர்கள் தங்கள் பொது அறிவிலும், அறிவியல் அறிவிலும், ஆங்கில அறிவிலும் அதற்குறிய சிறு தகுதியும் கூட  இன்றி இருப்பவர்கள் தொடர்ந்து பள்ளியிலிருந்து வெளிவருவதை தடுக்கவியலாது. இவர்களை வைத்துக்கொண்டு சவூதிசேஷன் என்பது எட்டாக்கனி.

 

இன்னொரு கேள்வி கேட்டே ஆவீர்கள் நீங்கள்..! அது... சவூதியில் டாய்லட் கிளீனிங், ஸ்ட்ரீட் கிளீனிங்,  லாண்டரி, சலூன், ஹவுஸ் டிரைவர், ஆபீஸ் பாய், கத்தாமா (வீட்டுப்பணிப்பெண்)... இப்படியான வேலைகள் பல.. 100% சவூதி அல்லாதவர்கள் செய்வன..! ஆனால், இந்த காண்ட்ராக்ட் ஓனர்கள் சவூதிகள். இவர்கள் பக்கா "ரெட் கேட்டகிரி பார்ட்டிகள்"..! இனி, இவர்கள் என்ன செய்வார்கள்..?  இந்த வேலைகளிலும் படிக்காத வேலையில்லாத சவூதிகளை நிரப்ப போகிறார்களா என்றுதான் நிறையப்பேர் கேட்கிறார்கள்..! 

 

பதில், சிம்பிள், இவர்களுக்கு அந்த சட்டம் பொருந்தாது என்பார்கள்..! அப்படியே பொருந்தினாலும்... ஆறு வருஷத்துக்கு ஒரு முறை புது இக்காமா..! தட்ஸ்ஆல்..! சவூதிசேஷனை மீறிய அந்த ஓனருக்கு ஒரு தண்டனையும் இராது. அவர் ஜாம் ஜாம் என்று இருப்பார்...! சவூதி அரேபியா..!


இந்த நிலைமைகள் எல்லாம் மாறும்வரை... சவூதி  அரசியல்வாதிகளின் சவூதிசேஷன் பிழைப்புவாதங்கள் தொடரும்..! அதுவரை வெளிநாட்டு ஊழியர்களின் சேவை அவர்களுக்கு தேவை..!


32 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...