அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Thursday, May 19, 2011

88 நர்ர்ரேந்திர ஜெ..! (மெளனம் ஆன நம் உணர்வுகள்)

செல்வி.ஜெயலலிதா, தன்னை ஒரு அப்பட்டமான "பாஸிச வெறி கொண்ட, ஆர்.எஸ்.எஸ். அபிமான, தீவிர ஹிந்துத்வா அரசியல்வாதி" என அவ்வப்போது அடையாளம் காட்டிக்கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை என்றுமே தவற விட்டது இல்லை...! அதுதான் ஜெ..!

முதன் முதலில், அன்று தமிழ்நாட்டுக்கு யாரென்றே தெரியாத 'அத்வானி' என்பவர் பாபர் மசூதியை இடிக்கவேண்டி 'கரசேவை'க்காக அடியாள் தேடியபோது, அன்று எதிர்க்கூட்டணியில் இருந்தாலும் தன் கட்சித்தொண்டர்களை தாமாகவே 'கொலைச்சேவைக்கு' அனுப்பி வைத்தார் ஜெ..!

பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப்பின் "if Ram temple is not possible here.. then where..?" என்று பாஜக அல்லாத கட்சியின் ஒரே தலைவராய் பேட்டியளித்து அத்வானிக்கே அன்று இன்ப அதிர்ச்சி கொடுத்து ஹார்ட்அட்டாக் வர வைக்க முனைந்தார்... ஜெ..!

பாபர் மஸ்ஜிதை இடித்த 'கும்பல்' என்று பாஜகவை எல்லோரும் ஒதுக்கி வைத்திருந்த நிலையில், தமிழகத்தில் பாஜக என்ற ஒரு கட்சி இருப்பதே நிறைய பேருக்கு தெரியாத நிலையில், முதன்முதலாக அதற்கு சிகப்புக்கம்பள  வரவேற்பு தந்து, 1998-ல் அக்கட்சியுடன் கூட்டணி போட்டு "தூய்மைப்படுத்தி" ஐந்து நாடாளுமன்ற சீட்டுக்களையும் அள்ளித்தந்து, தன் காவி கலரை காட்டி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார், ஜெ..!

பின்னர், "13 மாசம் ஆட்சி புரிந்தும் ராமர் கோவில் கட்டாமல் என்னய்யா கிழிச்சீங்க"  என்று..(?) அந்த கட்சியின் ஆட்சியை ஒரு ஓட்டில் கவிழ்த்து விட்டு,  அடுத்தவருடம் 1999-ல் சென்னை கடற்கரையில் நடந்த த.மு.மு.க.வின் "முஸ்லிம்கள் வாழ்வுரிமை மாநாட்டில்" கலந்து கொண்ட ஜெ. : "சென்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்தது தவறு. அத்தவறுக்கு பிராயச்சித்தமாகத்தான் நானே பா.ஜ.க ஆட்சியை கவிழ்த்து விட்டேன். இனி ஒரு போதும் அ.தி.மு.க... பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்காது.'' .. என்று முஸ்லிம் ஓட்டுக்காக உறுதி மொழி அளித்தார்... ஜெ..!
.
ஆனால்...
.
2002 ஆம் ஆண்டு இந்திய வரலாறுக்கே ஒரு களங்கமாக ஒரு மாநில அரசே திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலைதான் குஜராத் கலவரம் என்று நன்கு அறிந்து வேறு எந்த ஒரு கட்சியும் பாஜகவையும் மோடியையும் தீண்டத்தகாத ஒரு வஸ்துவாக விளக்கி வைத்திருக்க... அப்போது காங்கிரசுடன் எதிர் கூட்டணியில் இருந்தாலும்... தன் மதவெறி பிரச்சாரம் மூலம் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசை வீழ்த்தி வெற்றி பெற்ற 'மரணவியாபாரி' மோடியின் பதவியேற்பு விழாவுக்கு குஜராத்துக்கு ஓடிச்சென்று கலந்து கொண்டு வாழ்த்தி, தன்னை யார் என்று மீண்டும் ஒருமுறை தன் ஹிந்துத்துவா முகத்தை காட்டிக்கொண்டார், ஜெ..!
.
.
அதுமட்டுமா..? முஸ்லிம்களிடம் 1999-ல் தந்த 'உறுதிமொழி'யை மறந்து, 2004 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து, முஸ்லிம்களுக்கு பெப்பே காட்டி தன் உண்மை முகத்தை  மீண்டும் வெளிப்படுத்தினார் ஜெ..!
.
2004-ல் ஆந்திராவில் காங்கிரஸ் முதல்வர் YSR அரசு  முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்த போது அதனை தமிழ்நாட்டில் முதல்வராய் இருந்து கொண்டு சம்பந்தமே இல்லாமல் எதிர்த்தார். இவருக்கு என்ன.. போச்சு அதனால்..? காரணம்... தனக்கு உள்ளே ஓடும் ரத்தம் காவி என்று காட்டினார் ஜெ..!
.
அப்போது, 'மதமாற்ற தடைச்சட்டம்', 'ஆடு, கோழி பலியிடுதல் தடைச்சட்டம்' என்றெல்லாம் புதுப்புது மக்களுக்கு ஒவ்வாத சட்டங்கள் கொண்டுவந்து பாஜகவை விட தான்தான் அதிதீவிர ஹிந்துத்துவா அரசியல்வாதி என்று பாஜகவையே தலைகுனிய வைத்து நிரூபித்தார் ஜெ..!

