அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Wednesday, April 20, 2011

10 தர்மம் செய்வது செல்வந்தருக்கு மட்டுமா உரித்தானது..?

 இவ்வுலகில் மனிதர்கள் அனைவரும் சிந்தனையில் வேறு பட்டவர்கள். அதனால் செயலில் வித்தியாசப்படுகிறார்கள். சிந்திக்காமல் இருப்போர் பிறரைவிட தாழ்ந்து விடுகிறார்கள். சிறந்த முறையில் மூளையை உபயோகித்து சிந்திப்பவர்கள் உயர்ந்து விடுகிறார்கள். ஆனால், அவர்களிடையே பொருளாதாரத்தில் மட்டும் ஏன் ஏற்றத்தாழ்வுகள்..? ஆக, என்னதான் உலகமக்கள் சிறந்த புத்திசாலிகளாய் பொருளாதாரத்திற்காக கடுமையாக முயன்றாலும் பலன் கிடைப்பதில் மட்டும் வேறுபாடு உள்ளதே..? அது ஏன்..? 

நன்கு படித்தவர்/உழைப்பவர்/வியாபாரம் செய்பவர் ஏழையாகவும் உள்ளார்; செல்வந்தராகவும் உள்ளார். சரியாக படிக்காதவர்/உழைக்காதவர்/வியாபாரம் செய்யாதவர் ஏழையாகவும் உள்ளார்; செல்வந்தராகவும் உள்ளார். இன்றைய ஏழை, நாளை செல்வந்தர் ஆகிறார்; இன்றைய செல்வந்தர் நாளை ஏழையாகிறார். ஆக, செல்வம் ஒரு வரைமுறையில் வருவதாக இல்லை.


ஒரு ஓட்டப்பந்தயம் நடக்கிறது. அதில் ஊர் மக்கள் நாம் அனைவருமே, வெற்றி என்ற எல்லைக்கோட்டை குறித்த நேரத்தில் அடையும் ஒரே குறிக்கோளுடன் ஓடுகிறோம். அதில் நான்/நீங்கள்/எவரோ ஒருவர், ஏதோ ஒரு சுற்றில் தடுமாறி கீழே விழுந்துவிடுகிறார். அப்போது, ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சக ஓட்டப்பந்தய வீரர் யாராவது தன் குறிக்கோளை மறந்துவிட்டு தன்னை கைகொடுத்து தூக்கிவிடுவார் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய மடத்தனம்..? ஆதலால், தாமாகவே தட்டுத்தடுமாறி எழ முயற்சிக்கிறார். ஆனால், அது முடியாமல் கீழே கிடப்பவரை மிதித்து, அவர் மீதே ஏறி ஓடுகிறார்கள் மற்றவர்கள். 


இந்நிலையில், திடீரென ஒருசில கைகள் அவரை அரவணைத்து தூக்கி நிறுத்தி, காயத்துக்கு மருந்திட்டு தொடர்ந்து ஓட உதவி, ஊக்கப்படுத்தினால் விழுந்தவருக்கு எப்படி இருக்கும்..? 

உவமானங்களுக்கெலாம் அப்பாற்பட்ட இது எவ்வளவு பெரிய அளப்பறியபணி..?

போட்டியின் குறிக்கோளை தாண்டிய... வேறு ஏதோ ஒரு வெற்றியை தன் குறிக்கோளாக நாடினால்தானே, இப்படி ஒரு தன்னலமற்ற மகத்தான உதவியை இன்னொரு வீரருக்கு செய்ய முன்வருவார்கள் அந்த சக ஒட்டப்பந்தைய வீரர்கள்..? 

மேலே சொல்லப்பட்ட அவ்வுருவகத்தில்...

குறிக்கோள்   -   செல்வம் சேர்ப்பது.
ஓட்டப்பந்தயம்   -   செல்வம் சேர்க்கும் முயற்சிக்கான ஒரு களம்.
தவறி கீழே விழுபவர்   -   அம்முயற்சியில் பின்னடைந்து ஏழை ஆகுபவர்.
உதவும் கைகள்   -   தர்மம்..!      

...எனக்கொண்டால்...

தர்மத்தின் நோக்கம்  அல்லது வேறு ஏதோ ஒரு வெற்றி    =>  இது என்ன...?

"ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்" -என்று தமிழர்களிடம் பிரபலமான சொற்றொடர் உண்டல்லாவா..? அதேதான். ஏழைகளுக்காக செலவிடல் இறைவனின் மன திருப்தியை நாடி இறைவழியில் செலவிடுவதே..!

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச்செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 2:261)

ஆக, ஒவ்வொரு முறையும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் போது, (பொருளாதாரப்போட்டியில் வீழ்ந்து கிடக்கும் தேவையுடைய மனிதர்களுக்கு தங்கள் தர்மம் மூலம் கைகொடுத்து தூக்கிவிடும்போது...)  1×7×100 =700 மடங்கு  நன்மைகளை இறைவன் நமக்கு அள்ளித்தருகிறான் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தாலே தவிர மனிதர்களால் இப்படி உதவ முடியாது அல்லவா..?  அதுமட்டுமில்லாமல், கூடவே கீழ்க்காணும் பயமும் உறுதியாக இருந்தால்...? 


எவர் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாது இருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! அந்த (இறப்புக்கு பிந்தைய மறுமை) நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக்காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) ''இதுதான் நீங்கள் உங்களுக்காக சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததை சுவைத்துப்பாருங்கள்" (என்றும் கூறப்படும்). (அல்குர்ஆன் 9:34 & 35) 
 .
ஆக, இப்படியான நம்பிக்கையும் பயமும்... மக்களில் ஏழை பணக்காரர் பேதமின்றி அனைவருக்கும் பொருந்த வேண்டும்தானே..? அதாவது, பந்தயத்தில் கீழே விழுந்தவர்களுக்கும்..? ஆம்..! தர்மம் செய்வது ஏதோ செல்வந்தர்களுக்கு மட்டும் உரியதுபோல ஒரு பொதுவான புரிதல் நம்மிடையே உள்ளது. ஆனால் அது அனைவருக்கும் உரியது சகோ..! எப்படியாம்..?
.
"தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்" என்று இறுதி இறைத்தூதர் பெருமானார் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறியபோது மக்கள், "ஒருவருக்கு தர்மம் செய்ய எதுவும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?" என்று கேட்டார்கள். அதற்கு நபி( ஸல்) அவர்கள், "அவர் தம் இரு கைகளால் (அவர்) உழைத்துத்தாமும் பயனடைவார். தர்மம் செய்(து பிறரையும் பயனடைய செய்)வார்!" என்று கூறினார்கள். அதற்கு மக்கள், "அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையென்றால் அல்லது அவர் அதைச் செய்யா(செய்ய இயலா)விட்டால் (என்ன செய்வது)?" என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் "பாதிக்கப்பட்ட தேவையுடையோருக்கு அவர் உதவட்டும்!" என்றார்கள். மக்கள், "(இதையும்) அவர் செய்ய (இயல) வில்லையென்றால்?" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அப்போது, "அவர் நற்காரியங்கள் செய்யும்படி பிறரை ஏவட்டும்!" என்றார்கள். "இதையும் அவர் செய்யாவிட்டால்?" என்று மீண்டும் கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள், "அவர் (பிறருக்கு எதுவும்) தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்" என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ் அரீ (ரலி), புஹாரி -1445 & 6022.

என்னவொரு விரிவான, அழகிய, புதிய, நல்லதொரு விளக்கத்தை  இஸ்லாம் தர்மத்திற்கு அளிக்கின்றது..!

உடல் ஊனங்களோ, பலவீனங்களோ, முதுமையோ, வறுமையோ ஒருவர் தர்மம் செய்து நன்மைகள் பெற தடையாக நிற்காது என்றும், நல்லதைச்செய்ய தன்னால் இயலவில்லை என்றாலும், பிறரை அதற்காக ஏவுதலும் உபதேசித்தலும் கூட தர்மத்தின் நன்மையை பெற்றுத்தர வல்லவை எனும் உன்னதமான நல்வழியை இஸ்லாம் சமூகத்திற்குக் கற்றுத்தருகிறது. 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒருவருக்கு எதுவுமே இல்லையென்றாலும், தன் சொல்லாலும், செயலாலும், உள்ளத்தாலும் பிறருக்கு தீங்குகள் ஏற்படுத்தாமல் விலகி இருப்பதும் கூட தர்மம் ஆகும் என்று இஸ்லாம் உபதேசிக்கிறது.

