அளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..!!
இப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ..! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..!!

Sunday, September 30, 2012

29 'சீனியர் சிட்டிசன்' : அரசின் சலுகைகள்


சென்ற முறை ஊரில் BSNL அலுவலகம் சென்று இணைய இணைப்புக்காக நான் மனுச்செய்யும் பொழுது... 'எந்த Internet Package சிறந்தது' என்று தேர்ந்தெடுக்க, அலுவலர் தந்த ஒரு குறிப்பேட்டை பார்த்தபோது... அதன் அடியில் இருந்த கடைசி வரி... "ஒய்வு பெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்கள் எனில் 20% மாதாந்திர கட்டணத்தில் சலுகை உண்டு" என்று போட்டிருப்பதை பார்த்தேன்..! அப்புறம் என்ன..? எனது தந்தையை மனுச்செய்ய வைத்து, சலுகையுடன் வீட்டுக்கு இணைப்பு வாங்கிவிட்டேன்..! :-))
---------------------------------------------------------------------
பிற்சேர்க்கை :
1-5-2013 முதல்... 
இச்சலுகையை BSNL நிறுவனம்  10% குறைத்து விட்டது. 
எனவே... என் இணையக்கட்டணம் 10% கூடி விட்டது. :-((
---------------------------------------------------------------------
இப்படியான பல சலுகைகளை மத்திய-மாநில அரசுகள் பல இடங்களில் வழங்குகின்றன. அது ஏனோ நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இதில் போதிய விழிப்புணர்வு இல்லை. கூடவே, பயன்படுத்திக்கொள்ள தேவையற்ற தயக்கம். இவற்றை தெரியப்படுத்தி சலுகையை பெற தூண்டவே இந்த பதிவு..!
.

முதலில்.... 'Senior Citizens' * 'மூத்த குடிமக்கள்' எனப்படுவோர் யார்..?

58 வயது மற்றும் அதற்கு மேலான வயதுடைய இந்திய குடிமக்களுக்கு இப்பெயர் பொருந்தும். இதனால்... இவர்களுக்கு என்னன்ன சிறப்பு நன்மைகள், சலுகைகள் மற்றும் இட ஓதுக்கீடு போன்றவற்றை இந்திய - தமிழக அரசுகள் செய்துள்ளன என்பது பற்றி, இங்கே உங்கள் பார்வைக்கு தயாராக, நான் அறிந்த சிலவற்றை வைத்து கோர்க்கப்பட்ட ஒரு சிறிய தொகுப்பு இது..!

இதில், நான் அறியாமல் தவறான தகவல்கள் அல்லது அரசின் தற்போதைய மாற்றங்கள் அல்லது புதிய சேர்பித்தல்கள் இருப்பின் மாற்றுவதற்காக, அவசியம் பின்னூட்டத்தில் எனக்கு தெரியப்படுத்துங்கள் சகோஸ்.

(1) மூத்த குடிமக்கள் தொடர்பான நீதிமன்ற வழக்குகள்

இந்திய மூத்த குடிமக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அவை துரிதமாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு... அவ்வழக்கு அகற்றலை உறுதிப்படுத்த அனைத்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் தலைமை நீதிபதிகளுக்கு இந்திய தலைமை நீதிபதி ஆலோசனை கூறியுள்ளார். [இந்திய அரசு கடிதம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் (SD பிரிவு) அமைச்சகம், புது தில்லி, எஃப் எண் 03.11.1999 தேதியிட்ட 20-76/99-SD]

(2) தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI)

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மூத்த குடிமக்கள் தாக்கல் செய்தால்... அம்முறையீடுகள் மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு படி, அதற்கு மட்டும் மற்றவர்களின் தாக்கலை விட உயர் முன்னுரிமை அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

(3) உடல்நலம்

மூத்த குடிமக்களுக்கான இவர்கள் எந்த மருத்துவ பரிசோதனை ஆனாலும் மருத்துவமனையின் வருகை டோக்கன் நம்பர் வரிசை இன்றி நேரடியாக மருத்துவரை அணுக முடியும். இதை ஏனோ பல தனியார் மருத்துவமனைகள் பின்பற்றுவதில்லை. ஆனால், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் மூத்த குடிமக்களுக்கு என தனி வரிசைகளில் வர இடம் உள்ளது. தில்லி அரசு தில்லியில், இவர்களுக்கென தனியாக... 'மூத்த குடிமக்கள் சிறப்பு மருத்துவமனை ஒன்றை இயக்குகிறது. ஆனால், மருத்துவமனைகளில் கட்டண சலுகை இருப்பதாக நான் அறியவில்லை. ஏனெனில்... பொதுவாக வயதானால்தானே பல நோய்கள் வருகின்றன..! தனியார் மருத்துவமனைகளின் வியாபார இலாபமே வயதான நோயாளிகளை வைத்துத்தானே..! அப்புறம் எப்படி பில்லில் சலுகை என்று கையை வைப்பது..?