நடந்து முடிந்த தேர்தலில் திமுக தன் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்கள் நலன் பற்றி அறிவித்த பின்னரும் கூட, அதை அப்பட்டமாக தன் தேர்தல் அறிக்கையில் 'ஈ அடிச்சான் காப்பி' அடித்தவர் அதுபற்றி மட்டும் ஏதும் குறிப்பிடாமல் வேண்டுமென்றே தவிர்த்தவர், ஜெ..! 

இப்படிப்பட்டவரான ஜெ.... தன்னுடைய "பங்காளி" மோடியை தன் பதவி ஏற்பு விழாவிற்கு அழைக்காவிட்டால்தான் ஆச்சர்யம்..! இத்தனைக்கும் மோடியின் பாஜக இவரது தேர்தலில் கூட்டணி கட்சியா..? இல்லையே..! அப்புறம் எதற்கு கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இனப்படுகொலை மோடிக்கு சிகப்புக்கம்பள வரவேற்பு..?
 

சரி..! இவர் அழைத்தால் அப்போது நம்மிடையே எழ வேண்டிய பாசிஸ பயங்கரவாத எதிர்ப்புக்கு என்னாச்சு..? பொதுவாய் இப்படி இருக்காதே..! தமிழகத்தில் ஏன் இந்த திடீர் மந்தம்..? ஆட்சி மாறியதாலா..? கூட்டணி மாறியதாலா..? பயமா..? சோம்பலா..? குஜராத் இனவெறி படுகொலைகள் எல்லாம் மறந்து விட்டதா..? இந்தியாவிற்கே உலக அரங்கில் மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது குஜராத் இனப்படுகொலை அல்லவா..?.
.
அல்லது 'நரமாமிசமனிதன்', 'மரணவியாபாரி', 'ஹிந்துத்துவா பயங்கரவாதி' என்றெல்லாம் இகழப்பட்ட நரேந்திர மோடி திடீரென நல்லவராகி விட்டாரா..? அல்லது உச்சநீதி மன்றம் அப்படி குற்றமற்றவர் என அறிவித்து விட்டதா..? அதெப்படி... நாளுக்குநாள் மோடிக்கு எதிரான சாட்சிகளும், ஆதாரங்களும் அதனால் இன்னும் நிறைய புதிய வழக்குகளும் அதிகரித்த வண்ணம் அல்லவா இருக்கின்றன..? எவரிடமிருந்தும் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் தமிழ்நாட்டுக்குள் இந்த பயங்கரவாதியால் ஜாலியாக வந்து செல்ல முடிந்தது எவ்வாறு..?

"பிரபஞ்சத்தின் நமபர் ஒன் பயங்கரவாதி"யே இந்தாளுக்கு விசா கொடுக்க பயப்படுகிறான்...! அப்படியிருக்க, தமிழ்நாட்டுக்குள் மட்டும் எப்படி எதிர்ப்பின்றி இந்த மோடி வந்து செல்லலாம்..?

எங்கோ.. யாரோ.. கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட --'ஒரு பயங்கரவாதி' என இன்னொரு பயங்கரவாதியால் அறிவிக்கப்பட்ட ஒருவரின்-- சடலத்துக்கு, நம்மிடையே ஒரு சிலர் செய்த அவசியமற்ற 'இறுதிக்கடமை'க்கு, எதிராக எழுந்த சலசலப்பு கூட... இப்போது மோடி வருகைக்கு எதிராய் எழவில்லையே... ஏன்..? எனில்,  "நம் பயங்கரவாத எதிர்ப்பு" சுருதி அவ்வளவு குறைந்தது விட்டதா..? நம் உணர்வுகள் ஏன் மெளனமாகின..?

