அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Friday, October 5, 2012

12 மானிட வெறி

இனவெறி-மதவெறி-மொழிவெறி-தேசவெறி-சாதிவெறி-கட்சிவெறி என்று  மனிதன் சக மனிதனை கொல்லும் செய்திகள் ஒரு எக்ஸ்ட்ரீம்மில் இருந்தாலும்... இன்னொரு புறம், ஒரு மிருகத்துக்காக தனது சொந்த மகனையே அநியாயமாக கொலை செய்த மனுநீதி சோழன் நடித்த நீதி வெறிக்கதைகளும் இன்னொரு எக்ஸ்ட்ரீம்மில் உலா வருகின்றன..! இரண்டுமே தவறானவையே..! நிலைமை இப்படி இருக்க, 'சிறு எறும்புக்கும் கூட நாம் தீங்கு நினைக்காமல், மட்டன் பிரியாணி சாப்பிடுவது எப்படி' என்றுதான் நாம் சிந்திக்க வேண்டும்.

முன்பு ஒரு முறை நான் எனது நண்பன் வீட்டு தோட்டத்தில் நீர்பாய்ச்சிக்கொண்டு இருந்தேன். நண்பன் குடும்பம் முழுக்க எனக்கு சில ஆண்டு பழக்கம். பள்ளியிலிருந்தே நட்பு. நன்கு அறிமுகமான வீடு. 
.

அன்று நண்பனின் உறவினர்கள் வந்து இருந்தனர். அதில் ஒரு சுட்டிக்கார துவக்கப்பள்ளி மாணவன் கையில் ஒரு லென்ஸ் வைத்து இருந்தான். "அண்ணே... இதிலே நெருப்பு வருமாமே..? நெசமாவாண்ணே..?" என்று கேட்க... நான் அறிந்த எனது இயற்பியல் அறிவை அவனுக்கு ஊட்ட வேண்டிய கடமையை உணர்ந்தவனாக........................

'சூரிய ஒளியை குவித்தால், அதன் ஒளிக்குவிமையம் வெப்பமடைந்து, தொடர்ந்து மேலும் அதிகரித்து, அங்கே நெருப்பு உண்டாகும்' என்பதை விளக்க அவனின் அந்த குவி ஆடியை வைத்து, அங்கே கிடந்த ஒரு காகிததத்தை எரித்துக்காட்டி... மிக செல்லமாக, தோட்டத்தில் பாதுகாப்பான ஓரிடத்தில் வைத்து, குவிதூரம், குவிப்புலம் எல்லாம் விளக்கிக்கொண்டு இருந்தேன்.

அப்போது, பக்கத்தில் ஒரு சிறு எறும்பு புற்று இருந்தது. "அந்த பக்கமாக போக வேண்டாம் கண்ணு, இந்த பக்கம் இந்த தேங்காய் நாரை வைத்து நீ முயற்சி செய்மா ராஜா' என்று சொல்லிவிட்டு... நான் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் கவனம் விட்டேன்.

சற்று நேரம் கழித்து திரும்பி பார்த்தால்... அவன், லென்சை வைத்து ஒவ்வொரு எறும்பாக சுட்டு பொசுக்கிக்கொண்டு இருந்தான்..! எனக்கு வந்ததே கோபம்..!

"அடப்பாவி... ஏதும் அறியாத எளிய அப்பாவி உயிர்களை, இப்படி அநியாயமா சுட்டுப்பொசுக்கறியே"ன்னு, கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் வாட்டரிங் பைப் மூலம், வந்த சீருக்கு ஓங்கி ஒரே ஒரு அடியை முதுகில் போட்டேன்..!

இவ்வளவுக்கும் அவன் என் நண்பன் வீட்டு விருந்தினன். சின்ன பையன். அடித்து இருக்கவே கூடாதுதான். எடுத்து சொல்லி புரியவைத்து இருந்திருக்கலாம்தான். என் தப்புத்தான். உணர்ச்சி அறிவை முந்தியது. வலி தாங்காமல் கதறிக்கொண்டு வீட்டுக்குள் ஓடினான் சிறுவன்.

நான், அங்கே பொசுங்கி கருகி செத்துக்கிடந்த எறும்புகளின் பிணங்களை கண்டு மனம் கலங்கினேன். ஒவ்வொரு கருகிய எறும்பையும் சுற்றி சிவப்பான எறும்புகள் மேலும் சிவப்பாக சுற்றி சுற்றி வந்தன. அழுகின்றனவோ..? ஏற்கனவே, புற்று கலைந்து விட்டதால்... அங்கும் இங்கும் வீடிழந்து திரிந்த ஓரிரு நெருப்பு எறும்புகள் என் காலை 'நறுக்' என்று கடித்தன. ஏனோ, அது அவர்களின் அன்றைய சமூக வாழ்வு அநியாயமாக சீர்குலைக்கப்பட காரணமாக இருந்தவனான, எனக்கான எதிர்வினை தண்டனை போன்றும்... அது அவர்களின் கோப வடிகால் போலவும், எனக்கு இந்த கடி வேணும் போலவும், ஏற்றுக்கொள்ள சுகமாகவே இருந்தது.