(4) வரி-சேமிப்பு

58 இலோ... அல்லது அதற்கு முன்பேயோ வாலண்டரி ரிடையர்மென்ட் தந்திருந்தாலும் கூட... வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ள தகுதி வயதை (65 வருடங்கள்) அடைந்தால்... மூத்த குடிமக்களுக்கு என, அவர்களின் பென்ஷன் போக்குவரத்தில் வருமான வரி சிறப்புத்தள்ளுபடி உண்டு. 

பொதுவாக... வயது குறைந்து இருந்தால் மட்டுமே இன்ஷ்யூரன்ஸ், சேமிப்பு திட்டம் ஆகிய இதிலெல்லாம் சேர்த்துக்கொள்வர்கள். ஆனால், வருமான வரி சட்டம் பிரிவு 80 C, 1961 ன் படி, 01.04.2007 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட சட்டம் சொல்வது யாதெனில்.... அஞ்சல் அலுவலகம் வைப்பு கணக்கு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படுவது 5 ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாம்.

(5) வங்கி

அரசு பொது துறை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அதன் பெரிய நெட்வொர்க் மூலம் இயங்கும் சில சேமிப்பு திட்டங்கள் ஆகியவற்றில் 'மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்' என்ற பெயரில்... மூத்த குடிமக்களுக்கு ஆண்டு தோறும் தரப்படும் வட்டி விகிதம் மற்றவர்களைவிட அதிகமாகவே தரப்படுகிறது. 

பல வங்கிகள்... குறிப்பாக... பாரத ஸ்டேட் வங்கி, பின்வரும் வாடிக்கையாளர் சேவைகளில்... மூத்த குடிமக்கள் எனில்... பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தில்...  50% மட்டுமே வசூலிக்கிறது.

i) டூப்ளிகேட் பாஸ்புக்/ அறிக்கை பெறுதல்,
ii) காசோலை புத்தகங்கள் வழங்குதல்,
iii) வங்கிக்கணக்கில் ஆகக்குறைந்தபட்ச இருப்பு அல்லாத பராமரிப்புக்கு எதிராக வசூலிக்கப்படும் அபராத கட்டணங்கள்,
iv) சமநிலை சான்றிதழ் வழங்குதல்,
v) கையொப்ப சரிபார்த்தல்,... போன்றன... 'சீனியர் சிடிசன்' எனில் பாதி கட்டணம் தான்..!

மேலும் வேறு என்னவெல்லாம் சிறப்பு வசதிகள், சலுகைகள் மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியம்  பெறுவோருக்கு உள்ளன என உங்கள் அருகாமையில் உள்ள வங்கிக்கு சென்று சரிபார்க்கவும்.

(6) தொலைத்தொடர்பு

ஒரு புதிய தொலைபேசி இணைப்பு விண்ணப்பிக்கும் 58 வயது ஒய்வு பெற்ற மற்றும் மூத்த குடிமக்களுக்கு பல சிறப்பு ஏற்பாடுகளை தொலைத்தொடர்பு துறை செய்துள்ளது. விண்ணப்பத்தில்... மூத்த குடிமக்கள் எனில் தனி முன்னுரிமை வகை ஓதுக்கீடு செய்யப்படும். ஒரு மூத்த குடிமக்கள் புகார் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கப்படும். சட்டம் போட்டுள்ளார்கள். அதன்படி நடக்கிறார்களா என்றுதான் தெரியவில்லை. தக்க சான்றிதழ் தனது மாதாந்திர கட்டணத்தில் சலுகை தரப்படுகிறது. (20% தள்ளுபடி வாங்கிட்டோம்ல...)

(7) இந்திய ரயில்வே

58 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரயிலில் எங்கே சென்றாலும்... டிக்கட்டில் 30% தள்ளுபடி உண்டு. அதுவே... அவர் மூத்த குடிமகள் எனில்... ( பெண் எனில் ) ரயில் டிக்கெட்டில் 50% சலுகை உண்டு..! இந்த தள்ளுபடியானது... சதாப்தி... ராஜதானி உட்பட எல்லா ரயில்களிலும் உண்டு. 

தயவுசெய்து டிக்கட் எடுக்கும் பொழுதும், பயணம் செய்யும் பொழுதும் அனைத்து மூத்த குடிமக்களும், தங்கள் வயது குறிப்பிடப்பட்டுள்ள அரசின் ஒரு புகைப்பட அடையாள அட்டையை உடன் அவசியம் எடுத்து செல்லுங்கள். சலுகை பெறுங்கள் சீனியர் சிடிசன் சகோஸ்...! 