அன்று 2008 ஜனவரி 16-ல் துக்ளக் விழாவிற்காக சென்னைக்கு வரவிருந்த இந்த இனப்படுகொலைகாரன் மோடிக்கு, ஜெ. விருந்தளிக்க முடிவு செய்திருக்கிறார் என்றதுமே வெகுண்டெழுந்து "கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்" செய்த த.மு.மு.க.வினரின் 'மனிதநேயம்' இன்று ஏன் காணாமல் போனது..?

ஆமாம்..! அன்று நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜனநாயக வழியிலான போராட்டக் குழு அமைக்கப்பட்டு அதற்கு ஃபாஸிஸ எதிர்ப்பு முன்னணி (A.F.F) என ஒரு மனதாக பெயரிடப்பட்டது.



அதில்....

1. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
2. விடுதலைச்சிறுத்தைகள்
(திரு. வன்னியரசு)  
3. சிறுபான்மையினர் கூட்டமைப்பு
(பேரா. எஸ்றா சற்குணம்) 
4. தலித், இஸ்லாமியர், கிறித்தவக் கூட்டமைப்பு
5. பெரியார் திராவிடர் கழகம்
(திரு.விடுதலை ராஜேந்திரன்)  
6. மக்கள் கலை இலக்கியக் கழகம்
( ம க இ க... வினவு..?) 
7. தமிழர் தேசிய இயக்கம்
8. மறுமலர்ச்சி முஸ்லீம் லீக்
9. இஸ்லாமியர் விழிப்புணர்வு கழகம்
10. கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம்
11. குழந்தைகள் உரிமை இயக்கம்
12. மனிதஉரிமைகளுக்கான குடிமக்கள் இயக்கம்
(பேராசிரியர். அ.மார்க்ஸ்)
13. புரட்சிகர ஜனநாயக தொழிலாளர் முன்னணி
 
...அன்று இணைந்த இத்தனை அமைப்புகளின் சார்பில் சென்னைக்கு வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, சென்னையில் காமராசர் அரங்கிற்கு முன் திரண்டு மோடிக்கு எதிராக தைரியமாக இந்த அனைத்து அமைப்புகளும் பெருந்திரளாக கூடி ஒன்றினைந்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. 

தமுமுகவின் முயற்சியால் உருவான இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக அன்று தமுமுக தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லா நியமிக்கப்பட்டார்..!

அன்று ஆரம்பிக்கப்பட்ட "பாசிஸ எதிர்ப்பு முன்னணி" இன்று அதே மோடி சென்னை வரும்போது எங்கே போச்சு..? கருப்புக்கொடி என்ன ஆச்சு..?  

வெறுமனே ஜெ.யின் பதவியேற்பு விழாவை 'புறக்கணித்தல்' விழாவிற்கு 'போகாமல் இருத்தல்' (?!) என்ற நிலைக்கு பேராசிரியர். ஜவாஹிருல்லா சறுக்கியது ஏன்..? அத்தோடு, பதவியேற்கும் விழாவுக்கு பேராசிரியர். ஜவாஹிருல்லாவின் வாழ்த்தும் கூடவே செல்கிறதே..! இதற்குப்பெயர்தான் 'புறக்கணிப்பா'..?  ஃபாசிஸ எதிர்ப்பா..?

ஓ..! இதுதான் 'கூட்டணி தர்மமா'..? சட்டப்பேரவைக்கு வெளியேயே இப்படி என்றால்... உள்ளே என்னவித 'இஸ்லாமிய குரலை' இவரிடம் எதிர்பார்ப்பது..? 

சரி..! அந்த பட்டியலில் உள்ள "பாசிஸ எதிர்ப்பு முன்னணி"-யின் மற்ற "உத்தமர்கள்" எங்கே மறைந்து போனார்கள்..? அவர்களும் ஜெ.யுடன் கூட்டணியா..? அல்லது மோடியுடன் நட்பா..? அதில் "இணைய புரட்சியாளர்" ஒருவர் வேறு இருக்கிறார்...! அவராவது ஏதும் ஒரு பதிவு போட்டிருக்கலாமே..! ம்ஹூம்..!