அதேசமயம், அழுது ஊரைக்கூட்டிய அந்த... சிறுவனுடன் (அதற்குள், சட்டையை வேறு கழட்டி இருந்தான்) மொத்த நண்பன் குடும்பமும் ஒன்று சேர்ந்து தோட்டம் வந்து என்னை விசாரித்தபோது... நடந்ததை விளக்கி, மன்னிப்பு கோரினேன்..!

"போயும் போயும் ஒரு பூச்சிப்பொட்டு இனத்துக்காக பரிஞ்சிக்கிட்டு வந்து... அதுக்காக எட்டு வயசு பச்சை மானிட  மண்ணை இப்படி குழாயப்போட்டு அடிக்க எப்படி மனசு வந்துச்சு உனக்கு..? அதுவும் எங்க வீட்டு விருந்தாளிங்க பையன் வேற..! முதுகிலே அச்சு பதிஞ்சிருச்சு பாரு. மிருகத்தை அடிக்கிற மாதிரி அடிச்சிருக்கே..? இதுதான் நீ படிப்பு சொல்லித்தருகிற லட்சணமாடா..?" என்று என்னிடம் கேட்டுவிட்டு... நண்பனிடம், "நல்ல ஃபிரண்டை புடிச்சேடா நீ... ச்சே..." என்று கோப வார்த்தைகள் கக்கிவிட்டு, என்னை விரோதமாக பார்த்து, "நல்ல பையன்தான்... ஆனா, இன்னிக்கு என்னவோ ஆச்சு இவனுக்கு..." என்று பேசிக்கொண்டு கலைந்து சென்றனர்..! 

"ஏண்டா இப்டிலாம் வெறித்தனமா நடந்துக்கிறே...? மானம் போச்சுடா மாப்ள. ஆடு கோழி எல்லாம் கொன்னுதானே சாப்பிடுறோம்... எறும்புக்கு போயி ஏண்டா இப்படி..? அந்த பையன் உங்கிட்ட ஏதாவது வால்த்தனம் பண்ணினானா..?"...என்று கேட்டான் என் நண்பன். இவன் வேற...! 

"மாப்ள, அது பணம் தந்து வாங்கி, இறைச்சியாக நாம் சாப்பிட, அதன் மூலம் சத்து பெற்று உயிர்வாழ இறைவன் அனுமதி தந்ததாலேதான் அறுக்கிறோம். அதுவும் இறைவனின் பெயராலே..! அதில், கூட உயிரினம் நோயில்லாமல் இருக்கணும், அது நல்லா சாப்பிட்டு தெம்பா இருக்கணும், அறுகத்தி செமை கூர்மயா இருக்கணும், கத்தியை கூர் தீட்டும்போது அது கண்ணில் படுற மாதிரி கூர் தீட்ட கூடாது, அறுக்கும்போது வலி தெரியாமல் அறுக்கணும்,  ஒரே அறுப்புத்தான் ஆனால், தலையை துண்டாக்கிட கூடாது, நரம்பை மட்டும் கட் பண்ணனும்.... என்று ஏகப்பட்ட ரூல்ஸ் இதிலே இருக்கே மாப்ள... ஆனா, இவன் செஞ்சது எவ்ளோ பாவமான காரியம்..? மதியம் உண்ணவா 'எறும்பு பொறியல்' பண்ணினான்..? அதனால் யாருக்கு என்ன பயன்..?"

ம்ம்ம்ம்.... என்னா சொன்னாங்க உங்க வீட்டிலே...?
அது 'பூச்சி இனமாம்'..! 
நாம் 'மனித இனமாம்'..! 

இதுவும் ஆதிக்க மனப்பாங்கான ஓர் இனவெறியே..! 
இது..... 'மனித நேயம் மறைந்த, மானிட வெறி'டா..!
...என்றேன்.
கருகி செத்துப்போன ஏதுமறியா அப்பாவி எறும்புகளை பார்த்து எனக்கு இன்னும் மனது வலித்துக் கொண்டு தானிருந்தது..!

"ஒருவர் தன் சமுதாயத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என்று முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "இல்லை..! தனது சமுதாயம் (என்ற காரணத்தால் அவர்கள்) புரியும் கொடுமைகளுக்கு துணைபோவதுதான் இனவாதம்(இனவெறி) ஆகும்" என்றார்கள். (நூல்: மிஸ்காத்) 


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பெண்ணொருத்தி ஒரு பூனை விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச்சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் - 'நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத்தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை" என்று அல்லாஹ் கூறினான்' (நூல் புஹாரி-2365)

இறைவனே  பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப்படைத்தான். (குர்ஆன்2:29)

அநீதியான விஷயத்தில் எவன் தன் சமுதாயத்திற்கு உதவுகிறானோ, அவன் கிணற்றில் விழுந்து கொண்டு இருக்கும் ஒட்டகத்தின் வாலை பிடித்துக்கொண்டிருப்பவன் போல் ஆவான். (அதனுடன் சேர்ந்து அவனும் உள்ளே விழுவான்) (நூல் : அபூதாவூத்)

12 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...