அதுமட்டுமா... டிக்கெட் வாங்குவதற்கு, முன்பதிவு அல்லது ரத்து செய்வதற்கு என... அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள மூத்த குடிமக்களுக்கென தனி கவுண்டர்கள் / வரிசைகள் உள்ளன. ஒரே ஒரு கவுண்டர் வரிசை என்றால்... மூத்த குடிமக்கள் வரிசையில் நிற்க வேண்டிய ஆவசியம் இல்லை..! நேரே கவுண்டர் சென்று சான்றிதழ் காட்டி டிக்கட் வாங்கிக்கொண்டு போய்கொண்டே இருக்க வேண்டியதுதான். 

இந்த சலுகையை எல்லாம் பெற்று பயன்பெறுங்கள் சீனியர் சிடிசன் சகோஸ். அதேநேரம், வரிசையில் நிற்கும் மற்றவர்கள் இவர்களை தங்களுக்கான சலுகையை பெற அனுமதியுங்கள் சகோஸ். மாறாக........ " யோவ் பெரிசு...! என்ன... நீ பாட்டுக்கு  நேரா கவுண்டருக்கு போறே...? வரிசைலே நிக்கிறவன்லாம் மனுஷனா தெரியலையா...? கண்ணாடியை போட்டுட்டு இந்தப்பக்கமும் கொஞ்சம் பாரு...!" ........என்றெல்லாம் தர்மப்படி மட்டுமல்ல... சட்டப்படியும் சக ஜூனியர் சிடிசன்ஸ்... வாயைத்திறக்கக்கூடாது..!!! அறியவும்.

மேலும், மூத்த குடிமக்கள் வசதிக்காக அனைத்து முக்கிய சந்திப்புகள், மாவட்ட தலைமையகம் மற்றும் பிற முக்கியமான ரயில் நிலையங்களில் எல்லாம் சக்கர நாற்காலிகள் எல்லாம் உள்ளன. பயன்பெறுங்கள்.

(8) ஏர்லைன்ஸ்

மூத்த குடிமக்கள் எனில், 'சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு' இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சிக்கன வகுப்பு கட்டணத்தில் 50% தள்ளுபடி பெரும் உரிமை உண்டு.

இதுவே, ஏர் இந்தியா என்றால்.... 45% தள்ளுபடி வழங்குகிறது. (வயது வரம்பு : ஆண்கள் 65 + & பெண்கள் 63 + ).

இந்தியாவில் செயல்படும் மற்ற ஏர்லைன்ஸ்களும் மூத்த குடிமக்களுக்கு தள்ளுபடி வழங்கும். அதுபற்றி நீங்கள் உங்கள் பயண திட்டத்தை ஏஜண்டிடம் கூறும்போது நினைவூட்டுங்கள்.

(9)  மாநில சாலை போக்குவரத்து

மாநில சாலை போக்குவரத்து துறை தமது அனைத்து பேருந்துகளிலும் முன் வரிசையில் 2 இருக்கைகள் மூத்த குடிமக்கள் அமர... 'முதியோர் இருக்கை' மற்றும் 'ஊனமுற்றோருக்கான இருக்கை' என்று இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், முதியோர் இருக்கை & ஊனமுற்றவர் இருக்கை என்பது 'மாற்றுத்திறனாளிகளின் இருக்கை' என்று பெயர் மாற்றம் பெற்றதேயன்றி... இதெல்லாம் சரிவர நடைமுறையில் நம்மால் கடைப்பிடிக்கப் படுவதுமில்லை. நான் அந்த சீட்டுகளில் அமரவே மாட்டேன். இப்போதெல்லாம் அப்படி எழுதப்பட்டு இருப்பதையும் தனியார் பேருந்துகளில் காண முடியவில்லை.

தமிழகம்  உட்பட பல மாநில அரசுகள் மூத்த குடிமக்களுக்கு என ரயில்வே போலவே மாநில அரசுப்பேருந்திலும் முன்பதிவில் கட்டண சலுகைகள் தருகின்றன. முன்பதிவின் பொழுது விசாரித்து பயன்பெறுங்கள் சகோஸ்.

(10) சட்டம் & சீர்திருத்தம்

எங்கெல்லாம்... "சீனியர் சிட்டிசன்" என்ற சலுகையை சட்டப்படி பெற விரும்புகிறீர்களோ, அங்கெல்லாம் உங்கள் கையில் இருக்க வேண்டியது மத்திய/மாநில அரசின் உங்கள் ஃபோட்டோ ஒட்டிய ஓர் ஐடி கார்டு. அதில் முக்கியமாக உங்கள் date of birth இருந்தாக வேண்டும்..!

இந்திய அரசால், சமீபத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலனுக்காக ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் இவர்களுக்கான பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் அதற்குரிய ஏற்பாடுகளை உருவாக்குகிறது.

29 ...பின்னூட்டங்கள்..:

பின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..!

தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...