தர்மம் என்பது, 'பணத்தையும், பொருளையும் கொடுத்து உதவுவது மட்டுமே!' என்று விளங்கி வாழ்ந்து வரும் இன்றைய கால கட்டத்திற்கும் ஏற்ப, ஏறத்தாழ 1425 ஆண்டுகளுக்கும் முன்னர் மனித சமூகத்திற்கு வழி காட்ட அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதர் மூலம் இறைவனால் மிகவும் அழகான முறையில் தர்மத்தின் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நபிமொழி மூலம், சில்லறைகளை எடுத்து வறியவருக்கு இறைத்து விடுவதுதான் தர்மம் என்று பலர் கருதுவது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்பதை உணர்த்தி, மக்களது சிந்தனைகளில் இது நாள் வரை இருந்து வந்த தர்மம் குறித்த தவறான புரிதல்கள் இறைவனால் அழகாக அகற்றப்படுகின்றன.

"தர்மம் செய்வது பொருளாதாரத்தின் மூலம் செல்வந்தர்களாக இருப்பவர்கள் மட்டுமே செய்யும் காரியம் அல்ல" என்பதை இந்நபிமொழி மூலம் தெளிவாக அறியலாம். மேலும்...

“பேரீத்தம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்வதை) கொண்டாவது நரக நெருப்பில் இருந்து (உங்களை) பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்:அதீ இப்னு ஹாத்திம்(ரலி), புஹாரி -1417

ஒரேயொரு பேரித்தம் பழத்துண்டு என்பது ஒரு கீழ்மட்ட வறியவரிடம் கூட இருக்கும் அல்லவா..? அதைக்கொண்டு அவர், தன்னருகில் அதுகூட இல்லாமல் பசியோடு இருக்கும் தன் சக படுகீழ்மட்ட வறியவருக்கு தர்மம் தந்து நரக நெருப்பில் இருந்து தப்பிக்கொள்ளலாம் அல்லவா..?

பெரும்பொருள் படைத்த செல்வந்தர்கள் மட்டுமின்றி தன்னிடம் அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லாத ஒரு பரம ஏழையும் இவ்வழிகாட்டல் மூலம் தர்மம் செய்து நன்மைகளை இலகுவாகப் பெற முடியும் அல்லவா..?

உங்களில் ஒருவருக்கு மரணம் வரும் முன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்), ''என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான(நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே"" என்று கூறுவான். ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்)பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான். (அல் குர்ஆன் - 63 : 10 & 11)

இது போன்ற தர்மச்செயல்களின் நற்பலன்கள், மறுமையில் மட்டுமின்றி இம்மை வாழ்க்கைக்கும் பயனுள்ளது என்பதை மக்கள் அனைவரும் உணர முற்பட்டால், உண்மையிலேயே மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கையின் நிலை மிகவும் சிறப்பானதாக மாறிவிடும். மறுமையில் வெற்றியும் பெற வழி பிறக்கும். எல்லாம் வல்ல இப்பிரபஞ்சத்திற்கான ஏக இறைவனாகிய அல்லாஹ் நமக்கு அதற்காக உதவிகள் மற்றும் நல்லருள் புரிய எந்நேரமும் அயராமல் பிராத்திப்போமாக. நமக்கு கிடைத்த செல்வங்களின் மூலம் தர்மம் செய்து ஈருலகிலும் நாம் வெற்றி பெற்று மற்றவர்களையும் வெற்றிபெறச்செய்ய ஒரு கருவியாக இருப்போமாக..! ஆமீன்.
.
டிஸ்கி  : நாம் இப்பதிவில் கண்டவை அனைவருக்குமான ஸதகா எனும் பொதுவான தர்மம் மட்டுமே. செல்வந்தர்களுக்கு உரிய ஜகாத் பற்றியும், எந்த முறையில் அது தற்போது வழங்கப்பட்டால் ஏழைகளின் வறுமை ஒழியும் எனவும், அதன் மூலம் இஸ்லாம் உலகுக்கு காட்டித்தரும் பொருளாதாரம் பற்றியும் இறைநாடினால் அடுத்த பதிவில் காண்போம்.

------------------------------------------------------------------------------------------------------------------------
இப்பதிவின் இறுதிப்பகுதி : வறுமையை ஒழித்திடுமா ஜகாத்..?
------------------------------------------------------------------------------------------------------------------------

10 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...