சரி..! அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ன செய்தது..?
.
சென்ற 2006 சட்ட மன்ற தேர்தலில், த.த.ஜ.வின் ஆதரவுடன் முஸ்லிம்களின் பெருவாரியான வாக்குகளைப்பெற்று பிரதான எதிர்கட்சியாக இருந்த ஜெயலலிதாவின் இந்தப்போக்கை முஸ்லிம்களும் நியாயவான்களும் கடுமையாக கண்டிப்பதாகவும், ஜெ.வின் இந்த ஈனச்செயல் முஸ்லிம்களை கொதித்தெழச்செய்துள்ளதாகவும்... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் சகோ.P.ஜெய்னுல் ஆபிதீன் அன்று  எச்சரித்திருந்தார்.
.
அதைத்தொடர்ந்து, "11.01.08 அன்று தமிழகம் எங்கும் செல்வி ஜெயலலிதாவின் இந்த ஈனச்செயல்பாட்டை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தப்படும்" என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்து, அதன்படி, தமிழகம் வரும் நரேந்திர மோடியின் பயணத்தை ரத்து செய்யும்படி தமிழக அரசை வலியுறுத்தியும், நரேந்திர மோடிக்கு விருந்தளிக்கும் ஜெயலலிதாவை கண்டித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு 2008-ஜனவரி-11 மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
.
இப்போது அதே மோடி மீண்டும் வர, அன்று நடந்த இவர்களின் ஆர்ப்பாட்டம் இன்று எங்கே போச்சு..? த.த.ஜ தலைவரின் அறிக்கை என்ன ஆச்சு..? அதிசயமாக அவர்கள் வெப்சைட்டில் கூட இதுபற்றி எதுவுமே இல்லை..! ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி என்று என்றுமே பயந்து பம்மியது கிடையாதே தவ்ஹீத் ஜமாஅத்..?

இவர்கள் இப்படியென்றால்... பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்று ஒரு அமைப்பு. இதுவும் ஊமையாகியது மட்டுமின்றி... ம.ம.கவின் இந்த புறக்கணிப்பு செயலுக்கு பாராட்டு தெரிவிக்கிறது..! அது பேராசிரியர். ஜவாஹிருல்லாவின் புறக்கணித்தல் செயலை பாராட்டுவதே மோடிக்கு தன்னுடைய எதிர்ப்பு என்று நினைத்து ஒதுங்கிக்கொண்டது..!

இனி இந்திய தவ்ஹீத் ஜமாஅத்..! அதன் தலைவர் "செய்திகளும் நிஜங்களும்"-இல் ஏதேனும் தெரிவித்து இருப்பார். அதுவே அவர்களுக்கு பெரிய புரட்சி அல்லவா..?

அப்புறம்... முஸ்லிம் லீக் என்றும் தேசிய லீக் என்றும் சில கட்சிகள் இருக்கின்றன..! இவைகள் தேர்தல் நேரத்தில் மட்டும் சீட்டுக்காக கழகங்களின் முன்னே தலையை காட்டக்கூடியவர்கள்..! ஆதலால், இவர்களை இந்த 'போராட்ட லிஸ்டில் எங்கே' என்று கேட்பது நமக்கு அழகல்ல..!

திராவிடர்  கழக தலைவர் கி.வீரமணி ஐயாவாவது ஏதும் போராட்டம்... எதிர்ப்பு... அறிக்கை  என ஏதேனும் அறிவித்தாரா..? இல்லை. மோடி போன்றே மற்றொரு பயங்கரவாதி ராஜபக்சேக்கு எதிராக குரல் கொடுத்தோர் எவராவது மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனரா..?

அப்புறம்... கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அகில இந்திய & மாநில கம்யுனிஸ்ட் தலைவர்கள்... மோடி பங்குபெறும் ஜெ.யின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்..! பாவம் அவர்கள்தான் என்ன செய்வார்கள்..? அவர்களிடம் கொள்கையா.. உறுதியா.. அரசியல் நேர்மையா.. மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் ஆட்சியா... இப்போது என்னதான் மிச்சம் இருக்கிறது..?
.
"  சரி...! நீ... என்னத்த பெரிசா கிழிச்சே...?"   ...என்றுதானே  கேட்கிறீர்கள்...? 
.
தனியொரு மனிதனாய்... "  நன்மையை ஏவுவது... தீமையை தடுப்பது..."   இவை இரண்டையும் களத்தில் இறங்கி செய்ய சாத்தியப்படாத நிலையில், நான் தூரமாய் இருப்பதால்... " மேற்படி விஷயங்களுக்காக போராட்டங்கள் புரிவோரை வழக்கம்போல ஆதரித்து ஒரு பதிவு போடுவோம்..."" என்று தேடித்தேடி பார்த்தால்... அட..! எல்லாருமே சைலன்ட்..! "  நீங்கள் எல்லாரும் ஏன் வழக்கத்திற்கு மாறாய் இப்போது சைலன்ட் ஆனீர்கள்..?" என்று கேட்கப்பட வேண்டியவர்களை கேட்டு... மவுனத்தை  உடைச்சது... இதுதான்... இந்த பதிவுதான்... மோடிக்கு எதிராக இப்போது நான் கிழிச்சது..!  
.

88 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...